மலைப் பொழிவு
 

போதனைகள்!
அவை வாழ்வின் சுருக்கங்களைச்
சலவை செய்யும்
சாமர்த்திய சாலிகள்.

வாழ்வுக்கான போதனைகள்
மனசை வளமாக்கும்,
தடுமாற்றம் விடுத்து
தடம் மாற்றச் சொல்லும்.

இயேசு போதித்தார்.
அன்றாட வாழ்க்கையை
அலசிப் பிழியும் போதனைகள்.

கழுத்தறுக்கும்
ஆயுதப் போதனைகளல்ல
அழுக்கறுக்கும்
ஆயத்தப் போதனைகள்.

o

மலை மேல் ஒரு நாள்
மனுமகன் போதித்தார்.
அது
சட்டங்கள் மேல்
ஓர் எந்திரக்கல்லாய் அமர்ந்தது.
தாழ்வு மன இதயங்களை
இழுத்து நிமிர்த்தியது.
சோர்வுற்ற சமுதாயத்துக்கு
புத்துணர்வுத் தைலம் பூசியது.

அந்தப் போதனை
இது தான்.

o

எளிய மனம் கொண்டவர்கள்
பேறுபெற்றோர்
விண்ணரசு அவர்களதே.

துயருறுவோர்
பேறுபெற்றோர்
ஆறுதல் அவர்களுக்கானதே.

சாந்தமுள்ளோர்
பேறுபெற்றோர்,
மண்ணுலகு அத்தகைய மனிதருக்கே.

நீதி யின் மேல்
பசியும் தாகமும் கொண்டோ ர்
பேறுபெற்றோர்,
நிறைவு அவர்களுக்கான வரம்.

இரக்கம் கொள்வோர்
பேறுபெற்றோர்
இரக்கம் பெறுவோர் அவரே.

தூய உள்ளத்தோர்
பேறுபெற்றோர்,
கடவுளைக் காணும்
கண்கள் அவர்களதே.

சமாதானம் விதைப்போர்
பேறுபெற்றோர்,
கடவுளின் குழந்தைகள்
சமாதானத்தின் சந்ததிகளே.

நீதிக்காய் வதைக்கப்படுவோர்
பேறுபெற்றோர்
விண்ணரசு வாழ்க்கை
அவர்களுக்காய் ஆயத்தமானதே.

ஆண்டவர் பெயருக்காய்
அவமதிக்கப் பட்டால்
ஆனந்தப்படுங்கள்.
வானக வாழ்வில்
செல்வத்தின் அடர்த்தி அதிகமாகும்.

மனிதநேயத்தின்
மறைந்தபகுதிகளை
திறந்து வைத்து,
உறவின் உறைந்த பகுதிகளை
உருக வைத்தது
இறைமகனின் உயிர் வார்த்தைகள்.

மலைப்போதனையில்
மலைத்துப் போனது கூட்டம்.
இயேசுவை
இதய மலைகளில்
இருத்திச் சென்றது.
 

உப்பாய் இரு, தப்பாய் இராதே

 உன் ஆண்டவரை
நீ
துளியளவும் வெளியின்றி
தூயநேசத்தில் துதி.

உன்மேல் உனக்கான
உள் அன்பை
அயலானுக்கும் அளி.

o

நீ
உலகின் உப்பு.
சாரமற்ற உப்பு சாலைக்குச் சொந்தம்.
சமையலுக்கு அது
சாத்தியப்படாது.

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

உப்பாய் இரு,
சாலைக்கு அல்ல
சாப்பாட்டிற்கு.

 ஒளியாய் இரு, ஒளியாதிரு
 

நீ,
உலகிற்கான ஒளி.

விளக்கின் பணி
மரக்காலின் கீழ் மறைந்து கிடப்பதல்ல
விளக்குத் தண்டின்
தலையில் அமர்ந்து
வெளிச்சத் திசைகளை
விளக்கி வைப்பது.

சூரியன் பூமிக்குள்
புதையுண்டு கிடந்தால்
யாருக்கேனும் பயனுண்டோ  ?

கலங்கரை விளக்கம்
பக்கவாட்டில் படுத்துக் கிடந்தால்
பயணிகளுக்கேது பயன் ?

மலைமேல் உள்ள ஊர்
மறைவாய் இருப்பதில்லையே !
சிகரத்தை யாரும்
திரைகட்டி மறைப்பதில்லையே,

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

உன் ஒளியும்
ஒளிக்கப்படவேண்டாம்.
தயக்கங்களை எல்லாம்
விலக்கிவை,
உள்ளுக்குள் உன்னை நீ
துலக்கிவை.
 

பாதைக்கான சில போதனைகள்
 

நீ,
கட்டளைகளைக் கடைபிடி,
துருப்பிடித்த இதயங்களின்
ஓரங்களிலும் கரம் தொடு.

கட்டளைகளால்
மனதின் துரு களை.
பூமியில் ஒழுக்கத்தில் வாழ்பவன்
வான் வீட்டுக்கு உரியவன்
அங்கே
பெரியவனாய் பவனி வருவான்.

o

கொலை செய்வது
மட்டுமல்ல,
சினம் கொள்வதே
தண்டனைக்கான சின்னம் தான்.

o

தன்னுயிரை கொலுவிலேற்றி
அயலானைக்
கழுவிலேற்றாதே.

0

ஒழுக்கமான மனைவியை
விவாகரத்து செய்வது
விபச்சாரக் குற்றம்.

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே.

o

கண்களே உன்
உடலுக்கான விளக்கு.
உன் கண்வாசல் அடைந்துவிட்டால்
உடல் முழுதும்
இருட்டுக்குள் இடம் பெயரும்
ஒளி வர வழிசெய்.

O

கவலைகளை
களஞ்சியத்தில் சேர்ப்போரே,
கவலைக் குவியல்களால்
ஆயுளில் அரை மணி நேரம்
அதிகரிக்க இயலுமா ?

பின் ஏன்
கவலைகளோடு
கை குலுக்குகிறீர்கள் ?
மகிழ்ச்சிக்கு மட்டுமே மாலையிடுங்கள்.

o

பன்றிகளுக்கிடையில்
முத்துக்களை இடவேண்டாம்.
அவை
சகதியில் தான் சங்கமிக்கும்.
சகதி கலந்த சந்தனம்
பின்
சுய முகம் காட்டுவதில்லை.
o

முள்ளில் மட்டுமே
நீ
முதலீடு செய்தால்
பூக்கள் உனக்காய் பூத்திருப்பதுமில்லை,
காய்கள் உனக்காய்
காய்த்திருப்பதுமில்லை.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.
பயணங்கள் இலகுவானால்
இலக்கில் வேதனை வரவேற்கும்.
பயணங்கள் வலி தந்தால்
இலக்கில் இன்பம் வீற்றிருக்கும்.

o

சட்டங்களின் ஆகளுக்குள்
மனிதாபிமானம் மடிய வேண்டாம்.
மனிதத்துக்காய்,
காதறுந்து போன உங்கள்
சட்டங்களை சரிசெய்யுங்கள்.

இயேசுவின் அறிவுரைகள்
அளவில் சிறியதாய் தெரிந்தன.
பாதிப்பில்
பெரியதாய் விரிந்தன.

 
சினம் அழிவின் சின்னம்
 

கொலை செய்வது மட்டுமே
பாவம் அல்ல,
சினம் கொள்வதே
பாவத்தின் சின்னம் தான்.

சகோதரனைத் திட்டுபவனுக்கு
தீர்ப்பு காத்திருக்கும்,
அன்பின் மொட்டுகளில் மட்டுமே
உயிர் பூ பூத்திருக்கும்.

யாரோடேனும்
பகைகொண்டிருந்தால்
பீடம் வந்து காணிக்கை செய்யாதே.
சகோதரனோடு
சமாதானம் தான் முதல் பணி
அதன்பின்
கடவுளுக்கு காணிக்கை அளி.

.

ஆண்டவரே ஆண்டவரே
என்றழைக்கும்,
உதட்டுப் பிரார்த்தனைகளை விடுத்து,
செயல்களைப் பிரார்த்தனைகளாய்
உடுத்து.

o

எதிரிகளாய் யாரையும்
எண்ணுதல் தவிர்,
சமாதான சுவாசமே
விண்ணுலக உயிர்.

எதிரிகள்
எண்க்கை குறைந்தால்.
சமாதான மழையில்
நனைந்து நிறைவாய்.

 

விசுவாசமே சுவாசம்

 

நம்பிக்கையை குறித்து
இயேசு
இடைவிடாமல் போதித்தார்.

நம்பிக்கையே
செயல்களின் மையம்.

விசுவாசத்தோடு கட்டளையிட்டால்
மலையும் உருண்டு
கடலில் விழும்.
மரமும் பெயர்ந்து
இடம் மாறி நிற்கும்.

நம்புங்கள்
அதுவே வாழ்வுக்கான
நெம்புகோல் என்பதே
இறைமகன் போதனை.
0

தொடர் முயற்சியின்
தோள்களுக்கே
மரியாதையின் மாலைகள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்,
தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கண்டடைவீர்கள்.

மீட்டாமல்
வீணையில் சுரமில்லை.
தவமில்லாமல்
தரப்படும் வரமுமில்லை.

உங்கள் செல்லப்பிள்ளை
பசி தீர்க்க,
கற்கள் தரும் தகப்பனில்லை.
மீன் கேட்டால்
பாம்பு தரும் பெற்றோருமில்லை.
உன் தந்தையே
இப்படியென்றால்
உலகத் தந்தை எப்படி இருப்பார்
என்பதை உணர்.

 
தவறுக்கானதை உதறு

 

தவறு செய்யத் தூண்டும்
விழிகளோடு நீ
அழிவிற்கு ஆளாவதை விட
குருடனாய்
வாழ்வுக்குள் வருவதே சிறந்தது.

பாவம் செய்யும் பாதங்களோடு
எரி நரகத்தில்
எறியப்படுவதை விட,
முடவனாய் நீ
மனுமகனிடம் வருதலே மாண்பு.

கயமை செய்யும் கைகளுடன்
நரகத்தில் நகர்வதை விட
கையில்லாமல் நீ
விண்ணுலகம் வருவதே
விண்ணவனின் விருப்பம்.

எனவே,
நெருடலானவற்றை விலக்கு
விண்ணகமே உன் இலக்கு.
 

அழியாச் செல்வம்

 

விண்ணுலகில் செல்வம்
சேமியுங்கள்,
உங்கள்
நற்செயல்களின் பொற்குவியகளால்.
மண்ணக செல்வங்களை
மனதில் குவிக்க வேண்டாம்,
களஞ்சியங்களின் கதவுகளில்
இதயங்களை தொங்கவிட வேண்டாம்.

மண்ணுலக செல்வங்கள்
திருடனால் திட்டமிட்டு
திருடப்படலாம்,
பூச்சிகளால் தானியங்கள்
தகர்க்கப் படலாம்.

விண்ணுலக செல்வங்களை சேகரி
உன் தினசரி வாழ்வின்
நற்செயல்களின் நிழலில்.

செயல்களின் செல்வங்களே
பூச்சிகளால் அரிக்கப்படாமல்
பூஜிக்கப் படும்.

 

ஒன்றில் இரு, ஒன்றித்திரு

 

இரு எஜமானர்க்கு
ஒருவன் ஊழியம் செய்யலாகாது.
ஒரு கத்தி
இரு உறைக்கு ஏற்புடையதல்ல.

ஒப்பீட்டுத் தராசுகளால்
ஒருவனோடு உறவாடி,
இன்னொருவன் வெறுப்பை
சத்தமில்லாமல் அது சம்பாதித்துவிடும்.

கடவுளுக்குரிய செயல்களும்
மனிதருக்குரிய செயல்களும்
உன் முன் இருக்கும்
இரண்டு எஜமானர்கள்.
துலங்கிய மனசோடு தேர்ந்தெடு
ஒன்றை மட்டும்.

 

பறவைகளுக்குப் பட்டினி இல்லை.

 
உணவுப் போராட்டத்துக்காய்
உடைவாளை உருவாதீர்.
உனக்கானது உனக்களிக்கப்படும்.
கவலைகளை கவிழ்த்துவிட்டு
கடமைகளை நிமிர்த்து.

சிறகுலர்த்திப்
பறக்கும் சிட்டுகள்,
அவை எந்த மருத நிலத்திலும்
நெல்மணி விதைப்பதில்லை,
எந்த அரிவாள் முனைகளையும்
அறுவடைக்காய் செய்வதில்லை,
அவற்றிற்கான உணவு
தவறாமல் வருகிறதே.

பூமியின் மலர்களைப் பாருங்கள்
எந்த
மாடமாளிகையின்
பஞ்சு மெத்தையும்,
எந்த சக்கரவர்த்தியின்
அரியாசன ஆடையும்,
அதன் மென்மை கொண்டதில்லையே.

பூக்களுக்கும் புற்களுக்கும்
புத்தாடை உடுத்தும் பரமன்
மனிதர்கள் மேல்
மகத்துவம் செய்ய மாட்டாரா ?

 

தீர்ப்புகள் தீர்வுகள் அல்ல

 

உன் உப்பள உள்ளங்களில்
உறைந்திருக்கின்றன
ஓராயிரம் கறைகள்.

உங்கள் குப்பை மனசை
குழிக்குள் மறைத்துவிட்டு,
பிறரின்
சின்னத் தவறுக்காய்
நீங்கள் நீதிபதியாகாதீர்கள்.
குறையற்ற கரங்கள்
மட்டுமே
கறை கழுவ நீளட்டும்.
.

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

.

நீ இடும் தீர்ப்புக்கள்
நாளை
உன்வாசலில் கத்தியோடு காத்திருக்கும்.
உறைவாள் உருவியவன்
உறைவாளில் சொருகப்படுவான்.
ஆதலினால்
அன்பெனும் மயிலிறகில் மட்டுமே
ஆசனம் செய்யுங்கள்.
.

மலைபோன்ற பிழைகளுக்குள்
பிழைப்பு நடத்திக் கொண்டு
பிறரின் சிறு தவறுக்காய்
சிரச்சேதம் செய்யாதே.
முதலில் உன் பிழை அழி.
பின்பு வந்து பிறர் தவறு திருத்து.

.

பொய்யாணை இடாதே,
உன் தலைமயிரை
நிறம் மாற்றி வளரவைக்க
உனக்குத் திறமையில்லை.

உன் தலைமயிரின்
வளர்ச்சிக்கான கடிவாளமே
உன்னிடம் இல்லையெனும்போது,
எனவே
அகந்தை உன்னுள் இருப்பதில்
அர்த்தமே இல்லை.

.

ஆம், இல்லை,
இரண்டில் ஒன்றைப் பதிலாய் கொள்.
இது தவிர்த்த
மழுப்பல்கள் தீயவன் சொல்.

.

 
விழிப்பாய் இருங்கள்

 

விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்.
தீயவை தீய்க்குச் சொந்தம்,
நல்லவை மட்டுமே
நீதியாசனத்துக்குச் சொந்தம்.
எனவே,
விதைத் தேர்வில்
விழிப்பாய் இருங்கள்

போலிகளைப் பிரித்தறியும்
பக்குவத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்,
கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்களை
உள்ளுக்குள் உலவவிட்டு,
வெள்ளை ஆட்டுத்தோலை
வெளியே உடுத்தியிருப்போரை
அகக்கண் கொண்டு அறியுங்கள்.

உச்சரிப்பதில் அவர்கள்
எச்சரிக்கையாய் இருந்தாலும்,
செயல்களில் சுயமுகம்
தலை நீட்டும்.
வார்த்தைகளை விடுத்து
வாழ்கையிலிருந்து எடுக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்.

முட்செடிகளின் முனைகளில்
திராட்சைக் கொடிகள்
காய்ப்பதுமில்லை,
அங்கே யாரும்
அத்திப் பழங்களை கொய்வதுமில்லை.

சிந்தனையின் இமை விலக்கி
பார்வைகளை வடிகட்டி
விழிப்பாய் இருங்கள்.

விழிப்பாய் இருப்பவர்கள்
இழப்பதில்லை.

 

செயல்களின் வயல்கள் விளையட்டும்

 

செயல்களால் எனைத் தீண்டாமல்
வேண்டுதலால் மட்டும்
எனைத் தீண்டுவோர்,
விண்ணகப் படி தாண்டார்.
என்
வார்த்தைகளை வாழ்பவன் மட்டுமே
வாழ்வுக்குப் பின்னும் வாழ்வான்.

தீர்வு நாளில் என்னிடம் வந்து
ஆண்டவரே,
உம் பெயரால் இறைவாக்கு உரைத்தேனே,
நோய்களை நிவர்த்தினேனே,
பேய்களை துரத்தினேனே,
என்பார்கள்.

நான் அவர்களிடம்,
அறிவிலிகளே அகன்றுபோங்கள்.
உங்களை நான் அறியேன்,
என்
செயல்களுக்கும் உங்கள் சொல்லுக்கும்
இடையே
நிரப்பிட இயலா
பள்ளத்தாக்கைப் பறித்தீர்கள்.

உங்கள் வாழ்க்கை
ஆற்று நீரில் விழுந்து
தற்கொலை செய்துகொள்ளும்
மணல் வீட்டைப் போன்றதே.
பாறை மீது பதியனிடுவது
செயல்களின் அஸ்திவாரங்களே.

எனவே,
புயலுக்கும் காற்றுக்கும்
பலியாகும் மணல் வீட்டில்
அடித்தளமிட்டு அவதிப்பட வேண்டாம்.
அஸ்திவாரங்களை
பாறைமீது பதியமிடுங்கள்.

வாழ்வியல் செயல்களே
வாழ்வின் பாறைகள் !

 

எதிரிக்குப் பூ கொடு

 

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல் எல்லாம்
வீணர்களின் விவாதங்கள்.
பழிக்குப் பழி
அழிவின் ஆரம்பம்.

யாரேனும் உன்
வலக்கன்னத்தில் அறைந்தால்
அடுத்த கன்னத்தையும்
அடி வாங்க நீட்டு.

தீமையைத் தீமை
தீயிட்டு அளிப்பதில்லை,
குருதியைக் குருதி
கழுவிடல் இயலாது.

புன்னகையின் நீளமே
தீமையின் வேகத்தை
தடைபோடக் கூடும்.

கோப மலைகளாய்
முட்டிக் கொள்வதை விட
சாந்த அலைகளாய்
கட்டிக் கொள்வது சிறந்தது.

உன்
உள் ஆடைக்காய் வழக்கிடுபவனுக்கு
மேலாடையையும் மகிழ்வோடு கொடு.

கேட்பவனுக்கு
கொடு,
வேண்டுவோர்க்கு வழங்கு,
கடன்கேட்போனுக்கு
முகம் கோணாதே.
o

நேசம் என்பது
நண்பனுக்கு மட்டுமான
நன்கொடையல்ல.
பாசம் என்பதை
பகைவனுக்கும் பகிர்ந்தளி.

நன்மைக்கு நன்மையை
எடைக்கு எடை கொடுப்பது
சாதாரண மனிதனின்
சராசரி நடைமுறைகள்.
நீங்கள்
தீமைக்கும் நன்மையையே
பதிலாய் வழங்கிடுங்கள்.

பகையற்ற பூமியே
திசையெட்டும் நீளட்டும்.

 
விளம்பரப் பூக்கள் மணப்பதில்லை
 

பிச்சையிடு,
ஒரு கை தானம் செய்கையில்
மறுகைக்குக் கூட
விளம்பரமிட வேண்டாம்.

புகழுரையின் புழுதித் தூறலுக்காய்
உன்
இதயத்தின் கரைகளை
கறையாக்க வேண்டாம்.

அலைகள் தொலைந்துபோன
ஆழ்கடலாய்.
சத்தங்கள் செத்துப் போன
தொலை மலையாய் இரு.
தானம் தருகையில்.

o

வெளிவேடம் வேண்டாம்,
நோன்பு கால நோவுகளை
முகத்தில் படர விடாதே,
புத்துணர்ச்சிப் புன்னகை உடுத்து,
நோன்பின் சாம்பல் நிழல்கள்
மறைவாகவே உறையட்டும்

o

தனிமைச் செபங்கள்
தாழிட்ட அறைக்குள்
நடக்கட்டும்.
அதிகமான வார்த்தைகளல்ல,
ஆழமான உணர்வே
உன்னதமான செபம்.

மனுக்களை மட்டுமே
அவிழ்த்து வைத்து செபிப்பது
மனுமகனுக்குப் பிடித்ததல்ல,
தவழும் குழந்தையின்
தேவைகள்
தந்தைக்குத் தெரியாதா ?

உன் தேவைகளையும்
உனக்கும் முன்
உன்
ஆண்டவர் அறிகிறார்.
 

தந்தை தந்த செபம்

 உணவு தரும் தாய்
அதை
ஊட்டியும் விடுவதுபோல,
வரம் தரும் இறைவன்
அதைக் கேட்கும்
வழிமுறையையும் சொல்கிறார்.

சிந்தை கொள்ளும்
அந்த செபம் இதுவே.

விண்ணக வீட்டின் தந்தையே
உமது பெயர்
தூயதென்று போற்றப்படட்டும்,
உமது அரசு வருக,
விண்ணகத்தில் நிறைவேறும் உம் திருவுளம்
மண்ணகத்திலும் நிறைவேறட்டும்,
தினசரி உணவை எங்களுக்குத் தாரும்.
நாங்கள்
பிறர் பாவம் மன்னிப்பதுபோல்
எம் பாவங்களை மன்னியும்.
சோதனைகளுள் எங்களை
உட்படுத்தாதேயும்,
தீயோனின் கைகளில் எங்களை
சிறைப்படுத்தாதேயும்.
மாட்சிமை என்றும் உமக்கு உரியதே.
ஆமென்
 

இடறல் வேண்டாம்

 

இயேசு பேசினார்.

பெண்களிடம் பிறந்தோரில்
திருமுழுக்கு யோவானே பெரியவர்.
ஆயினும்,
விண்ணக வீதியில் இருக்கும்
சின்னஞ் சிறுவனும்,
அவரிலும் பெரியோனே.

இதோ,
இந்தத் தலைமுறை
விளங்கிக் கொள்ள முடியாத
சிக்கலாய் இருக்கிறது,
ஒப்பீடுகளில் ஒப்பவில்லை.

எங்கள் புல்லாங்குழலிசைக்கு
உங்கள் பாதங்கள்
நடனமாடவில்லை,
எங்கள் அழுகைக்காய்
நீங்கள் மாரடிக்கவில்லை எனும்
சிறுவனின் சிணுங்கல் போன்றது
இவர்களின் செய்கை.

யோவான் வந்தார்,
உண்ணா நோன்பு இருந்தார்.
அவரை
பேய் பிடித்த பைத்தியம் என்றனர்.

நான்,
உண்டேன் குடித்தேன்.
போஜனப் பிரியன் என்று
பட்டப் பெயர் சூட்டுகிறீர்கள்.

நீங்கள் முடிவுகளை எழுதிவிட்டு
வீணாய் வாதிடும்
வீணர்கள்,
உங்கள்
வட்டத்துக்கு வெளியே வந்து
ஆராயத் துயாத அறிவிலிகள்.

நீதியின் முற்றங்களிலும்
குற்றம் தேடி நடப்போர்களே,
என்னைக் குறித்து
இடறல் படாதோன் பேறுபெற்றோன்.

 அமைதியின் ஆசனம்

 

இதயத்தில் பாரம்
அழுத்தி அழவைக்கிறதா,
வாருங்கள் என்னிடம்
நான்
சாந்தத்துக்கும் மனசாட்சிக்கும்
சொந்தக்காரன்.

ஆன்மாவின் அமைதி
என்
போதனையின் பகுதி.

o

உள்ளவனுக்கு கொடுக்கப்படும்
இல்லாதவனிடமிருந்து
இருப்பதும் பறிக்கப்படும்.

புலன்கள் கொள்ளுங்கள்,
கண்டும் காணாமலும்,
கேட்டும் கேட்காமலும்,
உள்ளத்தால் உணராமலும்,
மழுங்கடிக்கப்பட்ட மனசுக்காரர்கள்
வெளிவேடக்காரர்கள்.

நீங்கள் பேறுபெற்றோர்,
உங்களுக்கு உயிர் புலன்கள்
உள்ளன,
உள்ளவனுக்கு கொடுக்கப்படும்.

 

இயேசு எனும் நல்ல மேய்ப்பன்

 
கேளுங்கள் !

ஆட்டுப்பட்டிக்கு
வாசல் வழியாக வராமல்
குறுக்கு வழியாய் குதிப்பவன்
கொள்ளைக்காரன்.

பின்வாசலின் கதவுடைத்தோ,
கூரையின் தலையுடைத்தோ
நேர் வழியை
நிராகரிப்பவன் அவன்.

வாசல் வழியாய் வருபவனே
ஆயன்.
அவன் குரல்
ஆடுகளின் பரிச்சயக் குரல்
எச்சரிக்கை மணி அவிழ்க்கும்
நம்பிக்கைக் குரல்.

ஆயனின் சுவடுகளில்
ஆடுகள்
பாதுகாப்புப் பயணம் தொடரும்.
அன்னிய காலடிகளிலோ
அவலக் குரலையே அவிழ்க்கும்.

நானே நல்ல மேய்ப்பன்.
மீட்பின் முற்றமும்
வாழ்வின் வாசலும் நானே.

பழுதான போதனைகளிலும்,
எழுதாத சாதனைகளிலும்
விழவேண்டாம்.

வேலையாள்
ஓநாய்களின் கூட்டம் கண்டால்
ஆடுகளை விட்டுவிட்டு
உயிர்காக்க ஓடுவான்.
ஆயனோ அகலான்.

கிளைகள் வாடிப் போனாலும்
ஓடிப் போவதில்லை வேர்.
ஆழத்தில் அமிழ்ந்து
ஆடுகளைத் தாங்கும் ஆயனைப் போல்.

நல்ல ஆயன் நானே.
என் வார்த்தைகளைக் கேட்டு
வார்த்தைகளை வாழ்பவன்
செத்த பின்னும் த்தியமாவான்.

 

 

கோதுமை மணி
மண்ணில் விழுந்து மடியும் வரை
ஒற்றை மணி தான்.
மடிந்த பின்போ
கற்றை மணியாய் உருமாறும்.

இரண்டாம் ஜாமமும்
இருண்டபின்,
பூமியின் பாத்திரங்களில்
சூரிய ஒளி ஏது ?

ஒளி இன்னும் சிறிது நேரமே
ஒளிரும்,
இருட்டும் முன்
பாதை தேர்ந்தெடுப்பவன்
புத்திசாலி.

 
இயேசு எனும் திராட்சைக் கொடி

 

நான்
திராட்சைக் கொடி.
தந்தை பயிரிடும் பரமன்.
நீங்கள் என் கிளைகள்.

கனிதராக் கிளைகள்
தறிக்கப்பட்டு
விறகாகும்.
கனிதரும் கிளைகள்
கழிக்கப்பட்டு
அதிகமாய் கனிதரும்.

கொடியில் இல்லாத கிளைகள்
தானே
கனிதரல் இயலாது.
வேர்களில்லா கொடிகளுக்கு
கிளைகளிலேது கலகலப்பு.

என்னில் நிலைத்திருங்கள்
இல்லையேல்
சருகாகி எரிவீர்கள்.

நண்பனுக்காய்
உயிர்தருவதே
உயர்வான நட்பு.
நீங்கள் என் நண்பர்கள்.

வானக தந்தையின்
விருப்ப உரைக்கு மறுப்புரை
எழுதா மக்களே
என் தாயும், சகோதரரும்.

வாழ்வியல் பாடம்
ஒரு வரிதான்
‘அனைவரிடமும் அன்பு செய்யுங்கள்’
உன்னை நேசிப்பதுபோல்.
o