இறைமகனின் விளக்கங்கள் ஞாயிறு, நவ் 23 2008 

 

 

பணியாளரே துணிவு பெறுங்கள்

 

சீடர்களுக்கு இயேசு
வார்த்தெடுத்த
வார்த்தைகளால்
வலுவான செய்திகள் சொன்னார்.

பயணத்தின் ஓரத்தில்
பயம் கொள்ளாமலும்,
வெப்பத்தின் வெப்பத்தில்
வெந்துபோகாமலும்,
மனசை மலையாக்கும்
ஒப்பற்ற அறிவுரைகள் அவை.

o

ஆன்மாவைக் கொல்லும்
ஆயுதம் இல்லாதவருக்காய்
அஞ்சவேண்டாம்.

மனிதரின் வாட்கள்
உடலோடு மட்டுமே உறவாடும்,
உடல் வலிக்காய்
அஞ்சாதீர்கள்.

சாவு என்பது
சரீரத்தோடு மட்டுமே
சம்பந்தப் பட்டதல்ல,
மனிதாபிமானம் மரித்துப் போனால்,
தரணியில் வாழ்வதில்
தரம் ஏதும் இல்லை.

o

ஓநாய்களிடையே
உலவும் ஆடுகளாய் நீங்கள்.
பாம்பின் விவேகமும்
புறாவின் பரிசுத்தமும்
அணிகலனாய் அணியுங்கள்.

சமாதானத்தின்
சாகுபடி செய்யுங்கள்.

o

மறைக்கப்பட்டவை
என்றேனும் வெளிப்பட்டே தீரும்.
இரவின் நிறம்
பகலால் துடைக்கப்படும்.

நான்
உங்கள் காதுக்குச் சொன்னதை
நீங்கள்
உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்

o

உலகின் உறவுகள்
உன்னதரால் வழங்கப்பட்டவை,
உலக உறவுக்காய்
உன்னதரை உதாசீனப் படுத்தாதீர்கள்

o

 

யார் நன்மை செய்ய வேண்டும்

 

யோவான்
இயேசுவிடம் ஓர்
குழப்பக் கேள்வியை வைத்தார்.

உமது
பெயரைச் சொல்லி ஒருவன்
பேய்களை ஓட்டுகிறான்
நல்ல செயல்கள் செய்கிறான்.
அவன்
நம்மைச் சாராதவன்
குழுவில் சேராதவன்
தடுக்கவா? விடுக்கவா ? என்றார்.

தடுக்க வேண்டாம்
கொடுக்க விடுங்கள்.
இயேசு சொன்னார்.

நல்ல விதைகளை
யார் வேண்டுமானாலும் விதைக்கலாம்.
விதைப்பவனைப் பார்த்து
முளைகள் எழும்புவதில்லையே.
விதைக்கட்டும்.

நல்ல செயல்களுக்காய்
என் பெயரைப் பயன்படுத்தினால்
பழுதில்லை.
விழுதுகள் ஆலமரத்துக்கு
விருதுகள் தானே.

நமக்கு எதிராய் இராதவன்
நம்மைச் சார்ந்தவனே.

நம்
செய்திகளுக்குத் தீ வைப்பவன்
மட்டுமே
நம்மைச் சாராதவன்
நன்மையைச் சாராதவன்.
என்றார்.

யோவான்
குழப்ப முடிச்சுகள் அவிழ
ஆனந்த நேர்கோட்டில்
ஐக்கியமானார்.

 

ஓய்வு நாளில் ஏன் ஓயவில்லை

 

பழி சுமத்தப் பார்த்திருந்தது
பரிசேயர் கூட்டம்,
இவர்கள்
உள்ளுக்குள் கள்ளூற்றி
வெளியே மல்லிப்பூ வளர்ப்பவர்கள்.

ஓய்வு நாளில்
இயேசுவின் சீடர்கள்
வயலில் கதிர் கொய்து தின்றனராம்,
பூச்சியைப் பிடித்து
யானை என்றது கூட்டம்.

யூதர்களின் முறையோ
சட்டங்களில் சட்டங்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும்
புகைப்படம் போன்றது.
வெளியேறி ஒரு நாளும்
புது சுவாசம் இழுக்காது.

ஓய்வு நாள் என்பது
ஓய்வெடுக்க மட்டுமே.
அன்று
எச்செயலும் செய்யலாகாதெனும்
எச்சரிக்கைக் கட்டளை உண்டு
அவர்களுக்கு.

இயேசுவோ,
நலன்களை நல்க
நாள்காட்டி பார்ப்பதில்லை.

மடிந்து கொண்டிருக்கும் உயிரை
ஓய்வுநாள் முடியவில்லை
என்று
மனசை மடித்து மடங்கிச் செல்ல
மனுமகன் ஒன்றும்
சட்டத்தின் வால் பிடித்துத் தொங்கும்
பட்டத்தின் நூல் அல்ல.

அடக்கப் பார்த்த கேள்விக்கு
ஆதாரத்தோடு பதில் வந்தது
இயேசுவிடமிருந்து.

தாவீதும்
அவரோடு இருந்தவர்களும்
ஓய்வு நாளில்
குருக்களுக்கான அப்பங்களை
பசிதீர்க்கத் தின்றதை
வாசித்ததில்லையா நீங்கள்.

குருக்களின் ஆலயப் பணி
ஓய்வு நாளிலும் தொடரலாம்
என்பதை
கேட்டதில்லையா நீங்கள் ?

அவர்களின் சட்டநூலிலேயே
அவர்களின்
கேள்வியின் பதிலிருப்பதை
கோடிட்டுக் காட்டினார்.

சட்டங்கள் இருப்பது மனிதனுக்காக,
மனிதன் இருப்பது
சட்டத்துக்காக அல்ல.
உங்கள் செல்லரித்துப் போன
சட்டங்கள் இனி செல்லாது.

மனுமகன்,
ஆறு நாளுக்கான ஆண்டவரல்ல,
ஓய்வு நாளுக்கும்
அவரே ஆண்டவர்.

குறை சொன்ன கூட்டத்திடம்
வேறு கேள்வி
வேர்விட வில்லை.
 

அழிவுக்கான புளிப்பு மாவு

 பரிசேயரின்
புளிப்பு மாவைக் குறித்து
கவனமாய் இருங்கள்
இயேசு சொன்னார்.

சீடர்களோ
சிற்பியோடே இருந்தாலும்
இன்னும்
உளிகளைப் பற்றி முழுதாய்
அறிந்து கொள்ளவில்லை.

தங்களிடம்
அப்பம் இல்லையே என
தர்க்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு
மெலிதான கோபத்தால்
அவர்கள்
சந்தேகம் விலக்கினார்.

நான்
உள்ளத்தைப் பாதுகாக்கச்
சொன்னால்
நீங்கள்
உணவைப் பாதுகாக்கவில்லை
என்கிறீர்கள்.

எப்போது தான்
நுனிப்புல் மேய்வதை விட்டு
வேர்கள் மீது
வேட்கை கொள்வீர்களோ ?

ஐந்து அப்பத்தை
ஐயாயிரம் பேர் உண்டபின்
மீந்தவற்றை
பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தீர்கள்.

ஏழு அப்பங்களை
நாலாயிரம் பேருக்கு அளித்தேன்
அதில்
மீந்த அப்பங்களே
ஏழு கூடைகள் இருந்தனவே.

இன்னும் ஏன்
அப்பத்துக்கான கவலை.
நான் சொல்வது
வயிறுக்கான வார்த்தைகளல்ல
மனசுக்கான
மந்திரங்கள்.

குழப்பத்தைக் கொன்ற
வேடர்கள் ஆனார்கள்
சீடர்கள்.

 

எண்ணிக்கையா, எண்ணமா ?

 
ஒரு முறை இயேசு

காணிக்கை போடுவோரை
ஆலயத்தில் அமர்ந்து
கவனிக்கலானார்.

பட்டுக்குள் சுற்றப்பட்ட
பணக்காரர் பலர்
பெட்டி பெட்டியாய்
பணம் போட்டு நகர்ந்தனர்.

பகட்டுக்காய் பலர் வந்து
கட்டுக் கட்டாய்
நோட்டுக்கள் இட்டு
கர்வத்துடன் கடந்தனர்.

கடைசியாய் வந்தாள்
கவலையின் பையுடன்,
இரண்டு காசு கையுடன்,
கைம்பெண் ஒருத்தி.

இயேசு சொன்னார்
அதிகம் போட்டவள் இவளே.
ஏனெனில்
அதிகமாய் போட்டவர் எல்லாம்
அதிகமிருந்ததில் எடுத்தனர்.
இவளோ
இருந்ததை மொத்தமாய் கொடுத்தனள்.

அவர்கள்
களஞ்சியத்தில்
எஞ்சியதைக் கொடுத்தார்கள்
இவளோ
வாழ்வுக்காய்
மிஞ்சியதை கொடுத்தாள்.

உள்ளுக்குள் உண்மை நேசம்
ஒரு காசை வானளவு விரிக்கும்.
நேசம் இல்லா பகட்டுக்கள்
வானத்தைகூட
வார்க்கச்சைக்குள் இறுக்கும்.

 

பாவிகளெனும் பள்ளத்தில் பரமனா ?

 
பாவிகள் என்று
புறக்கக்கப்பட்டவரோடு
இயேசுவின் இரக்கம்
இடைவிடாமல் இருந்தது.

பாவிகளோடும் வரிவசூலிப்பவர்களோடும்
விருந்து உண்டார்.
கண்ணில் எண்ணை ஊற்றிக்
காத்திருந்தது,
பிரச்சினை கிளப்பவே
பரம்பரை பரம்பரையாய்
பழக்கப்பட்ட கூட்டம்.

போதகராய் இருப்து
வெகுமானம்
அவன் பாவிகளின் பாயில் அமர்ந்து
விருந்துண்பது
அவமானம்.
உங்கள் போதகருக்குப் புரியவில்லையோ ?

பரமனின் உறவுகள் எல்லாம்
உதவாக்கரைப் பாவிகளோடா ?
கேலிக் கேள்விகள்
சுழன்றது சீடர்களை நோக்கி.

இயேசு,
கேள்வித் தீயாய் எரித்தவரை
பதில் நீரில்
நனைத்தெடுத்தார்.

என் பணி,
நீங்கள் தேடும் மக்களோடல்ல
இதயம் வாடும் மக்களோடு
உங்கள் எல்லைகளுக்கு அப்பால் தான்
என்
ஆரம்பமே ஆரம்பம்.

மருத்துவனின் பணி
ஆரோக்கியவானின்
அறைகளிலல்ல,
நோயாளிகளின் நிலையங்களில்.

பலியை புறந்தள்ளி விட்டு
இரக்கத்தை மட்டுமே
இதயங்களில்
இறக்க வந்தேன்.

செதுக்கி முடித்த சிற்பத்தில்
சிற்பியின் உளிக்கு
வேலையில்லை.
வரைந்து முடித்த ஓவியம் தான்
நீதிமான்கள்
என் தூரிகைத் தழுவல்கள்
ஓவியமாகக் காத்திருக்கும்
காகிதங்களோடு தான்.
காவியமாய் காத்திருக்கும்
ஓவியங்களோடல்ல.

என் தேடுதல்கள்
குற்றம் விலகிய மனங்களல்ல,
குற்றம் விலக வேண்டிய
மனங்கள்.

நீதிமான்
நீதிமானாய் இருக்கட்டும் !
ஆனால்
பாவி பாவியாய் இருக்க வேண்டாம்.

பாவிகளின் பாதை மாற்றி
நீதிக்குள் அவர்களை
நடக்கவைப்பதே என் பணி,
மீன்களுக்கு நீச்சல்
பயிற்றுவிப்பதல்ல.

கறையற்றவர்களை தழுவுகிறேன்
அவர்கள்
நேசத்தில் நனைகிறேன்,
கறையுற்றோரைக் கழுவுகிறேன்.
அவர்களை
நேசத்தால் நனைக்கிறேன்.

இயேசுவின் விளக்கம்
தப்பாமல் வந்தது.
தப்பு சொன்னவர்கள்
தப்பி ஓடினார்கள்.

 
படைத்தவனுக்கு இடமில்லை

 

மறைநூல் அறிஞன் ஒருவன்
இயேசுவை அணுகி,
போதகரே,
உம் பயணம் தொடருமிடமெல்லாம்
இனி
என் பாதங்களும் படரும் என்றான்.

இயேசு அவரிடம்,
நரிகளுக்கு வளைகள் உண்டு.

பறவைகளுக்குக் கூட
சிறகு வலித்தால்
சங்கமிக்க கிளைகளிடையே
கூடுகள் காத்திருக்கும்.

மனுமகனுக்கோ
தலைச்சாய்க்கக் கூட
இடமிருக்காது,
தொடரத் தயாரென்றால் தொடரலாம்.
என்றார்.

இன்னொரு சீடர் அவரிடம்,
ஆண்டவரே,
என் தந்தை
இறந்துவிட்டார்,
அடக்கம் செய்துவிட்டு வரவா ?
என,

வாழ்வை முடித்தவர்க்காய் நீங்கள்
கவலைப் படுகிறீர்கள்,
வாழ்வை
துவங்காதவர்களுக்காய் நான்
துக்கப்படுகிறேன்,

உலகக் கவலைகள் உங்களை
உலுக்குகிறதென்றால்
உன்னதப் பணிக்கு
இன்னும் நீங்கள்
தயாராகவில்லை என்பதே பொருள்.
என்றார்.

 

இடம், பொருள், ஏவல் முக்கியம்

 
 
பழைய ஆடையில்
புதுத் துணியை
ஒட்டுப் போட உபயோகிக்காதீர்,
அது
கிழிசலைப் பெரிதாக்கி
ஆடையை அழித்துவிடும்.

புதிய இரசத்தை
புதிய சித்தைகளில் ஊற்று,
பழைய சித்தைகளில்
அதை ஊற்றினால்
எல்லாம் வீணாகும்.

சரியானதைச் செய்யுங்கள்
சரியான இடத்தில்.

 
 
மீண்டும் ஓய்வு நாள் சர்ச்சை

 

இன்னொருமுறை,
சூம்பியக்கையன் ஒருவனை
சுகமாக்கினார் இயேசு
ஓய்வு நாள் அது.
இன்னொரு குற்றச்சாட்டு குதித்தது.

ஓய்வு நாளில் என்ன
பிணி மாற்றும் பணி?
ஓய்வு மட்டுமே
ஓய்வு நாளுக்கான பணி
புரியாதவன் பரமனா ?

இயேசு சொன்னார்,
உன்
ஆட்டுக்குட்டி
குழியில் விழுந்தால்
ஓய்வு நாளெனில் அதை
சாக சம்மதிப்பாயா ?
சாகசம் செய்தாகிலும்
காப்பாற்றி கரையேற்றாயா ?

பள்ளத்தில் உன் பசு விழுந்தால்
ஓய்வு நாளெனில்
அதை
உதறிவிடுவாயா ?

ஆட்டைவிட மேலானவன்
மனிதன்,
இதை மறுதலிப்பவன் எவன் ?

நன்மைகளின்
விற்பனைக் கூடத்தில்,
முட்டுக் கட்டைகளை இட்டு
நிரப்பி வைக்காதீர்கள்.

வழக்கம் போல்
விளக்கம் கேட்டவர்
விலகினர்.
விளக்கம் பெற்றவர்
நெருங்கினர்.

 
விண்ணக இருக்கைக்கு விண்ணப்பம்
 

செபதேயுவின் மனைவி
தம் மக்களோடு வந்து
இயேசுவிடம்
விண்ணப்பம் ஒன்றை வைத்தாள்.

நீர் ஆட்சி அரியணையில்
அமரும்போது,
இவர்களை உம்
இரு பக்கங்களிலும்
இருக்கச் செய்யும் என்பதே
அவ்விண்ணப்பம்.

இயேசு
அவளைப் பார்த்தார்.
புரியாமல் பேசுகிறாய் நீ,
என்
துன்பக் கிண்ணத்தில் இவர்கள்
குடிப்பது சாத்தியமா ?
என்றார்.

தம் சிலுவைச் சாவையே
அவ்வாறு கேட்டார்.
அவளுக்கோ அது விளங்கியிருக்க
நியாயமில்லை.

ஆனாலும்
முடியும் என்றாள்.

இயேசுவோ
என்
பாடுகளைப் பகிர்தல்
ஒருவேளை சாத்தியமாகலாம்.

ஆனால்
விண்ணக வீட்டில்
என் பக்கத்தில் அமர்வது
என் தந்தையின் விருப்பத்தைப்
பொறுத்தது.
என்று பதிலளித்தார்.

 

சிறியவனே பெரியவன்

 

சீடர்கள் இயேசுவை அணுகி
வானுலகில்
பெரியவன் யார் ?
சற்றே எங்களுக்கு சொல்லும் என்றனர்.

இயேசு,
ஒரு சிறுவனைச் சுட்டி
சீடரிடம் சொன்னார்
இந்தச் சிறுவனைப் போல
தன்னைத் தாழ்த்துபவன்
விண்ணரசில் பெரியவனாய்
உயர்த்தப்படுவான்.

உங்களில்
பெரியவனாக இருக்க விரும்புகிறவன்
பணியாளனாய் பணியாற்றட்டும்,
ஆழ்கடல் ஆரவாரிப்பதில்லை
கரைகளில் மட்டுமே
அலைகள் அலையும்.

உங்களில் தலைவனாக
இருக்க விரும்புபவன்,
தொண்டனாய் முதலில்
தொண்டாற்றல் வேண்டும்.

தற்பெருமை கொள்பவன்
தகர்க்கப் படுவான்,
தாழ்ச்சி உள்ளவன்
தலைவனாக்கப்படுவான்.

மனுமகன் வந்தது
கிரீடம் சூட்டி அரசாள அல்ல,
மனுக்குலத்தை
தீய சிந்தனைகளிலிருந்து
கரையேற்றவும்,
அதற்காக சிலுவையில்
உயிர் அறையப்படவும் தான்.

பூமியின் பொருட்களில்
பற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள்,
ஆவியின் அருட் கொடையில்
பற்றிக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

ஒன்றா, தொன்னூற்று ஒன்பதா ?

 

மேய்ப்பனுக்குச் சொந்தமாய்
நூறு ஆடுகள்
இருந்தாலும்,

மேய்ச்சல் முடித்துத் திரும்புகையில்
ஆடு ஒன்று
திரும்பும் வழியில்
தொலைந்து போனால்,

ஒன்று போனால்
ஒன்றும் நேராதென்று
மெளனமாய் இருப்பதில்லை
மேய்ப்பன்.

மிச்ச
தொன்னூற்றொன்பது ஆடுகளையும்
மலையில் விட்டு விட்டு,
தொலைந்த ஆட்டைத்
தேடுவான்.

கண்டெடுத்து கட்டியணைப்பான்
ஆனந்த சத்தமிட்டு
முகம் தொட்டு முத்தமிட்டு
கூட்டத்தோடு கொண்டு சேர்ப்பான்.

அவனே உண்மை ஆயன்.

தவறிப்போகாத
மிச்ச ஆடுகளோடு
முடிந்துவிடுவதில்லை
நல்ல ஆயனின் பணி.
மேய்ச்சல் நிலத்தில்
தவறிப்போன சின்ன ஆட்டை
தேடிப் பிடித்து
தோள் தடவும் வரை அது தொடரும்.

மனுமகனும் அவ்வாறே,
யாரும் அழிவுறுதல்
ஆண்டவன் ஆசையல்ல.
மீட்பு என்பது
சிலருக்கு வழங்கப்பட வேண்டிய
சலுகைச் சலவை அல்ல.
 

திருந்துவதற்காய் திருத்து

 

யாரேனும் தவறிழைத்தால்,
அன்பான வார்த்தையில்
அவனை நீ
திருத்து.

மீண்டும் மீளாமல்
தவறான வழியில் அவன்
தவறாமல் சென்றால்,

இன்னும் இருவரை அழைத்து
அறிவுரை அளி.

பின்னும்
அவன் தடம்
தவறான இடம் எனில்,
திருச்சபைக்குச் சொல்.

திருச்சபைக்கும் மறுப்பவனை
ஓரமாய் ஒதுக்கிவிடு.
பொதுத் தீர்வையில்
அவனுக்கு
மன்னிப்பு மறுக்கப்படும்.

மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.

 

எத்தனை முறை மன்னிப்பது முறை ?

 

எத்தனை முறை மன்னிப்பது ?
ஏழு முறையா ?
சீடன் ஒருவன்
கேள்வியை வைத்தான்.

ஏழு முறை என்றல்ல,
எழுபது முறை ஏழு முறை
என்றார் இயேசு.

எண்க்கை பாராமல்
மன்னிப்பு வழங்கு என்பதை
மறைமுகமாய்
வெளிப்படுத்தும் வாசகம் அது.

ஏழுமுறை தான்
மன்னிக்க வேண்டும் எனும்
பழைய சட்டங்களை இயேசு
தணிக்கைக்குள் தள்ளுகிறார்
எண்ணிக்கைக்குள்
ஏன்
மன்னிப்பை அடக்க வேண்டும்
திருந்தும் வரை மன்னிப்போம் என
திருத்தம் செய்கிறார்.

தொடர் மன்னிப்பின் பலன்
சில இதயம்  சரியாதல் தான்.
அதுவே
மன்னிப்பின் மையம்.
 

விலக்குதல் விலக்கு

 

மனைவியை விலக்குதல்
முறையா ?
மனுமகனிடம் கேள்வி ஒன்று
கொடுக்கப்பட்டது.

ஆதாம் ஏவாள்
காலத்து ஆரம்பம்
ஆண் பெண் இணைந்து வாழும்
உன்னதம்.

ஆணும் பெண்ணுமாய்
இணைந்து வாழ்தல்
இறைவனின் விருப்பம்
மனைவியோடு வாழ்தலிலே தான்
மனிதனுக்கு மகத்துவம்.

இரு மனங்கள்
ஒரு உயிரில் உற்பத்தியாதல்
தான்
தாம்பத்யம்.

விவாகரத்து அளிப்பது
விண்ணகத்துக்கு எதிரான குற்றம்,
நடத்தை கெட்ட பெண் தவிர
மற்றவரை
விலக்குபவன்
விபச்சாரப் பாவம் செய்கிறான்
விளங்கிக் கொள்ளுங்கள்.

பிரிவதற்குக் காரணங்களை
சட்டங்களின்
மூலை முடுக்குகளில் தேடாமல்,
வாழ்வதற்கான காரணங்களை
மனதின்
மூலை முடுக்குகளிலும்
நிரப்பி வைத்தலே
இயேசுவின் அறிவுரையின் சாரம்.

 

பகிர்ந்தளி, அதுவே மீட்பின் வழி

 

பணக்காரன் ஒருவன்
பரமனிடம் வந்தான்.

மீட்பின் வாசலுக்கு
நான் வர வேண்டும்,
என் கடமை என்னவென்று
கருணையில் சொல்வீர்.

இயேசு சொன்னார்
கட்டளைகளைக் கடைபிடி,
கொலை, விபச்சாரம், களவு, போன்றவை
செய்யாதே
உன்னைப்போல் அயலானை
அன்பு செய்.

இவையெல்லாம்
என்
சிறுவயதுப் பழக்கம்,
இம்மியளவும் நான் தவறியதில்லை,
வேறென்ன செய்யவேண்டும் ?
கேள்வி யில் மறுபடி
தொங்கினான் அவன்.

இயேசு அவனைப் பார்த்தார்.
நல்லவனுக்குரிய
ரேகைகள்
அவன் விழிகளில் நீந்தின.

ஒன்று உன்னிடம்
குறைவெனக் காண்கிறேன்.

உன்
சொத்துக்களை விற்று
ஏழைகளுக்குக் கொடு.

ஒருவனுடைய வாசலில்
பட்டினியின் பாயும்,
இன்னொருவனுடைய வீட்டில்
பட்டாபிஷேகமும் ஆகாது.

அயலானை
உன்னைப்போல் நேசி.

பணக்காரன்
விழிகள் சோர்ந்துபோய்
வெளியேறினான்.
அவனுக்குச்
சொந்தமாய் ஏராளம்
சொத்திருந்தது.

 

ஊசிக் காதுக்குள் ஒட்டகம்
 

உறுதியாக சொல்கிறேன்,
பணக்காரன்
விண்ணரசு வருவது
மிக மிக அரிதென்பதை
அகத்தில் எழுதுங்கள்.

பணக்காரனின் விண்ணகப்
பயணத்தை விட,
ஊசிக் காதுக்குள்
ஒட்டகம் நுழைவது எளிது.

ஒருவன்,
அயலானின் வியர்வை துடைக்க
விருப்பப்படால்,
பகிர்தலில் மிளிர்வான்,
பகிர்தலின் புதல்வர்கள்
பணக்காரர் ஆவதில்லை.
இதுவே இக்கருத்தின்
உட்கரு.

சமத்துவச் சிந்தனைகளை
அகத்தினில் கொள்வதே
ஆண்டவன் அறிவுரை.

 *
எனக்காய் நீங்கள்
இழப்பவை எல்லாம்,
தந்தையால் உங்களுக்கு
தவறாமல் தரப்படும்

  
சொல்லுக்கு விலை இல்லை

 

கேள்வியில் விடையை
கிளற வைப்பார் இயேசு.

ஒருவனுக்கு
பிள்ளைகள் இருவர் இருந்தனர்.

தோட்டத்தில் கொஞ்சம்
வியர்வைப் பணி
மிச்சமிருந்தது.
மகன்களை போகச் சொன்னார்
தந்தை.

முதலானவன் முரண்டுபிடித்தான்.
முடியாது என்பதே
என் முடிவு என்று
கண்களை மூடினான்.

பின் மனம் திறந்தான்
தந்தை சொல் தட்டிய
தவறுணர்ந்தான்
தோட்டம் நோக்கி
ஓட்டம் கொண்டான்.

இரண்டாமவனிடமும்
தந்தை சென்றார்.
விழித்திருந்த மகனோ
இதோ என்றான்
ஆனால்
வார்த்தை உறுதிமொழியை
நிறைவேற்றத் தவறினான்.

இருவரில் யார்
இறைவனுக்கு ஏற்புடையவர் ?
இயேசுவின் கேள்வி
இலக்கைத் தொட்டது.

முதலானவன் என்ற பதில்
முண்டியடித்து முன் வந்தது.

இயேசு
புன்முறுவல் பூத்தார்.,
நீங்கள் சொன்னது சரியே.
செயல்களே முக்கியம்
வார்த்தைகள் எல்லாம்
செயலில்லையேல் செத்தவையே.

 
இரு வாழ்வும் தேவையே

 

செசாருக்கு வரிசெலுத்த வேண்டுமா ?
இயேசுவைப்
பொறிவைத்துப்
பிடிக்கப் பார்த்தது
பரிகாசப் பரிசேயர் கூட்டம்.

இயேசு
அவர்கள் உள்ளக் கிடங்கை
அகக்கண்ணால் ஆராய்ந்தார்.

வேண்டாம் என்றால்,
அரசனைப் பழிக்கிறான் என்று
நீண்ட வழக்கிடும்.

வேண்டும் என்றால்,
மனுமகனின் பணி
மண்ணுலகப் பதானோ என்று
காது வரை கேலி நீளும்.

இயேசு கேட்டார்,
உங்கள் நாணயத்தில்
பொறிக்கப்பட்டிருப்பது யார் பெயர் ?

செசார் என்றனர்,
செருக்குற்றவர்.

இயேசு இரண்டே வார்த்தை
இயம்பினார்.
செசாருக்குரியதை செசாருக்கும்
கடவுளுக்குரியதை கடவுளுக்கும்
கையளியுங்கள்.

கூட்டம்
திடுக்கிடலோடு திரும்பிச் சென்றது

 

மறு உலகில் யாருக்கு மனைவி ?

 

சதுசேயர் சிலர்
சதிக்கேள்வி கேட்டனர்,
இயேசுவை வார்த்தை வலையில்
வீழ்த்த எண்ணி.

ஒருத்தி மணமாகி
மகப்பேறுக்கு முன்பே
கணவன் மரணமடந்தால்
அவன் சகோதரன்
அவளைக்
கைப்பிடித்தல் மோயிசன் சட்டம்.

ஒருத்தி,
ஏழு சகோதரரை
ஒருவர் பின் ஒருவராய் மணந்து
எழுவரையும் இழக்கிறாள்.
பின்
உயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி ?

அசத்தல் கேள்வியைக்
கேட்டதாய்
ஆனந்தத்தை
அசை போட்டது கூட்டம்.

இயேசு சொன்னார்,
சின்ன விசுவாசக் காரர்களே,
வேடதாரிகளே கேளுங்கள்.

உங்கள் அறியாமைக் கண்கள்
மூட மறுக்கின்றன,
வெளிச்சம் உங்கள்
ஊனக்கண்ணுக்கு உள்ளே வர
மறுக்கிறது.

விண்ணரசு,
சமகால வாழ்வின் நகல் அல்ல,
அங்கே
பெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.

எல்லோரும்
தேவதூதப் பிறவிகளே.

அசை போட்ட கூட்டம்
வசை கேட்டு விலகியது.

 

பெரிய கட்டளை

 

சதுசேயரின் சதிக்கேள்வி
சிதைந்ததும்,
பரிசேயரின் ஒரு கேள்வி
மிதந்தது.

திருச்சட்டத்தின் மிகப் பெரிய
கட்டளை என்ன ?
காதுகளைச் செதுக்கி
காத்திருந்தது கூட்டம்.

இயேசு சொன்னார்,
கடுகளவும் குறைவின்றி
முழு மனசோடும் ஆன்மாவோடும்
ஆண்டவனை அன்பு செய்.

உன் மீது
நீ காட்டும் அதே அன்பை
உன்
அயலான் மீதும் வை.

இவ்விரண்டு கட்டளைகளுமே
அத்தனை சட்டங்களுக்குமான
அச்சாணி.

 
விலங்குகளை விலக்குங்கள்
 

யூதர்களைப் பார்த்து
இயேசு சொன்னார்.
நீங்கள்
அடிமைகளாய் இருக்கிறீர்கள்
விலங்குடைக்காவிடில்
நீங்கள்
விலங்குகளே.

யூதர்கள் கொதித்தனர்.
நாங்கள் அடிமைகளா ?

ஆபிரகாம் முதல்
நாங்கள்
ஆணையிடும் வம்சம்
அடிமையின் வாரிசல்ல
என்றார்கள்.

இயேசு சிரித்தார்.
பாவம் செய்யும் எவனும்
பாவத்துக்கு அடிமை !

விட்டொழியுங்கள்
இல்லையேல்
கெட்டழிவீர்கள் என்றார்.

 
தந்தையை நான் அறிவேன்
 

கடவுளைச் சார்ந்தவன்
கடவுளுக்குச் செவிகொடுப்பான்,
நீங்கள்
சார மறுக்கிறீர்கள்
சாரமற்றுப் போகிறீர்கள்
என்றார் இயேசு.

யூதர்கள்
குதித்தனர்
கோபத்தில் கொதித்தனர்.

வானத்தில் மிதக்கும்
நினைவுகளோடு வாழ்ந்தவர்கள்
பாதாளத்தில்
எறியப்பட்டதால் பதறினர்.

நீ பேய் பிடித்துப் பிதற்றுகிறாய்,
ஆதாரம் இல்லாமல்
சதிராடுகிறாய்.

உன் மனமெனும்
கூடாரம்,
சேதாரம் ஆகிவிட்டது.
என்றனர்.

இயேசு சொன்னார்,
நான்
எனக்குப் பெருமை தேடுபவனல்ல,
உங்கள்
விசாரணைகளுக்கு
விளக்கமளிக்கத் தேவையில்லை.

எனக்குப் பெருமை தருவது
தந்தையின் அருகாமையும்,
திருந்தும் மக்களின்
இருதயங்களும் தான்.

என்
மானிட வயது மிகச் சிறிதே.

ஆனால்
ஆபிரகாமுக்கு முன்பே
நான் இருக்கிறேன்.

வார்த்தையாயும்
இல்லாமையிலும் இருந்தேன்.

நான் தந்தையை அறிவேன்,
அவருக்காய் தருவதற்கே
நான்
வருவிக்கப் பட்டேன்.

என் உயிரைக் கூட
அவருக்கே தருவேன்
அவர்
அதை எனக்குத் திரும்பத் தருவார்.

என் நாவு
பொய் சொல்வதோ
எனக்குள்
பேய் செல்வதோ சாத்தியமில்லை.
என்றார்.

வார்த்தைகளைப் பொறுக்க
மறுத்து,
கற்களை மட்டுமே
எடுக்கப் பழகிய கூட்டம்
இயேசுவை நோக்கி
கற்களை எடுத்தது.

காற்றை எறிய
யாரால் கூடும்,
கர்த்தரைத் தாக்க
கற்களால் கூடுமோ ?

இயேசு
விலகிச் சென்றார்.
இடத்தை விட்டு
இதயங்களை விட்டல்ல.

 

எதிராய் இருப்பவனே எதிராளி

 
என் வார்த்தைகளை
நம்புங்கள்,
இல்லையேல் செயல்களையேனும்
நம்புங்கள்.

ஏன் இன்னும்
குருடாய் தான் இருப்பேனெனெ
முரட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?
முரடாய் தான் இருப்பேனென
குருட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?

0

இயேசுவின் அற்புதங்கள்
தலைமைக் குருக்களின்
நிலைமை தகர்த்தது.
பரிசேயரைப் பார்த்து
பரிகாசம் செய்தது.

அடக்கி விடு
இல்லையேல் அழித்து விடு
வட்டமிட்டது கூட்டம்.

இயேசுவை
வளைப்பது இயலாதென்பதால்
உடைத்திட திட்டமிட்டது.

அணையை உடைப்பது போல
கடலை உடைக்கலாமென
கங்கணம் கட்டியது .

கடலோ
சுயமாய் வற்றிப் போக
சம்மதித்தது
உள்ளுக்குள் கிடக்கும் வளங்களை
வெளிக்காட்டும் விதமாக.
 

இறைமகனென்றால் இறப்பில்லையே

 

மக்கள் கூட்டம்
இயேசுவைப் பார்த்து,

மெசியாவானால்
நிலைப்பார் என்பதே
நிலைப்பாடு.

மரணங்களைக் கடந்தவரே
மனுமகனாக முடியும்.
கையளவு நீர்
கடலென்ற பெயர் பெறாது.

நீர்
இறப்பேன் என்பதும்
உயர்த்தப் படுவேன் என்பதும்
ஆண்டவனுக்கான
அடையாளங்கள் அல்லவே ?
என்றது.

இயேசு சொன்னார்,
ஒளி
சிலகாலமே உங்களோடு இருக்கும்.
இருக்கும் போதே
பெற்றுக் கொள்ளுங்கள்.

இரவில் ஒளி வற்றிப் போகும்
வெளிச்சம் இருக்கும் போதே
வந்து
மனசுக்குள் ஊற்றிப் போங்கள்.

இற்றுப் போன மனசுக்காரர்கள்
தோற்றுப் போவார்கள்.

வாருங்கள்
ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்.
வழியை
கற்றுக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

வல்லமையின் பிறப்பிடம்

 
இயேசுவின்
நோய்தீர்க்கும் செயல்களால்
காய்ச்சல் கண்ட
தலைமைக் கூட்டம்
இயேசுவை அணுகிக் கேட்டது.

எந்த அதிகாரத்தால்
இதைச் செய்கிறீர் ?

நம்பிக்கை இல்லா
அவர்களிடம்
விளக்கம் கூற விரும்பாமல்
இயேசு,
கேள்விக்குப் பதிலாய்
இன்னோர் கேள்வியை வைத்தார்.

யோவான்
திருமுழுக்கு அளித்தது
எந்த வல்லமையால் ?
விண்ணகமா ?
மண்ணகமா என்றார்.

கூட்டம் கேள்வியில்
மறைந்திருந்த
கண்ணிவெடியைக்
கண்டு கொண்டது.

விண்ணகம் என்போமெனில்
ஏன்
யோவான் விளம்பிய
விண்ணக வார்த்தையை
நம்பவில்லை என்ற கேள்வி வரும்.

மண்ணகம் என்றால்
நம்பிக் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டம்
கோபத்தில் கல் எறியும்.

சொல்லைக் கொடுத்து
கல்லை வாங்க
விருப்பப் படாத,

இருதலைக் கொள்ளி எறும்பாபென
உஷ்ணத்தில்
உழன்ற தலைவர்கள்
‘தெரியாது’ என்று தப்பித்தனர்.

இயேசு
எதிர்பார்த்த பதிலையே
எதிர்த்தவர்கள் கொடுத்தனர்.

அப்படியே,
இதுவும் உங்களுக்கு
தெரிவிக்கப் படாது என்றார்
இயேசு.

 
பாவமில்லையேல் கல் எறி
 

ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

 

உள்ளம் வெளுக்கட்டும்

 

நல்லவற்றின்
கருவூலத்தில்
தீயவை இடப்படுவதில்லை,
தீயவற்றின்
தோட்டத்தில்
நல்லவை நடப்படுவதுமில்லை.

உள்ளத்தில் உள்ளவை
நல்லவை எனில்,
எடுக்கப்படுபவையும் நல்லவையாகும்.

உன் வார்த்தைகள்
உள் மனசின் சத்தங்கள்.

உன் வார்த்தைகள்
உன்னை வாழ்த்தும் ஒலிகள்,
அல்லது
உன்னை வீழ்த்தும் பொறிகள்.

வார்த்தைகளை அன்பில்
வார்த்தெடு.

உன்
வார்த்தைகளின் நெறியில்
நீ
தீர்ப்பிடப்படலாம்.
இயேசு சொன்னார்.

உண்மை தான்.
தாழம்பூக் கூடையில்
வாழைப்பூ வாசம் வருவதில்லையே.

வாசம்
வாசம் செய்யும் மனம் தானே
நேசர் நம்மிடம் வேண்டுவது.

 
உண்மையான செபம்

 

இருவர் ஆலயம் சென்று
ஆண்டவனிடம் செபித்தனர்.
ஒருவன்
பரிசுத்தனாய் பறைசாற்றப்படும்
பரிசேயன்
ஒருவன் பாவியென்று அழைக்கப்படும்
ஆயக்காரன்

பரிசேயன் செபித்தான்.
ஆலய பீடத்தைத்
தொடும் தூரத்தில் நின்று
அலட்சியமாய் செபித்தான்.

அவனுடைய செபம்
அகந்தையின்
அறிவிப்புக் கூட்டமாய்
கர்வத்தின்
திருவிழாவாய் தெரிந்தது.

ஆண்டவரே
நான் நல்லவனாய் இருப்பதற்கு
நன்றி.

நோன்புகளில் நான்
நாள் தவறியதில்லை,
காணிக்கையில் நான்
கணக்கு தவறியதில்லை.

ஆயக்காரனைப் போல
பாவியாய் என்னை
படைக்காததற்கு நன்றி.

ஆயக்காரன் செபித்தான்
ஆலயத்துள் நுழையாமல்
முற்றத்தில் நின்றே
குற்றத்தை ஒப்புக்கொண்டு
தலைகுனிந்தான்.

மார்பில் அடித்து
மண்டியிட்டான்.

ஆண்டவரே
நான் பாவி
என்மேல் இரக்கம் வையும்.

இருவரின் செபத்தில்
இந்த
இருவரி செபமே
இறைவனுக்கு ஏற்புடையதாயிற்று.

தன்னை
புனிதனென்று சொல்லிக் கொள்பவன்
பித்தனாய் இருக்கிறான்,
பாவி என்று ஒத்துக் கொள்பவன்
மனிதனாய் பிறக்கிறான்.

விளம்பரங்களின் விளக்கு வெளிச்சம்
இதயத்தை இன்னும்
இருட்டாக்கிவிடும்.
தாழ்ச்சியின் பீடத்தில் மட்டுமே
தலைசாயுங்கள்
 

புறம் அல்ல அகமே அவசியம்
 

இயேசுவின் மேல்,
இன்னொரு குற்றச்சாட்டு
எறியப்பட்டது.

உம் சீடர்கள்,
உணவு உண்ணும்போது
கை கழுவுவதில்லை.
இது
பரம்பரைச் சட்டம்
மீறுவோர் எல்லாம் மட்டம்.

அடையாளங்களால்
அடையாளம் காட்டப்பட்டவர்கள்
ஆண்டவனிடம்
படபடத்தனர்.

இயேசு சொன்னார்,
ஆண்டவன் கட்டளையை
நீங்கள் தான்
அவமதிக்கிறீர்கள்.

தாய் தந்தையரை
போற்றச் சொன்னது
கடவுளின் வேதம்
நீங்களோ
மாற்றுக் கொள்கை காட்டுகிறீர்கள்.

என் சொத்தெல்லாம் ஆண்டவனுக்கு
என்று
நேர்ச்சி கொடுத்தால்,
நோயில் அமிழ்ந்து
பெற்றோர்
பாயில் படுத்தாலும்,
உயிர் விட்டாலும் பாவமில்லை
என்கிறீர்கள்.

உண்மை அன்புக்கு முன்
உங்கள் சட்டங்கள் செல்லாது.

நீங்கள்,
தவறான வரைபடம் வைத்துக் கொண்டு
இல்லாத தேசம்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

வெளிவேட வாழ்க்கைக்காரர்களே
உங்கள்
உதடுகளுக்கும்
உள்ளத்துக்குமிடையே,
ஏன் இத்தனை தூரம் ?

குருடனுக்கு வழிகாட்டும்
குருடனாய் இருக்கிறீர்கள்
நீங்கள்.
உங்கள் சட்டங்களுக்கோ
கண்களே இல்லை

அன்பே முக்கியம்.

மனிதனுள் செல்வது
மனிதனை மாசுபடுத்தாது.
உள்ளத்திலிருந்து
புறப்படும் ஊனமான உண்மைகளே
அவனை
மாசு படுத்தி அழிவில் தள்ளும்.

களைய வேண்டிய
களவு,
போக்க வேண்டிய
பேராசை,
தீர்க்க வேண்டிய
தீச்செயல்,
விலக வேண்டிய
வஞ்சகம்,
விலக்க வேண்டிய
விபச்சாரம்,
செல்ல வேண்டிய
செருக்கு
மறைய வேண்டிய
மதிகேடு

பொல்லாத பொறாமை
இழுக்கு தரும் பழிப்புரை
எல்லாமே
உள்ளிருந்து வெளிவந்து
மனிதனை
தீயவனாக்கி பழிவாங்கும்.

உள் செல்லும் உணவோ
செரிமானம் ஆகி மறையும்.

கரங்களை அல்ல
மனங்களைக் கழுவுங்கள்,
அழுக்கு
உள்ளங்கையில் உள்ளதல்ல
உள்ளங்களில் உள்ளது.

 

நான் யார் அறிவீர்களா ?

 நான் யாரென்று
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒரு பொழுதில்
இயேசு வினவினார்.

போதகர் என்கிறார்கள்
பலர்,
தீர்க்கத்தரிசி என்கிறார்கள்
சிலர்
சொன்னார்கள் சீடர்கள்.

நீங்கள் ?
கேள்வி பிறந்தது இயேசுவிடமிருந்து.

நீர் மெசியா,
கடவுளின் மகன்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விடைசொன்னார் சீமோன்.

இயேசு அகமகிழ்ந்தார்
அவரை
ஆரத் தழுவினார்.

சீமோனே,
உன்னில்
நான் பெருமை கொள்கிறேன்,
உன் விசுவாசத்தின் விழுதுகளில்
என்
திருச்சபையைக் கட்டுவேன்.

உன் பெயர் இனிமேல்
பாறை.
உன்மேல் கட்டப்படுபவை
அஸ்திவாரம் இல்லாமல்
அழிக்கப்படமாட்டாது.

வானகத்தின்
திறவுகோல்கள் இனிமேல்
உன் விரல்களுக்கு
வழங்கப்படும்.

நீ,
மண்ணகத்தில் கட்டுபவை
விண்ணகத்தில் உனக்காய்
கட்டப்படும்.

இங்கே நீ
அவிழ்ப்பவை எல்லாம்
விண்ணகத்திலும் அவிழ்க்கப்படும்.

இயேசுவின் வலிமை வார்த்தைகள்
சீமோனுக்கு அளிக்கப்பட்டது.
திருச்சபையின்
வாசல் திறக்கும் வல்லமை
சீமோனுக்கு இங்ஙனம்
சொந்தமானது.

 சுயபுராணம் செல்வதில்லை

 

நீர் இறைமகனா
கேட்டது கூட்டம்.

அதெப்படிச் சாத்தியம் ?
என்னைப் பற்றி
நானே
சான்று பகர்தல் ?

நான் சுயபுராணச்
சக்கரங்களில்,
சுழன்று கொண்டிருப்பவனல்ல,
என்
வருகைக்கான தயாரிப்பாளன்
யோவான்.

விண்மீன் நடக்க
மின்மினியின்
விளக்கொளி தேவையில்லை

கடலுக்குக்
கால்வாயின்
சாட்சிகள் தேவையில்லை.

ஆனாலும்,
உங்கள் விசுவாசத்துக்காய்
அவர் வார்த்தைகளை
கேளுங்கள். என்றார்.

யோவான்
விடியும் வரை விளக்கெரிப்பவர்,
நானோ
உலகம் முடியும் மட்டும்
உடனிருப்பவன்.

அவர்
சில காலத்துக்காய்
செலுத்தப்பட்டவர்,
நானோ
காலங்களையே செலுத்துபவன்.

நீங்கள்
துருவித் துருவித் தேடும்
மறைநூலுக்குள்
மறைந்திருக்கிறது எனக்கானச்
சான்று.

நீங்கள்
கேட்டிராத பார்த்திராத
வானகத் தந்தையிடமிருந்து
வருகிறது
எனக்கான சான்று.

மோசே என்னைப் பற்றியே
பேசினார்.
யோவான் என்னைப் பற்றியே
பேசுகிறார்.
நீங்களோ
மரத்தைப் பாராட்டி விட்டு
நிலத்தை நிராகரிக்கிறீர்கள்.

மழையில் மகிழ்ந்து விட்டு
வானத்தை விரட்டுகிறீர்கள்.

நம்புங்கள்
என்னை நம்புபவன்
மீட்படைவான்.
மறுப்பவன் மீட்படையான்.
என்றார்.

மெய்யைப் புறக்கணிக்கும்
கூட்டம்,
பேய் பிடித்திருப்பதாய்
பிதற்றியது.

மெய் மெல்ல
புன்னகைத்து நகர்ந்தது.

 

பாதத்தில் பூசப்பட்ட பாசம்

 

பரிமளத் தைலத்தை,
இயேசுவின் பாதத்தில்
பூசினாள் பெண்ணொருத்தி.

இயேசுவின்
பொதுநலப் போதனைகளை
புரிந்து கொண்டிருந்த
சீடர்கள் அவளிடம்
இதை விற்று ஏழைகளுக்கு
அளித்திருக்கலாம்,
இதன் விலை ஏராளம் என்றனர்.

இயேசுவோ,
வேறு விளக்கம் வைத்திருந்தார்.

ஏழைகள் உங்களோடு
என்றும் உள்ளனர்.

இது,
என் சாவுக்கான ஓர்
முன்னுரையே.
அவளை தடுக்கவேண்டாம்
என்றார்.

இயேசுவின் இளமைக்காலம் ஞாயிறு, நவ் 23 2008 

இயேசுவின் பிறப்பு


 
எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.

பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.

கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.

கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.

மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.

மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.

ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?

இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?

ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?

ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.

கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.

சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.

மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.

புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு புதிய ஓர் தாயானாள்.

கணவனாகக் காத்திருந்த
யோசேப்பு அதிர்ந்தார்.

கவலை நெற்றியை தேய்த்தார்.
சந்தேகத்தின்
செந்தீயில் கண்களைத் தீய்த்தார்.

மரியாளின் கற்புக் கதவு
பலவீனமாகி விட்டதா
என பயந்தார்.

திருமணமே முடியாமல்
கரு உருவானதில்
கவலைப் பட்டார்.

வேருக்குள் விழுந்திருக்கும்
விஷயம்
ஊருக்குள் விழுவதற்குள்
மறைவாய் விலக்கி விடுதல்
நிறைவானது என்று
உள்ளுக்குள் முடிவெடுத்தார்.

இரவுத் தூக்கத்தில்
கடவுளின் தூதர்
அவருடைய
கனவின் கதவைத் திறந்தார்.
சந்தேகத்தின் கதவை மூடினார்.

தூய ஆவியால்
தாயானவள் தான் மரியாள்
பிறக்கும் பாலனுக்கு
இயேசு என்று பெயரிடு
தூதர் விளக்கினார்.

வந்திருப்பது
அவமானமல்ல,
வெகுமானம் என்பதை
குதூகலத்தோடு குறித்துக் கொண்டார்.

கடவுளின் சித்தம்,
எனக்குத் தேவை நித்தம் என்றார்,
ஓர்
வரலாற்றுக்குத் தந்தையாகும்
வரம் பெற்றார்.

 கன்னிக்குப் பிறப்பான்
மீட்பின் மகன் !
தீர்க்கத் தரிசனங்களின்
தீர்க்கமான முடிவின் துவக்கம் தான்
இறைமகன் வரவின் விளக்கம்.

பிறப்பின் காலம் பிறந்தது.
அப்போது
வான் தந்த நட்சத்திரம்
ஒன்றுக்கு
வால் வந்தது.

வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
செதுக்கிய முனைகளோடு
நகர,
நட்சத்திரம் வால் நீட்டி
சூரியன்
பூமியில் இருக்கிறான் என
சுட்டிக் காட்டியது.

தூரத்து விடிவெள்ளி ஒன்று
ஈர நிலா
பூமியில் இருப்பதை
விரல்கள் நீட்டி விளக்கியது.

இயற்கையே இறங்கி வந்து
குடிலில் கிடந்த
கொட்டில் மகனைச் சுட்டியது

 
ஏரோதின் சூழ்ச்சி

 

மேய்ப்பன் பிறப்பு
ஆடு மேய்க்கும் சிலருக்கு
தூதர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஞானியர் சிலரின்
ஞானங்களில்
அச்செய்தி அறிவுறுத்தப்பட்டது

கீழ்த்திசை ஞானிகள்
மேல் நோக்கினர்,
வானவன் தேவன் கீழ்நோக்கினார்.
ஒளியின் வடிவம்
இருளிள் இடிவுக்காய்
இறங்கியது அவர்கள் இதயங்களில்.

யூதேயா அரண்மனையின்
அரியாசன மஞ்சங்களில்
இடியென இறங்கியது
இயேசுவைத் தேடி வந்த
ஞானிகளின் வார்த்தைகள்.

“யூதர்களின் அரசன் எங்கே ?”
விண்மீன் ஒன்று வித்தை செய்கிறது,
பூமிப் பந்துக்கு இதோ
புது ராஜா பிறந்திருக்கிறாரே.
அந்த
“யூதர்களின் அரசன் எங்கே ?”

ஏரோதின் இதயத்துள்
விரோத முள் தைத்தது.

என் சாம்ராஜ்யத்தின்
எல்லை ஆள
இன்னொரு அரசனா ?

என் தோட்டத்து
மலர்களின்
மாலைகளுக்காய் இன்னொரு கழுத்தா ?

என் வாளும் கேடயமும்
இன்னொரு தோளுக்கா ?

இல்லை,
இதை அனுமதிப்பது ஆகாது.

ஒற்றைக்கதிரவன் நானே.
என்னை எடுத்து
எரியும் குழிக்குள்
எறியும் அவன் யார் ?

நீள் கடலை
உறிஞ்சப் பிறந்த அந்த
பிஞ்சுப் பஞ்சு எங்கே ?

நெஞ்சில் பாய்ந்த ஈட்டியை
சூசகமாய் மறைத்து விட்டு
சாகசமாய் பேசினான் மன்னன்.

தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும்
அவசரமாய் அழைக்கப்பட்டனர்
அரசவைக்கு.

மெசியா பிறந்தால்
எங்கே பிறப்பார் ?
அரண்மனையில் எழாத
அழுகுரலுக்குச் சொந்தமான
அரச குழந்தை
எங்கே பிறந்திருக்கலாம்
சொல்லுங்கள்.
மன்னன் வினவினான்.

அவை
ஏட்டுச் சுருளை விரித்தது.
நரைத்த தலையுள்
நுரைத்த அறிவை பிரித்தது.

பெத்லேகேமில் பிறக்கலாம் பிதாமகன்,
இறைவாக்கினர் வாக்குகள்
இறவா வாக்குகள்
அவை அதைத்தான் அறிவிக்கின்றன.

தீய்க்குத் தூபமிட்டன
அவர்களின் தீர்மானம்.

அரசன் அசரவில்லை,
ஞானிகளிடம்
அகத்து அழகு
முகத்தில் தெரியாமல் பேசினான்.

ஞானிகளே.

பெத்லேகேம் பேறுபெற்ற இடம்
அரசனைப் பெற்றதால்
பெருமைப்படப் போகும் இடம்.

செல்லுங்கள்.
அரசனைக்கண்டு வாருங்கள்,
நானும்
ஆராதிக்க ஆயத்தமாகிறேன்.

கண்டு வந்து சொல்லுங்கள்
நான்
கண்டு வணங்க வேண்டும்.

ஞானிகள் விலக,
சூட்சும அரசவை
மெளனத்துள் மண்டியிட்டது.

மூர்க்கத்தனமான ஓர் முடிவுக்காய்
வாள்கள் உறைக்குள்
அசையாதிருந்தன.

அரசவையின் இரகசியங்கள்
அறியாமல்
ஞானிகள் நடந்தனர்.
வானம் வழிகாட்ட
பூமியில் சுவடுகள் நீளமாயின.

குளிரில் உடல்கள் குறுகுறுக்க
இதயம் எதிர்பார்ப்பில்
எரிந்து கொண்டிருந்தது.

இதோ
வால் நட்சத்திரம்
நடப்பதை றுத்தி,
நடப்போரைப் பார்த்தது.

ஞானியர்
ஆனந்தக் கடலின்
அலைகளாய் அலைந்தனர்.

வானத்தின் வால்பிடித்து
ஞாலத்தின் சிறப்பருகே
ஞானியர் வந்தனர்.
o

மாட்டுத் தொழுவம் ஒன்று
மீட்பின் மகனுக்காய்
மடிதிறந்து படி அமைத்திருந்தது.

நாடுகளின் மெத்தைகள்
அரசனுக்காய் விழித்திருக்க,
பெத்லேகேம்
தொழுவமொன்று
தொழுகை பெற்றது.

வைக்கோல் கூட்டுக்குள்
ஓர்
வைரம் வளர்க்கப்பட்டது
வரலாற்றில் இது ஒரே முறை.
வரலாறே இவருக்கு விரல் முனை.

முத்துக்கள் எப்போதுமே
மாளிகைகளில் பயிராவதில்லையே,
சிப்பியில் தானே
அவை சிரம் கொள்கின்றன.

தலை தாழ்த்தித் தரை வீழ்ந்து
வணங்கினர் ஞானியர்.
பொன், தூபம், வெள்ளைப் போளம்
வழங்கினர் ஞானியர்.

பிறந்ததன் பயனாய்
உயர்ந்ததை வழங்கினர்.

 
கனவுகள் பேசுகின்றன

 

இரவின் ஜாமம் அதிகரித்தபோது
ஞானியர்க்கு
நித்திரையின் ஆழத்தில்
கனவொன்று கசிந்தது.
‘ஏரோதை சந்திக்காமல் செல்க’ என்று
கடவுளின் தூதர் கட்டளையிட்டார்.

பாதைகள் எல்லாம்
பாதங்களால் தானே
பரிசீலிக்கப் படுகின்றன.
ஞானியர் பாதை மாற்றி பயணம் சென்றனர்.

ஞானியர் சென்றபின்
தேவதூதரால் யோசேப்பு
எகிப்துக்குச் செல்
என எச்சரிக்கப் பட்டார்.

தொழுவத்தில் இருந்த
சிறு சூரியனை எடுத்துக் கொண்டு
எகிப்தின் எல்லைக்கு
மீட்பர் குடும்பம் இரவில் விரைந்தது.

காற்றைக் கொய்யும் கத்தியை
எந்தப் பட்டறை
தீட்ட இயலும் ?
தண்ணீரைக் கொல்லும் வாளை
எந்தப் போர்க்களம்
எடுத்து வர இயலும் ?

ஞானிகளுக்காய் காத்திருந்த
ஏரோது எரிச்சல் கொண்டான்.
ஏமாற்றப் பட்டதைக் கேட்டு
எரிமலையானான்.

அவனுடைய இதயம்
வெறியில் நிறம் மாறியது.
தீப் பொறியாய்
கட்டளைகள் கட்டவிழ்ந்தன.

பெத்லேகேமின் வீதிகளில்,
சுற்றி இருக்கும் நாடுகளில்,
இரண்டு வயதுக்குட்பட்டவரெல்லாம்
இறக்கட்டும் என்றான்.

அரச ஆணை
புரவிகளில் மரணத்தை ஏற்றி
பெத்லேகேமுக்குப் பறந்தது.

முளைவிடத்துவங்கிய செடிகள்
யானை நசுக்கியதாய்
உயிர் புதைத்தன.

சின்ன ரோஜாக்களின் மேல்
நீளமான வாள்கள்
அகழ்வாராட்சி செய்தன.

எல்லா வண்ணப் பூக்களும்
குருதியில் தோய்ந்து
சிவப்பாய் சமாதியாயின.

பெத்லேகேமின் வீதிகளில்
ஒப்பாரிகள்
உச்ச வேகத்தில் உலவின.

எரேமியா இறைவாக்கினர்
என்றோ உரைத்தது
இன்று உறைத்தது.

 

தீர்க்கத்தரிசனம்

எட்டாம் நாள் விடிந்ததும்
யெருசலேமில்,
பரலோகப் பிரதிதிக்குப்
பூலோகத்தில் பெயர் சூட்டினர்.

இயேசு!!.

பிறக்கும் முன்பே
வானதூதரால் நவிலப்பட்ட
நாமம்.

மனிதரின் பாவங்களை
தீர்ப்பவர்
என்பதே அதன் பொருள்.

மீட்பின் மனிதர் என்பதே
அதன் பொருள்,
மீட்பிற்காய் வந்தவரே
பரம் பொருள்.

தலைப்பேறான தனையனை
ஆண்டவனுக்காய்
அர்ப்பணித்தல்
வழுவாத வழக்கமங்கே.
ஜோடிப்புறாக்களோ,
மாடப்புறாக்களோ பலியிடல்
அர்ப்பணித்ததன் அடையாளமங்கே.

ஆலயத்தில் அமர்ந்திருந்தார்
சீரிய பக்தியின் சின்னமான
சிமியோன்.
மெசியாவின் வருகைக்காய்
மெய்வருத்தும் மெய் பக்தர்.

ஆண்டவரைப் பார்த்தபின்பே
ஆவி அகலும் அகத்தை விட்டென்று
ஆவியானவரால்
அறிவிக்கப்பட்ட
பக்தியில் பித்தர்.

இயேசுவைக் கண்டவுடன்,
சிமியோனின் புருவங்கள்
உருவங்கள் மாறின,
உள்ளுக்குள் ஓராயிரம்
உற்சாக மலைச்சரிவுகளில்
ஒய்யார பனிச்சரிவுகள்.

கரங்களில் கர்த்தரை ஏந்தி,
சிரங்களில் சுரங்களை ஏற்றி
பாடினார் சிமியோன்.

இனிமேல்
சாவு எனக்கு சங்கடமில்லை
வாழ்வை தரிசித்து விட்டேன்.

புறவினத்தாரின் இருளகற்றும்
புது விளக்கை,
பூமிக்காய் பிறந்திருக்கும்
பொது விளக்கை,
என் கண்கள் கண்டுகொண்டன.

அல்லி மலரை அரையில் தாங்கி
முல்லை நிலவில் முகத்துடனே
தங்கத் தாமரை
தரையிறங்கியதாய்
அன்னை மரி அருகிருந்தாள்.

சிமியோன் தாயிடம்
தீர்க்கத் தரிசனம் பரிசளித்தார்.

இதோ,
இப்பாலன்
இஸ்ராயேலரின் வாழ்வை
காயப்படுத்தாமல் சாயப்படுத்துவான்,

பலருடைய
வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
வார்த்தை வாள்களால்
தீர்ப்பினைத் தருவார்.

உமது உள்ளத்தையும்
ஓர் வாள் ஊடுருவும்
அப்போது
பலருடைய உள்ளங்களிலிருந்து
எண்ணங்கள் வெளிவரும்.

மரியாள்
புரியாமல் பார்த்தாள்.

அப்போது
ஆலயத்தில் வந்த
ஆசேர் குலத்து அன்னாவும்
மழலையைக் கண்டதும்
மீட்பரென்றறிந்து மகிழ்ந்தாள்.
வானகத்து தேவனை
வாயார புகழ்ந்துரைத்தாள்.

சட்டங்களின் படி
சம்பிரதாயங்கள் செய்தபின்,
கலிலேயா வின் நாசரேத்துக்கு
திருக்குடும்பம்
திரும்பிச் சென்றது.

இயேசு வளர்ந்தார்.

அறிவின் ஆழம் அடைந்து,
ஞானத்தினால் ஞாலம் குடைந்து,
கடவுளுக்கும் மனிதருக்கும்
உகந்தவராய்
உள்ளுக்குள் உரமேறினார்.

மனித வடிவ மனுமகன்
யூத குலச் சட்டங்களை எல்லாம்
அக்குவேறு ஆவேறாய்
அலசித் தேர்ந்தார்.

அறியாத ஒன்றுக்கு
எதிராகப் பாய்தல்
சரியல்ல என்று
சரியாய் கணித்திருந்தார்.

 
 

ஞாலத்தில் சிறந்த ஞானம்

 
பாஸ்கா விழாவில்
பங்கெடுக்க
ஆண்டுக்கொரு முறை
யெருசலேம் யாத்திரை
தவறாமல் நடந்தது.

பாலன் இயேசுவின்
பன்னிரண்டாம் பருவத்தில்,
ஒரு முறை
திருக்குடும்பம்
திருவிழா சென்றது.

திருநாட்கள் முடிந்தபின்
திரும்பியது பயணம்
நாசரேத் நகர் நோக்கி.
இயேசுவோ
யெருசலேம் ஆலயத்திலேயே
இருந்து விட்டார்.

உண்மை அறியாத
பெற்றோர்
பயணிகளோடு பாலகன்
முன்னால் சென்றிருக்கலாம்
என
பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

இரவிலும் இயேசுவைக்
காணாத
பெற்றோர் மனதில்
பயம் விழித்தெழுந்தது.

பயணிகள் கூட்டத்தில்
பாலனைக் காணாமல்
பரிதவித்து,
பதட்டத்தின் படியேறி
யெருசலேம் விரைந்தனர்.

மூன்று நாள் தேடலின் முடிவில்
ஆலயம் ஒன்றில்
பாலனைக் கண்டனர்.

இயேசு அங்கே,
போதகர்களின் போதனைகளின்
விலா எலும்புகளை
உருவிக்கொண்டிருந்தார்,
கேள்விகளால் போதகர்களை
துருவிக்கொண்டிருந்தார்.

பிரமிப்பின் பிரமிடுகளில்
போதகர்கள்
புதைக்கப்பட்டுக் கிடந்தனர்.

சின்ன மொட்டுக்குள்
அறிவின் கட்டுக்களா ?
உள்ளங்கைக்குள்
உலகின் பூட்டுக்களா ?

இந்த நதி,
பிறக்கும் போதே கடலானது
எப்படி ?
இந்த அருவி மட்டும் எப்படி
இலக்கணம் கற்காமல்
உச்சி நோக்கி ஓடுகிறது ?

இத்தனை காலமும்
சாம்ராஜ்யம் ஆண்ட சட்டங்களை
ஓர்
பிஞ்சுக் கரம்
பஞ்சாய் கிழிக்கிறதே !!

இவனென்ன
அறிவு மேகங்களை அடுக்கி வைத்த
அகலமான வானமா ?
இல்லை
பிறக்கும் போதே
செழித்துக் கிடந்த
அடர்த்தியான வனமா ?

வியப்பின் விரல் நுனிகள்
நடு நடுங்க,
பயத்தின் முதல் துளி
அவர்களிடம் பரவியது.

இயேசுவின் தாய்
பாசத்தில் குரல் கொடுத்தாள்.
தனியே நீ
தங்கியதென்ன மகனே,
கண்ணீரின் காலத்தை
தந்ததென்ன மகனே…

பாலன் இயேசு பார்த்தார்,
இது என்
தந்தையின் இல்லமம்மா,
இது தான் இனியென்
விருப்பமான இருப்பிடமம்மா.

எரியும் கவலையில்
திரிந்த மரியாள்
புரிந்தும் புரியாமலும்
பாலனைப் பார்த்தாள்.

தாயின் தடுமாற்றம் கண்ட
நாயகன்
கரம் பற்றி,
நாசரேத் நகர் நோக்கி
நடந்தார்.

சிலகாலம்
தாயுடனே தங்கி,
பிள்ளையின் கடமையை
பிழையின்றி செய்தார்.

 
ஒளிக்குச் சான்று

 
ஆதியிலே வாக்கு இருந்தது,
அது
கடவுளோடும் கடவுளாயும்
இருந்தது.

படைப்புகள் எல்லாமே
அவரால் தான்
படைக்கப் பட்டன,
அவருடைய அறிவுக்கு அப்பால்
எதுவும் அறியப்படவில்லை.

மனிதனின் வாழ்வு
அவரோடு வாசம் செய்தது,
அது
மனிதரின்
அக இருட்டுக்களை அழிக்கும்
ஒளியாய் மிளிர்ந்தது.

அந்த ஒளியை வீழ்த்த
இருளின் ஆயுதங்களுக்கு
வலு இல்லாமல்
வீழ்ந்தது.

யோவான் !!!

ஞானத்தின் விளக்குக்கு
ஞானஸ்நானம்
தரும் பாக்கியம் பெற்றவர்.
ஒளிக்குச் சான்று பகரவே
அவர் வந்தார்,
ஆனால் அவர் ஒளி அல்ல.

ஒட்டக மயிராடை
கட்டியவர்,
வார்க்கச்சை ஒன்றை
வரிந்தவர்.
வெட்டுக்கிளிகளை உணவாக்கி
காட்டுத்தேனுடன் கலந்துண்டவர்.

அவருடைய பிறப்பே
ஓர்
அதிசயத்தின் ஆரம்பம் தான்.

செக்கரியா என்னும்
குருவுக்கும்
எலிசபெத்து என்னும்
ஆரோன் வம்ச
மங்கைக்கும் பிறந்தவர் அவர்.

நேர்மையின் வேர்வைக்கு
நிலமாய் இருந்தது
அவர்களின் இதயம்.

வருடங்கள்
தன் முத்திரை குத்திக் குத்தியே
முதுமையை
முத்தமிட்டவர்கள்.

ஓர்
மழலை தன் இடை தொடவில்லையே
எனும்
இடி போன்ற சோகத்தை
மடி மீது குடி வைத்திருந்தனர்.

கடவுளின் தூதர்
செக்கரியாவுக்குத் தோன்றி
இதோ உம்
வேண்டுதலின் தூண்டுதல்
ஆண்டவனை தீண்டியாயிற்று.
ஓர்
உத்தமர் உன் மகனாவார்

வாழ்வுக்கான வழி
நிகழ்கால அழுக்களுக்குள்
அமிழ்ந்து கிடக்கிறது,
அவர் வந்து
பாதையை புலப்படுத்துவார்
பதர்களையும் பலப்படுத்துவார்.

யோக்கியமான அவருக்கு
யோவான் என பெயரிடும்.
என்றார்.

செக்கரியா
சந்தேகத்தில் சஞ்சரித்தார்.
எங்கள்
கல்லறை நோக்கிய பயணத்தில்
எப்படிக்
கருவறைக் கதவு திறக்கும்.

சருகுக்குள் எப்படி
விருட்சம் இருக்கும் ?

அந்தி சாய்ந்த பின்பா
ஆதவன் உதயம் ?
பிந்தி வந்து சேருமா
முதுமைக்கு ஓர் பந்தம் ?
என வினவ.

வாக்கு நம்பாத உமது நாக்கு
இனிமேல் பேசாது.
சொன்னது நடக்கும்,
அதன் பின்பே
உம் வாயில் வார்த்தை பிறக்கும்.
என்றார்.

அப்படிப் பிறந்தவர் தான்
யோவான்,
இயேசுவுவின் பிறப்புக்கு
முன்னுரை சொன்ன
கபிரியேல் தூதராய்
முன்னுரை சொல்லப்பட்டவர்.

இயேசுவின் தாயால்
வாழ்த்துச் சொல்லப் பட்ட
பெருமைக்குரியவர்.
அவர்
இயேசுவுக்கு முன்னோடி.

இயேசு என்னும்
ஒளிக்குச் சான்று பகர்வதே
அவருக்கு அளிக்கப் பட்ட பணி.

உலகை உருவாக்கிய சிற்பியை
உலகமே
அறிந்து கொள்ளவில்லை,
தன்னைத் தீட்டிய ஓவியனை
புறந்தள்ளிய
ஓவியமாய்க் கிடந்தது அது.

ஆனால்,
ஆண்டவருக்கானவர்கள் அவரை
அறிந்து கொண்டு
பரமனில் மீண்டும் பிறந்தார்கள்.

இது
உடல் சார்ந்த பிறப்பு அல்ல,
ஆன்மா சார்ந்த பிறப்பு.

முட்டை உடைத்து
பிறந்த நாகம்,
மீண்டும் சட்டையுரித்தல்
இயற்கை திருப்பம்.

கருவில் பிறந்த மனிதன்
மீண்டும்
திருவில் பிறத்தல்
இறைவன் விருப்பம்.

யோர்தானின் கரையில்
யோவான் விசுவாசம் விதைத்தார்.
விரியன் பாம்புக் குட்டிகளே
சினத்துக்குக் தப்புவிக்க
நீருக்குள் வாருங்கள்.
ஞானஸ்நானமே மீட்பின் முதல் நிலை.

முதல் நிலை இல்லாமல்
திரு நிலை இல்லை.

உங்கள் உள்ளங்களை
உழுதிடுங்கள்,
நல்லெண்ணமெனும் உரமிடுங்கள்,
நற்செயல்களென்னும் விதையிடுங்கள்.

செயல்களற்ற வார்த்தைகள்
செத்தவார்த்தைகள்,
பிணம் தின்னும் கழுகுக்கு
பிணத்துள் வித்தியாசம் பெரிதல்ல.

அடிமரத்துக்கு கோடரி வைத்தாயிற்று
கிளைகளின் கனிகளுக்காய் இனி
உச்சாணிக்கு
ஏணி சாய்க்காதீர்கள்.

 
திருமகனுக்கு திருமுழுக்கு

 யோவானைக் குறிவைத்து
குருக்கள் வந்தனர்,
நீ என்ன மெசியாவா ?
எலியாவா ? இல்லை
தூதர்கள் சொல்லிச் சென்ற
இறைவாக்கினனா ?
அடுக்கடுக்காய் கேள்விகளால்
அடித்துப் பார்த்தனர்.

யோவான் மறுத்தார்,
நான் யாருமல்லேன்,
ஆதியின் வார்த்தை
மனித அவதாரத்தில் வந்துள்ளது,
நான் வெறும்
சான்று பகர்பவனே,
சரித்திரம் படைப்பவனல்ல.

என் தண்ணீர் திருமுழுக்கில்
நீங்கள்
தடுமாறிப்போகிறீர்களே,
நீரூற்றி நிறம் கொடுப்பவன் நான்.
நெருப்பூற்றி முழுக்கு கொடுப்பவர்
எனக்குப் பின்னால் வருகிறார்.

நான் செய்தியாளன்.
செருக்குற்றோரைச் சிதறடிக்கும்
அவர் சிறப்புக்கு முன் அல்ல,
அவர் செருப்புக்கு முன்னும்
நான்
மிகச் சிறியவன் !

அவருக்கு
பதர்களோடும் கதிர்களோடும்
பரிச்சயம் இருக்கிறது,
பத்தாயத்துக்கு கோதுமையை அனுப்பி
பதரின் தலைக்கு தீயிடுவார்.

நீ கதிராய் இருந்தால்
அவர் ஒளியில் கனிதருவாய்.
வைக்கோலாய் இருந்தால்
எரிந்துபோவாய்.

வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வீரியத்துக்குப் பிறந்த
சுருள் வாளாய்,
கூட்டத்தின் நெஞ்சம் சென்று
தஞ்சம் கொண்டது.

இயேசுவும் வந்தார்,
யோவானிடம்
திருமுழுக்கு பெற.

வரம் தரும் பரமன்
வரம் வேண்டி வந்ததாய்
தடுமாறினார் யோவான்.

கடவுளே
நீர் விண்ணகத்தின் விளக்கு
என்னிடம்
திருமுழுக்கு பெறுவது
இழுக்கு உமக்கு.
நான் வெறும்
மனித அழுக்கு என்றார்.

இயேசு புன்னகைத்தார்.
என்
பணி வாழ்வை
நீர் தான் துவக்க வேண்டும்
நீரால் துவக்க வேண்டும்
என்றார்.

யோவான்
பிரபஞ்ச பாக்கியம் பெற்றார்.
இயேசு
ஞானஸ்நானம் பெற்றார்.

திடீரென்று,
ஒற்றையாய் இருந்த வானம்,
முதுகு கிழிய,
வெள்ளைப்புறா வடிவில்
பரிசுத்த ஆவி கீழிறங்க,

“இவரே என் மகன்,
 இவரில் நான் பூரிப்படைகிறேன்”
வார்த்தைகள் வான வாயில் புறப்பட,
இயேசு அடையாளப்படுத்தப்பட்டார்.

தூய ஆவி
புறாவின் வடிவில்
இயேவில் இறங்க
தண்ணீருக்கே தலைசுற்றியது.

மொத்த ஜனமும்,
மொத்தமாய் அதிர்ந்தது,
கால்கள் வலுவிழக்க
பூமியில் முழங்கால் படியிட்டது.

 
உன்னத உரையாடல்.


 
செபம்,
அது கடவுளோடு கொண்ட
உன்னத உரையாடல்.

செபம்,
அது
சூல் கொண்ட சோகங்களை
கால் கொண்டு நசுக்குமிடம்.

செபியுங்கள்,
உள்ளுக்குள் உற்சாகம்
அலையாய் புரண்டாலும்,
நெஞ்சுக்குள் ஓர் சோகம்
மலையாய் அரண்டாலும்,
கண்களை மூடி செபியுங்கள்.

செபம்,
வேண்டுதல்களின் சுருக்குப் பைகளை
விரிக்கும் இடமல்ல,
அது
இதயத்தின் சுருங்கிய தசைகளை
நிமிர்க்கும் இடம்.

சோகத்தின் தள்ளுவண்டிகளை
மட்டுமே
செபத்தின் சக்கரங்கள்
தூக்கிச் சுமப்பதில்லை,
அது சந்தோஷப் தோணிகளுக்கான
துடுப்பையும் தயாரிக்கும்.

செபம்,
அது ஓர் உற்சாகமான உணர்வு.
நாளைய வாழ்வை
நெறிப்படுத்தும் நிறைவு.

இயேசு சொன்னார்,
மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.
 

சாதனைக்கான சோதனைக்காலம்
 

இயேசுவும் செபித்தார்.
நாற்பது நாட்கள் நோன்பிருந்தார்.

சோதனைகளின் காலுடைத்து
வருபவர்களால் தான்
வேதனைகளின் சங்குடைக்க இயலும்.

இயேசுவும் சோதிக்கப்பட்டார்.
அலகையினால்.

நாற்பது நாள் நோன்பில்
இயேசு,
பசியால் உண்ணப்பட்டார்.

அலகை சொன்னது.
நீதான் தேவ மகனாயிற்றே !
இதோ கல்,
இந்தக் கல் கொண்டு
அப்பம் செய்,
அப்பம் மெல் பசியை வெல்.

புன்முறுவலோடு பதிலுரைத்தார் பரமன்.
அப்பத்தினால் மட்டுமே
மனிதன் வாழ்வதில்லை,
ஆகாரங்கள் உடனடித் தேவையின்
ஊன்றுகோல்கள்.
வாழ்வுதரும் வார்த்தைகளே
ஊற்று நீர்.
வயிற்றுக்கு மட்டுமாய் வாழ்வது வாழ்வல்ல,
மீட்புக்காய் வாழ்வதே வாழ்வு.

அகல மறுத்த அலகை சொன்னது,
இதோ,
உலகனைத்தும் உனக்குத் தருவேன்,
என்னை வணங்கு.

நீ காணும்
நீள் வளங்கள் எல்லாம்
என் அரசவையின் பொக்கிஷங்கள்.

மெலிதாய் சிரித்து
மனுமகன் சொன்னார்.

உன்
கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே
வணங்கு என்பதே இறை வாக்கு.
இவ்வுலகின் செல்வங்கள்
என்னை
எள்ளளவும் வெல்லாது,
உன் ஆசை காட்டும் வேலை
என்னிடம் செல்லாது.

முயற்சியில் தளரா அலகை,
ஆலய உச்சி ஒன்றில் ஆண்டவனை
அழைத்துச் சென்றது.
இங்கிருந்து கீழே குதி,
நீ வான் ஆள்பவர் என்றால்
வானதூதர் உன்னை தாங்கிக் கொள்வர்.

இயேசு அலகையை நோக்கினார்,
உன்
ஆண்டவரைச் சோதியாமல்
அகன்று போ.
கண்டிப்பின் வார்த்தைகள்
நொண்டியடிக்காமல் வந்தன.

தோல்வியின் பாரம் முதுகில் ஏந்தி
அலகை அகன்றது.

சோதனைகள்.
வாழ்வின் மீது விழும்
முரட்டுத்தனமான அடி.
சோதனையின் அழைப்பை ஒதுக்கி
பிழைத்து வருவதே பெருமை.

ஆசைகளின் கூடாரத்துள்
அசை போட்டுக் கிடந்தால்
கால்நடைகளுக்கும்
மானிடனுக்கும் வித்தியாசம் ஏது ?

மனித வாழ்வு,
சோதனைகள் மோதினால்
இலட்சியங்களின்
இலக்குகளை இடம் மாற்றி வைக்கும்.

வயிற்றுக்கான சோதனைகளில்
சில சமயம்,
பொருளுக்கான சோதனைகளில்
பல நேரம்,
புகழுக்கான சோதனையில்
பெரும்பாலும்
என மனிதன்
இடறி விழாத இடங்கள் குறைவே.

மூன்று சோதனைகள்,
மூவொரு இறைவனின் முன்னேயும்
முந்தி விரித்தது,
அவரோ சூரியன் !
மெழுகுக் கால்கள் அவரை
மிதிக்கப் பார்க்கின்றன !.
எரிந்து போவோம் என்பதை
அறியும் அறிவும் இல்லாமல்.

இயேசு வென்றார்.
இயேசுவாய் நின்றார்.
 

பணிவாழ்வுக்காய் பயணியுங்கள்

 

கலிலேயக் கடல்
கரைகளில் ஈரக்காற்றை இறக்கிவைக்க
அலைகளை
அனுப்பிக் கொண்டிருந்தது.

அங்கே இருவர்,
வலைகளை அனுப்பி
மீன்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் பேதுரு,
மற்றவர் அந்திரேயா.

இயேசு
அவர்களைப் பார்த்தார்.
வாருங்கள்,
வலைகளோடும் மீன்களோடும்
வாழ்வோரே வாருங்கள்.

இன்னும் எத்தனை காலம் தான்
நீருக்குள் மூழ்கும்
மீன்கள் பின்னே அலைவீர்கள்,
மீன்கள் பிடித்தது போதும்
மீண்டுமிருக்கும் வாழ்வில்
மனிதர் பிடிக்கலாம் வாருங்கள்.

ஒரே அழைப்பு.
மீனவர்கள் வானவரை
பின்தொடரத் துவங்கினார்கள்.

கடலின் மணல் கைகளில்
கால் சுவடுகள் பதித்து
நடந்து போகும் வழியில்
இன்னும் இருவரைக் கண்டார்.
அவர்கள்,
செபதேயுவின் மகன் யாக்கோபு,
அவரது சகோதரன் யோவான்.

அவர்கள்
வலைகளின் பழுதுகளை
தந்தையோடு அமர்ந்து
திருத்திக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களையும் அழைத்தார்.
வாருங்கள்,
பழுதுகள் வலைகளில் அல்ல
மனங்களின் நிலைகளில்.
சீரமைப்போம் புது
பாரமைப்போம் வாருங்கள்.

தந்தையிடம் வலையை விட்டுவிட்டு
தனையர் இருவரும்
இயேசுவின் பணிக்குள்
இணைந்து கொண்டார்கள்.

அடுத்த சீடருக்கான அழைப்பு
கப்பர்நாகூமில் வந்தது.
வரிவசூலிக்கும் மத்தேயு
வசவுகளை
வசூல் செய்து கொண்டிருந்தபோது
அவருக்கு வந்தது
வாழ்வுக்கானதை வசூலிக்கும் அழைப்பு.

நாணயங்களை சேகரிக்கும் அவர்
நாணயத்தை சேகரிக்க
அழைப்புக்கு அடிபணிந்தார்.

பிலிப்பு,
பார்த்தலமேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
சீமோன் மற்றும்
யூதாஸ் இஸ்காரியோத்து
இவர்களும் அழைக்கப்பட்டனர்.

தனி வாழ்வு சிந்தனைகள்
இனி வேண்டாமென்று,
சுய நல வாழ்க்கையை
கடலுக்குள் கரைத்து விட்டு
அழைக்கப்பட்டவர்
கடவுளின் கரம் பிடித்தனர்.

இயேசுவின் அழைப்பு
அடிமட்ட மக்களின்
வாழ்வுக்கான நெம்புகோலாய் விழுந்தது.
மதவாதிகளை
மதிக்காமல்,
சட்ட வல்லுனர்களை
சட்டை செய்யாமல்,
மாடமாளிகைகளுக்கு
தூது அனுப்பாமல்
ஏழைகளுக்காய் எழுந்தது.

இருக்கைகளின் தேடல்களை
வெறுத்து
இரக்கத்தின் தேடல்களையே
இறைமகன் நடத்தினார்.

 
வலுவாக்கும் அறிவுரைகள்

 

தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை
பண்ணையாளர்களின்
பண்ணைக்கு அனுப்பாமல்,
சிதறிப் போன
ஆட்டுக் கூட்டத்தை சேகரிக்கவே
இயேசு அனுப்பினார்.

இறை வல்லமையை
அவர்களுக்குள்
குறைவின்றி நிறைத்து.

செல்லுங்கள்,
ஓநாய் கூட்டத்து இடையே
செம்மறிகளை
அனுப்புகிறேன்,
சங்கடப் படாதீர்கள்.

சட்டங்களின் ஈட்டிகள் உங்களை
வழியில் தடுக்கும்,
சாட்டைகள் உங்களை
தொழுகைக் கூடத்தில் நிறுத்தி
தோல் கிழிக்கும், வருந்தாதீர்கள்.

என்ன பேசுவதென்று
பதட்டம் வேண்டாம்,
பரிசுத்த ஆவி பேசுவார்,
தயாரித்து வாசிக்கும் தளம் அல்ல
அந்த களம்.
உங்கள் தகுதியை தீர்மானிக்கும்
தளமுமல்ல.
நம் தந்தையின் வார்த்தைகள்
பரவும் இடம்.
அவசியமான போது
அவசியமானவை அருளப்படும்.

அச்சத்தை அவிழ்த்து விட்டு
ஆவியை அணிந்து கொள்ளுங்கள்.

காசுகளைச் சேகரித்து
எடுத்துச் செல்லவேண்டாம்,
உங்கள்
பணிக்கு உணவு
நல்லோரால் நல்கப்படும்.

வெளிப்படாமல்
மூடியிருப்பதும்,
அறிய முடியாதபடி
மறைந்திருப்பதும் எதுவும் இல்லை.
அறிவியுங்கள்,
உங்கள் காதுகளுக்கு நான்
சொல்வதை,
ஊரின் காதுகளுக்குள்
ஊற்றுங்கள்.

என்னையும்,
என் பொருட்டு உங்களையும்
ஏற்றுக் கொள்பவர்களை
நான்
இறுதி நாளில் உறுதியாய் ஏற்பேன்,
மறுதலிப்பவர்களையோ
நான்
மன்னிக்கவே மாட்டேன்.

உங்களுக்கு என் பெயரால்
ஒருகுவளை
தண்ணீர் கொடுப்பவன் கூட,
கைம்மாறு பெறத் தவறான்.

மனங்களைத் தயாரித்த
இயேசு,
அவர்களை
அறுவடைக்காய் அனுப்பினார்,
இதய அறுவடைக்காய்.

%d bloggers like this: