சில நிகழ்வுகள் ஞாயிறு, நவ் 23 2008 

 
நிகழ்வுகள்

யோவான் கொலையாகிறார்

ஏரோது மன்னன்
பிறர் மனை நோக்கிய
பாவத்தில் விழுந்தான்.

அவன் சகோதரன் மனைவி
ஏரோதியாளை,
மோகத்தின் வேகத்தால்
தன்
திருட்டு உறவில் திணித்திருந்தான்.

செய்தி அறிந்த யோவான்
மன்னனிடம் வந்தார்.

முதுகு நிமிர்த்த
மக்கள் மறுக்கும்
மன்னனின் அரியணை முன்
எதிர்ப்புக் குரலை எறிந்தார்

நீ
அவளை வைத்திருக்கலாகாது.
இச்சையின்
கச்சையைக் கழற்றி எறி.
பறவையை
உரிய இடத்தில் பறக்கவிடு.

யோவானின் அறிவுரை
ஈட்டிகள்
ஏரோதின் அரச கர்வத்தைச்
சீண்டியது.
அவன் கோபத்தின் திரியைத்
தூண்டியது.

ஆனாலும்
மக்களின் மனதில்
யோவான் இருந்ததால்
மலைகளை விழுங்கி அமைதியாய்
கிடக்கும்
பெருங்கடலாய் பொறுமை காத்தான்.

யோவான் திரும்பினார்
ஏரோது திருந்தவில்லை.

ஏரோதின் பிறப்பு விழாவில்
ஏரோதியாள் மகளின் நாட்டிய விருந்து.

சபையின் நடுவிலே
வானவில் வளையங்களை
விரித்தாடும் மயிலென
அவள்
நாட்டியச் சுடரில் அனைவரும்
நனைந்தனர்.

மன்னனின் ஆனந்தம்
கொழுகொம்பின்றி
அலைந்தது.

சிறுமியே
எது வேண்டும் கேள்
அதைத் தருவேன் நான்
என்றுரைத்தான் ஏரோது.

சிறுமி ஓடினாள்
தாயை நாடினாள்.

காமத்தில் கட்டுண்ட ஏரோதியாள்
சிறுமியின் நாவில்
நஞ்சு விண்ணப்பத்தை நட்டாள்.

சிறுமி
மன்னனின் முன்னால் வந்தாள்.
“யோவானின் தலையை
கழுத்திலிருந்து கழற்றி
தட்டில் தர வேண்டும்”
என்றாள்.

ஏரோது
திடுக்கிட்டான்.

வண்ணத்துப் பூச்சியின்
வாயிலிருந்து
எரிமலை எண்ணங்கள்
சிதறுமென்று
எதிர்பார்த்திருக்கவில்லை அவன்.

வேறேதும் கேட்கிறாயா?
தடுமாறிய
ஏரோதின் குரலுக்கு முன்
சிதறாத குரலில்
சிறுமி மீண்டும் அதையே சொன்னாள்.

ஏரோது
சங்கடத்துடன் சம்மதித்தான்.

சிறையில் யோவான்
சிரச்சேதம் செய்யப்பட்டார்.

தலையாய பரிசாய்
தலையொன்று தட்டில் விழுந்தது.
ஏரோதியாளின் மனதில்
நிம்மதிப் பூக்கள்
மெல்ல மெல்ல முளைவிட்டன.

யோவான்
தலை இழந்ததில்
நீதி
நிலை குலைந்தது.

 தந்தையின் இல்லம் சந்தையல்ல

 ஓர் முறை
ஆலய வாயிலில்
சந்தடியால்
உந்தப்பட்டால் இயேசு.

வழியை அடைத்து நிற்கும்
வியாபாரிகள்.

விற்பனைக்கு
பலி புறாக்கள்,

சில்லறை மாற்றித் தரும்
சின்னக் கடைகள்,

ஆதாய நோக்கத்தில்
அணி அணியாய்
விற்பனைத் தளங்கள்.

சாந்தத்தின் மைந்தன்
கோபத்தின் கொழுந்தானார்.

வணக்கத்துக்குரிய
இடத்தில்
வணிகமா ?

அமைதியின் இருக்கையான
தந்தையின் இல்லத்தில்
கூச்சல் குழப்பங்களின்
கூட்டுக் குடும்பமா ?

சத்தியத்தின் மைந்தன்
சாட்டையை
சுழற்றினார்.

புறாக்களை
பறக்கவிட்டு,
கடைகளை உடைத்து,
வியாபாரிகளை விரட்டி,
ஆலயத்தின் உள்
அமைதியை அடைத்தார்.

இது
என் வீடு.
என் செப வீடு.

தந்தைக்கான இல்லம்
இது
சந்தைக்கானது இல்லை.

இது
கள்வர்கள் கலந்துரையாடும்
குருட்டுக் குகையல்ல.
விலகிப் போங்கள்.

வெள்ளை மேகம் ஒன்று
வினாடி நேரத்தில்
பெருமழையாய் கொட்டியதாய்,
தென்றல் ஒன்று
கல் தடுக்கி விழுந்ததால்
புயலாய் புறப்பட்டதாய்,

வண்ணத்துப் பூச்சியாய்,
மென்மையான புறாவாய் திரிந்த
இயேசுவின்,
நிறமாற்றம் நிகழ்ந்தது
அங்கே தான்.

சலவை செய்யவேண்டிய கற்கள்
அழுக்கை விற்கும் அவலம் கண்டதால்
இயேசு
சலவைக் கற்களையே சலவை செய்யத்
துவங்கினார் அங்கே.

அமைதியின் சின்னமான
இயேசு
ஆவேச சிங்கமான
நிகழ்ச்சி அது.

யூதர்களின் கோபம்
தொண்டைக்குகை தாண்டி
கர்ஜித்தது.
எந்த அதிகாரம் உனக்கு
இப்படிச் செய்ய,
உன் அதிகாரத்தின் அடையாளம்
என்ன சொல்.

இயேசு சொன்னார்,
இந்தக் கோயிலை இடித்து விடுங்கள்,
மூன்றே நாளில்
கட்டி விடுகிறேன்.

யூதர்கள் சிரித்தனர்,
நாப்பத்து ஆறு ஆண்டுகள்
வியர்வையும் குருதியும்
சரி விகிதத்தில் கலந்து கட்டிய
கோயில் இது,
மூன்று நாளில் கட்டிவிடும் மணல்வீடல்ல.

அவர்கள்
கற்களால் கட்டப்பட்ட கோயிலையே
கர்த்தர் சொன்னார் என்று
சொற்களால்
சொல்லிச் சென்றார்கள்,
இயேசுவோ,
தம் உடலெனும் கோயிலையே
உருவகமாய் சொன்னார்.

 

தேவையானதைத் தெரிந்துகொள்

 

இயேசுவின்
பயணத்தின் வழியில்
மார்த்தா எனும் பெண்ணொருத்தி
இயேசுவை
இல்லம் வரப் பணித்தாள்.

பிழையில்லா
அழைப்புக்கு இணங்கி
பரமனும் வந்தார்.

மார்த்தாவுக்கு
மரியா எனும் சகோதரி,
இயேசுவைக் கண்டதும்
கால்களருகே அமந்து
காதுகளை
கருத்துக்களுக்காய்
திறந்து வைத்திருந்தாள்.

மார்த்தாவோ,
பணிவிடைப் பராமரிப்புகளுக்காய்
அறைகளெங்கும்
அலைந்து கொண்டிருந்தாள்.

வந்தவர்களுக்கு
பந்தி வேண்டும்,
உணவுப் பணிகள்
முடிக்க வேண்டும்.

மார்த்தாவால் தனியே
எல்லாம் செய்ய
இயலாமல் போகவே
கர்த்தரை நோக்கி,

‘இயேசுவே மரியாவை என்
உதவிக்காய் அனுப்பும்’
என்றாள்.

இயேசுவோ,
மார்த்தா…
நீ
தேவையற்றவைகளுக்காய்
உன்
ஆற்றலை அழிக்கிறாய்.

தேவையானது ஒன்றே,
அதை
மரியா தெரிந்து கொண்டாள்.
அது
அவளிடமிருந்து எடுக்கப் படாது.
என்றார்.

கனிகள் வினியோகம்
நடக்கையில்
விறகுகளிடையே துயில்பவன்
வீணனே என்பதை
இருவரும் புரிந்தனர்.

 
மகிழுங்கள்..

 சீடர்கள்
உற்சாகத்தின் பொற்சாடிகளாய்
முகம் மின்ன
அகம் துள்ள
இயேசுவிடம் வந்தார்கள்.

இயேசுவே,
இதோ
உம் பெயரால் நாங்கள்
புதுமைகள் செய்கிறோம்,
பேய்களைத் துரத்துகிறோம்
என
மகிழ்ந்தார்கள்.

கடல்களை நோக்கிய
பயணத்தில்
துளிகளைக் கண்டே சீடர்கள்
துள்ளுவதைக் கண்ட
இயேசு
புன்னகையுடன் பேசினார்.

வானிலிருந்து விழும்
மின்னல் போல
சாத்தான் மறையக் கண்டேன்.

மகிழுங்கள்
களிகூருங்கள்.

பேய்களை துரத்தும்
பெருமைக்காக அல்ல,
விண்ணகத்தில் பெறப்போகும்
வாழ்க்கைக்காக
என்றார்.

 
குள்ளமான சக்கேயு உயரமாகிறான்

 

யெரிக்கோ வழியே
இயேசு சென்றார்.

சக்கேயு எனும் ஓர் செல்வன்
உருவத்தில் ஒரு குள்ளன்
உள்ளத்தால் அவன் கள்ளன்.

இயேசுவைக் காண
சாலைகளெங்கும்
மனித கூட்டம்
மதில்களாய் நின்றது.

சக்கேயு சிந்தித்தான்.
அருகில் நின்ற
அத்தி மரத்தின்
உச்சியில் ஓர்
பறவையைப் போல பதுங்கினான்.

பரத்திலிருந்து வந்த
இயேசுவை
மரத்திலிருந்து பார்க்க
ஆயத்தமானான்.

இயேசு அவ்விடம் வந்து
நின்றார்.
மேல் நோக்கி அழைத்தார்.

சக்கேயு
இறங்கி வா.

இன்று
விருந்து எனக்கு
உன் வீட்டில் தான் என்றார்.

முண்டியடித்த கூட்டம்
முணுமுணுத்தது.
பாவியோடு பந்தியமர்வதே
இவர் பணியா என்றது.

சக்கேயு விருந்தளித்தான்.
விருந்தின் முடிவில்
மனம் திருந்தினான்.

வெளிச்சம் புகும் இடத்தில்
இருட்டு இருக்க முடிவதில்லையே.
கடவுள் நுழைந்ததும்
களவு வெளியேறி ஓடியது.

உள்ளத்தை வெற்றிடமாய்
விட்டு விட்டு
களஞ்சியத்தை நிறைத்த
பேதமையைப் புரிந்தான்.

பரிவு பற்றிப் பேசிய இயேசுவிடம்
பரிகாரம் பற்றிப் பேசினான்
சக்கேயு.

என்
சொத்தில் பாதியை
ஏழைக்காய் எழுதுகிறேன்.

பிறரை
ஏமாற்றிய பணத்தை
நான்கு மடங்காய் திருப்பிக் கொடுக்கிறேன்.
என்றான்.

உருவத்தில் குள்ளமான சக்கேயு
உருமாற்றத்தால் உயர்ந்தான்.

இயேசு மகிழ்ந்தார்.
இன்றே இவ்வீடு
இறை மீட்பில் இணைந்ததென்றார்.

 
இயேசு உருமாறுகிறார்

 

பேதுரு,யாக்கோபு,யோவான் இவர்களோடு
உயர்ந்த மலையின்
உச்சந்தலைக்கு
இயேசு சென்றார்.

அங்கே
உருமாற்றம் ஒன்று உருவானது,
ஓர் ஒளி வெள்ளம்
இயேசுவைச் சுற்றியது.
அவர் ஆடைகள்
தூய வெண்மையாய் பளிச்சிட்டன.

அங்கே அவர் முன்
மோசேவும், எலியாவும்
உயிரோடு வந்து
உரையாடிக்கொண்டிருந்தனர்.

வானம் திடீரென்று
வார்த்தை ஒன்றுக்கு வழிவிட்டது.
இவரே என் அன்பார்ந்த மகன்
இவருக்கு
செவிசாயுங்கள் என்ற குரல்
வானத்திலிருந்து எழுந்து
பூமியில் விழுந்தது.

சீடர்கள் மூவரும்
சிரசுக்குள் சில்லிட்டனர்.

உங்களுக்காய் நாங்கள்
கூடாரங்கள் எழுப்பவா ?
உதறிய சீடர்கள்
உளறினர்.

இது தேவ சந்திப்பு
என்
உயிர்த்தெழுதல் வரை
இந்தக் காட்சி
உங்களுள் புதைபட்டிருக்கட்டும்.
என்றார் இயேசு.

மோசேவும், எலியாவும்
மறைந்தனர்
சீடர்கள் உயிர் உறைந்தனர்.

 

குழந்தை இதயம் கொள்ளுங்கள்

 குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு
பரமன் பாதம் வந்தனர் பலர்.
சீடர்கள் சிறுவர் மேல்
சினம் கொண்டனர்.

இயேசுவோ,
சிறுவர்களை தடுக்காதீர்,
விண்ணரசு இத்தகையோரதே
என்றார்.

மழலைகளின் மனதை
எடுத்துக் கொள்ளுங்கள்,
அவர்களின்
நிர்மல நேசத்தை
உடுத்துக் கொள்ளுங்கள்.
அதுவே
பெரியவனாவதற்கான முதல் படி.

குழந்தை மனதில்
ஓர்
வெள்ளை விண்ணகம் இருக்கிறது
அதை
குழந்தையாய் மாறுபவன்
கண்டு கொள்வான்

 

குருத்தோலை அங்கீகாரம்

 

யெருசலேம் வந்த இயேசு
கழுதை மேல் போர்வை போர்த்தி
அதில் அமர்ந்து
ஊருக்குள் ஊர்வலம் வந்தார்.

ராணி தேனீயை
பற்றிக் கொள்ளும் தேனீக்களாய்
பெருங்கூட்டம்
இயேசுவை சூழ்ந்து கொண்டது.

அவர்கள் கரங்களில்
ஒலிவ மரக் கிளைகள்
முளைத்திருந்தன.
குருத்தோலைகள் அசைந்தன

தாவீதின் மகனுக்கு ஓசான்னா
எனும்
வாழ்த்தொலிகள்
தூர வான்
மேகங்களைத் தட்டி எழுப்பின.

இயேசு,
தலைவராக அங்கே
அங்கீகரிக்கப் படுகிறார்,

மறை நூல் தலைவர்களில்
தலைகளுக்குள்,
பய பாம்புகள்
அடுக்கடுக்காய் புற்று கட்டின,

சட்ட வல்லுநர்களின்
அங்கிகளுக்குள்
சில
அவஸ்தைப் பூச்சிகள் நெளிந்தன.

சராசரி மக்களின்
குடிசைகளுக்குள்
இயேசு எனும் சிகரம்
சிரம் கொண்டது,
மாளிகையின் இருக்கைகள்
திடீர் ஜுரம் கண்டது.

இறைவாக்கினர்களின்
தீர்க்கத் தரிசனத்தை
உண்மை எனச் சொல்லும்
தீர்மான நிகழ்வாய்
அந்த உற்சாக ஊர்வலம் அமைந்தது.

பாதைகளின் மேல்
போர்வைகள் படர்த்தி,
கிளைகளை வெட்டி
தோரணம் கட்டி,
வழிமுழுதும் வாழ்த்துக்கள் ஒலிக்க
இயேசு
பரபரப்புப் பயணம் நடத்தினார்.
 
 

வெளிவேடக்காரர்களுக்கு எச்சரிக்கை

 

பிரித்தறியுங்கள்

இயேசு,
மக்கள் கூட்டத்திற்கு
வெளிவேடக்காரரை
வெளிச்சமாக்கினார்.

மறைநூல் அறிஞர்களும்,
பரிசேயர்களும் போதிப்பதை
கேளுங்கள்,
ஆனால் அவர்கள்
நடக்கும் பாதையில் நடக்கவேண்டாம்.

அவர்கள்
பரம்பரை பரம்பரையாய்
விளம்பரப் பிரியர்கள்.

அறிவுரைகள் சொல்ல மட்டுமே
ஆயத்தமாகும் அவர்கள்,
நேர் வழியில் நடப்பதற்கு
ஆர்வம் கொள்வதில்லை.

பாரங்களின் பழுவை
பாமரர் தோளில் சுமத்துகிறார்கள்.
ஆனால்
விரல்களால் கூட அதை
அசைக்க மறுக்கிறார்கள்.

வெளியே விளக்கெரித்து
இதயத்துள்
இருட்டு விற்பவர்கள் அவர்கள்.

வானகம் வரை
விளம்பரம் செய்துவிட்டு
வார்த்தைகளை நெய்கிறார்கள்,
செயல்களின் நகங்களால்
நன்மையின் கழுத்தைக் கொய்கிறார்கள்.

வேத வாக்கியங்களை
வரைந்த சீட்டுப் பட்டங்களை
சிரம் முதல் கால் விரல் வரை
அகலமாய் கட்டுகிறார்கள்.
ஆனால்
மனசுக்குள் அதை நட்டு வைப்பதில்லை.

பட்டாடைகளின் விட்டங்களை
அதிகப்படுத்தி,
பொதுவிடப் பெருமையை
விரும்பி நடக்கிறார்கள்.

ஏழைகளின் மிச்சத்தையும்
சுரண்டிச் சேர்த்துவிட்டு,
பார்வைக்கு
முச்சந்தியில் மறையுரைக்கிறார்கள்.

நீங்கள்,
ஆடைகளோடு சேர்த்து
ஆன்மாவையும் சலவை செய்யுங்கள்.

பெரியவனாகும் தகுதி,
பணியாளனாகப் பிரியப்படுபவனுக்கே.
உயர்த்தப்படும் உரிமை
தன்னை
தாழ்த்துகிறவனுக்கே.

வேஷங்களின் வால் பிடித்து
கோஷங்களில் கழிந்த காலங்கள்
போதும்,
இனிமேல்
மனசின் நிழல் மட்டும்
மண்ணில் விழ நடங்கள்.

வெளி வேடக்காரர்கள்
வெளியேற்றப்படுவார்கள்
என்றார்.

 திருந்துங்கள்
 

இயேசு
வேஷதாரிகளை நோக்கி
ஏவுகணைகளை ஏவினார்.

வெளிவேடக்காரரே
உங்களுக்கு
அழிவு ஆரம்பமாகிவிட்டது.

விண்ணக வாசலுக்கான
வரவேற்புச் சீட்டு
உங்களுக்கு அளிக்கப்படாது.

நீங்கள்,
விண்ணகம் வருவதுமில்லை,
அதன் வாயிலில்
வருவோருக்காய்  வழிவிடுவதுமில்லை.

ஒருவனை,
கடல், காடு கடந்து
மதத்தில் இணைக்கிறீர்கள்,
பின்
அவனுக்கு
நரகத்தின் நடுவே நிற்கவே
இடம் கொடுக்கிறீர்கள்.

மதக் கதவுகளுக்குள்
நுழைவதால் மட்டுமே
ஒருவன்
மதவாதி ஆகிவிடுவதில்லை.

ஆலயத்தின் மீதும்
ஆண்டவன் மீதும் ஆணையிட்டால்
மன்னிப்பும்,
பொன் மீதும், பொருள் மீதும்
ஆணையிட்டால் தண்டனையும்
தருகிறீர்கள்.

மேகத்தை விட பெரியது
வானம் அல்லவா ?
உங்கள் கலனில்
கடலை அடைக்க நினைப்பதேன் ?

பொருள் மீது காட்டும்
பேராசையின் ஆழம்,
அருள் தரும் ஆண்டவனிடம் காட்டுங்கள்.
மீட்பு,
பொன்னால் வருவதல்ல
மனுமகனால் வருவதே.

நீங்கள்,
இருட்டுக்கு மக்களை
இழுத்துச் செல்லும்,
குருட்டு வழிகாட்டிகள்.

காணிக்கையாய் காய்கறிகள்
கேட்கிறீர்கள்,
நீதி,
விசுவாசம்,
இரக்கம் இவற்றை
இறக்க விட்டு விடுகிறீர்கள்.

வயிற்றுக்கான வாழ்வை விட
வாழ்வுக்கான
இதயத்தை வாழவையுங்கள்.

உங்கள்,
தினசரி வாழ்வின் தேடல்களில்,
கொசுவை வடிகட்டி
ஒட்டகத்தை விழுங்குவதை
கட்டோ டு களையுங்கள்.

எப்போதுமே நீங்கள்,
கிண்ணத்தின் வெளிப்புறத்தை
வெள்ளையாக்கும்
பிள்ளைத்தனத்துள் உழல்கிறீர்கள்,
உள்ளுக்குள்
அழுக்கை அழகாய் மறைக்கிறீர்கள்.

நீங்கள்,
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்,

நினைவுச்சின்னங்கள்
அழகாய் இருந்தாலும்
உள்ளுக்குள் கிடப்பது
உளுத்துப் போன உடலும் எலும்புமே.

சுத்தம்,
சுற்றி இருப்பதை விட
உள்ளுக்குள் இருப்பதே
உன்னத வாழ்வு.

 

அடையாளங்கள் தேவையில்லை ஆதவனுக்கு
 

மறைநூல் அறிஞர்கள்
எழுந்து,
ஏதேனும் அடையாளம் காட்டும்
என்று
இயேசுவைக் கேட்டனர்.

இயேசுவின் பாதை முழுதும்
அடையாளச் சுவடுகள்
ஆழப் பதிந்திருந்தும்,
அந்தத் தலைமுறை
திருப்திப் படவில்லை.
இயேசு திரும்பினார்.

வானம் சிவந்திருந்தால்
கால நிலை நன்று என்பீர்கள்.
மந்தாரமாய் இருந்தால்
மழை வரும் இன்று என்பீர்கள்,
வானத்தின் மாற்றத்தை உணர்வீர்கள்
காலத்தின் மாற்றத்தை அறியீர்களா ?

வெறும்
அடையாள வாழ்க்கையில்
அடைந்து கிடந்தவர்களை
அர்த்த வாழ்க்கை வாழ
அழைப்பவரல்லவா இயேசு.

மூன்று நாட்கள்
மீனின் வயிற்றில் இருந்தார்
யோனா,
மனுமகனும்
மூன்று நாள் நிலத்தின் வயிற்றில்
இருப்பார்.

சாலமோனின்
வார்த்தைகளிலும்,
யோனாவின் செய்திகளிலும்
மனசின்
துரு விலக்கியவர்கள்
ஏராளம் பேர் இருக்கிறார்கள்.

மனுமகன்,
அவர்களை விடப் பெரியவர்.

ஒருவனின்,
இதயம் விட்டு வெளியேறும்
தீய ஆவி,
ஊரின் எல்லைகளெங்கும்
சுற்றி அலைந்து
தங்கும் இடம்
எங்கும் இல்லாமல்
பழைய இடத்துக்குத் திரும்பும்.

பழைய இடம்,
ஆளில்லாமல் சுத்தமாய் இருந்தால்,
இன்னும் ஏழு
பேய்களோடு வந்து
சத்தமாய் குடியேறி
பலமடங்கு பாதிப்பு தரும்.

உங்களுக்கு,
இதுவே நேரும்.
நீங்கள் உள்ளுக்குள் இருக்கும்
பேய்களைப் பிரிய
பயப் படுகிறீர்கள்,
மனுமகன்
நுழையாத இதயங்களெல்லாம்
பேய்களுக்குப் புகலிடங்களே.

 

பாம்புகளுக்கு எச்சரிக்கை

 

பாம்புகளே,
விரியன் பாம்புக் குட்டிகளே,
பற்களில் விஷம் வார்த்து
தலைமுறையைக் கடிப்போர்களே
கேளுங்கள்.

வெள்ளைப்புறாக்கள்
உங்களிடம் வந்தபோது
கற்கள் வீசி விரட்டினீர்கள்.

உங்களிடம் அனுப்பும்
ஞானியரையும், நல்லோரையும்,
அடித்தும்,
அறைந்தும் கொல்வீர்கள்.
இப் பழியெல்லாம்
உங்கள் சந்ததியினரின்
சொத்தாய் வந்து சேரப் போகிறது.

ஜெருசலேமே,
ஜெயத்தோடும் ஜெபத்தோடும்
பகைமை பாராட்டும்
கல் நெஞ்ச நகரமே.

கோழி
இறக்கைக்குள் அணைத்துக் கொள்ள
குஞ்சுகளைத் தேடுவது போல்
உங்களைத் தேடினேன்,
நீங்களோ,
உடன்படாமல் தீய
உடன்படிக்கை செய்தீர்கள்.

இதோ,
கூரைகளின் மேல் சாரைகள் ஊரும்
அழிவுக்குள் நீங்கள்
அமிழ்ந்தாக வேண்டுமோ ?

ஏற்றுக் கொள்ளும் வரை
உங்கள் வாழ்வு
உன்னதத்துக்கு உள்ளே வராது.

இறைமகனின் விளக்கங்கள் ஞாயிறு, நவ் 23 2008 

 

 

பணியாளரே துணிவு பெறுங்கள்

 

சீடர்களுக்கு இயேசு
வார்த்தெடுத்த
வார்த்தைகளால்
வலுவான செய்திகள் சொன்னார்.

பயணத்தின் ஓரத்தில்
பயம் கொள்ளாமலும்,
வெப்பத்தின் வெப்பத்தில்
வெந்துபோகாமலும்,
மனசை மலையாக்கும்
ஒப்பற்ற அறிவுரைகள் அவை.

o

ஆன்மாவைக் கொல்லும்
ஆயுதம் இல்லாதவருக்காய்
அஞ்சவேண்டாம்.

மனிதரின் வாட்கள்
உடலோடு மட்டுமே உறவாடும்,
உடல் வலிக்காய்
அஞ்சாதீர்கள்.

சாவு என்பது
சரீரத்தோடு மட்டுமே
சம்பந்தப் பட்டதல்ல,
மனிதாபிமானம் மரித்துப் போனால்,
தரணியில் வாழ்வதில்
தரம் ஏதும் இல்லை.

o

ஓநாய்களிடையே
உலவும் ஆடுகளாய் நீங்கள்.
பாம்பின் விவேகமும்
புறாவின் பரிசுத்தமும்
அணிகலனாய் அணியுங்கள்.

சமாதானத்தின்
சாகுபடி செய்யுங்கள்.

o

மறைக்கப்பட்டவை
என்றேனும் வெளிப்பட்டே தீரும்.
இரவின் நிறம்
பகலால் துடைக்கப்படும்.

நான்
உங்கள் காதுக்குச் சொன்னதை
நீங்கள்
உலகிற்கு உரக்கச் சொல்லுங்கள்

o

உலகின் உறவுகள்
உன்னதரால் வழங்கப்பட்டவை,
உலக உறவுக்காய்
உன்னதரை உதாசீனப் படுத்தாதீர்கள்

o

 

யார் நன்மை செய்ய வேண்டும்

 

யோவான்
இயேசுவிடம் ஓர்
குழப்பக் கேள்வியை வைத்தார்.

உமது
பெயரைச் சொல்லி ஒருவன்
பேய்களை ஓட்டுகிறான்
நல்ல செயல்கள் செய்கிறான்.
அவன்
நம்மைச் சாராதவன்
குழுவில் சேராதவன்
தடுக்கவா? விடுக்கவா ? என்றார்.

தடுக்க வேண்டாம்
கொடுக்க விடுங்கள்.
இயேசு சொன்னார்.

நல்ல விதைகளை
யார் வேண்டுமானாலும் விதைக்கலாம்.
விதைப்பவனைப் பார்த்து
முளைகள் எழும்புவதில்லையே.
விதைக்கட்டும்.

நல்ல செயல்களுக்காய்
என் பெயரைப் பயன்படுத்தினால்
பழுதில்லை.
விழுதுகள் ஆலமரத்துக்கு
விருதுகள் தானே.

நமக்கு எதிராய் இராதவன்
நம்மைச் சார்ந்தவனே.

நம்
செய்திகளுக்குத் தீ வைப்பவன்
மட்டுமே
நம்மைச் சாராதவன்
நன்மையைச் சாராதவன்.
என்றார்.

யோவான்
குழப்ப முடிச்சுகள் அவிழ
ஆனந்த நேர்கோட்டில்
ஐக்கியமானார்.

 

ஓய்வு நாளில் ஏன் ஓயவில்லை

 

பழி சுமத்தப் பார்த்திருந்தது
பரிசேயர் கூட்டம்,
இவர்கள்
உள்ளுக்குள் கள்ளூற்றி
வெளியே மல்லிப்பூ வளர்ப்பவர்கள்.

ஓய்வு நாளில்
இயேசுவின் சீடர்கள்
வயலில் கதிர் கொய்து தின்றனராம்,
பூச்சியைப் பிடித்து
யானை என்றது கூட்டம்.

யூதர்களின் முறையோ
சட்டங்களில் சட்டங்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும்
புகைப்படம் போன்றது.
வெளியேறி ஒரு நாளும்
புது சுவாசம் இழுக்காது.

ஓய்வு நாள் என்பது
ஓய்வெடுக்க மட்டுமே.
அன்று
எச்செயலும் செய்யலாகாதெனும்
எச்சரிக்கைக் கட்டளை உண்டு
அவர்களுக்கு.

இயேசுவோ,
நலன்களை நல்க
நாள்காட்டி பார்ப்பதில்லை.

மடிந்து கொண்டிருக்கும் உயிரை
ஓய்வுநாள் முடியவில்லை
என்று
மனசை மடித்து மடங்கிச் செல்ல
மனுமகன் ஒன்றும்
சட்டத்தின் வால் பிடித்துத் தொங்கும்
பட்டத்தின் நூல் அல்ல.

அடக்கப் பார்த்த கேள்விக்கு
ஆதாரத்தோடு பதில் வந்தது
இயேசுவிடமிருந்து.

தாவீதும்
அவரோடு இருந்தவர்களும்
ஓய்வு நாளில்
குருக்களுக்கான அப்பங்களை
பசிதீர்க்கத் தின்றதை
வாசித்ததில்லையா நீங்கள்.

குருக்களின் ஆலயப் பணி
ஓய்வு நாளிலும் தொடரலாம்
என்பதை
கேட்டதில்லையா நீங்கள் ?

அவர்களின் சட்டநூலிலேயே
அவர்களின்
கேள்வியின் பதிலிருப்பதை
கோடிட்டுக் காட்டினார்.

சட்டங்கள் இருப்பது மனிதனுக்காக,
மனிதன் இருப்பது
சட்டத்துக்காக அல்ல.
உங்கள் செல்லரித்துப் போன
சட்டங்கள் இனி செல்லாது.

மனுமகன்,
ஆறு நாளுக்கான ஆண்டவரல்ல,
ஓய்வு நாளுக்கும்
அவரே ஆண்டவர்.

குறை சொன்ன கூட்டத்திடம்
வேறு கேள்வி
வேர்விட வில்லை.
 

அழிவுக்கான புளிப்பு மாவு

 பரிசேயரின்
புளிப்பு மாவைக் குறித்து
கவனமாய் இருங்கள்
இயேசு சொன்னார்.

சீடர்களோ
சிற்பியோடே இருந்தாலும்
இன்னும்
உளிகளைப் பற்றி முழுதாய்
அறிந்து கொள்ளவில்லை.

தங்களிடம்
அப்பம் இல்லையே என
தர்க்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசு
மெலிதான கோபத்தால்
அவர்கள்
சந்தேகம் விலக்கினார்.

நான்
உள்ளத்தைப் பாதுகாக்கச்
சொன்னால்
நீங்கள்
உணவைப் பாதுகாக்கவில்லை
என்கிறீர்கள்.

எப்போது தான்
நுனிப்புல் மேய்வதை விட்டு
வேர்கள் மீது
வேட்கை கொள்வீர்களோ ?

ஐந்து அப்பத்தை
ஐயாயிரம் பேர் உண்டபின்
மீந்தவற்றை
பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தீர்கள்.

ஏழு அப்பங்களை
நாலாயிரம் பேருக்கு அளித்தேன்
அதில்
மீந்த அப்பங்களே
ஏழு கூடைகள் இருந்தனவே.

இன்னும் ஏன்
அப்பத்துக்கான கவலை.
நான் சொல்வது
வயிறுக்கான வார்த்தைகளல்ல
மனசுக்கான
மந்திரங்கள்.

குழப்பத்தைக் கொன்ற
வேடர்கள் ஆனார்கள்
சீடர்கள்.

 

எண்ணிக்கையா, எண்ணமா ?

 
ஒரு முறை இயேசு

காணிக்கை போடுவோரை
ஆலயத்தில் அமர்ந்து
கவனிக்கலானார்.

பட்டுக்குள் சுற்றப்பட்ட
பணக்காரர் பலர்
பெட்டி பெட்டியாய்
பணம் போட்டு நகர்ந்தனர்.

பகட்டுக்காய் பலர் வந்து
கட்டுக் கட்டாய்
நோட்டுக்கள் இட்டு
கர்வத்துடன் கடந்தனர்.

கடைசியாய் வந்தாள்
கவலையின் பையுடன்,
இரண்டு காசு கையுடன்,
கைம்பெண் ஒருத்தி.

இயேசு சொன்னார்
அதிகம் போட்டவள் இவளே.
ஏனெனில்
அதிகமாய் போட்டவர் எல்லாம்
அதிகமிருந்ததில் எடுத்தனர்.
இவளோ
இருந்ததை மொத்தமாய் கொடுத்தனள்.

அவர்கள்
களஞ்சியத்தில்
எஞ்சியதைக் கொடுத்தார்கள்
இவளோ
வாழ்வுக்காய்
மிஞ்சியதை கொடுத்தாள்.

உள்ளுக்குள் உண்மை நேசம்
ஒரு காசை வானளவு விரிக்கும்.
நேசம் இல்லா பகட்டுக்கள்
வானத்தைகூட
வார்க்கச்சைக்குள் இறுக்கும்.

 

பாவிகளெனும் பள்ளத்தில் பரமனா ?

 
பாவிகள் என்று
புறக்கக்கப்பட்டவரோடு
இயேசுவின் இரக்கம்
இடைவிடாமல் இருந்தது.

பாவிகளோடும் வரிவசூலிப்பவர்களோடும்
விருந்து உண்டார்.
கண்ணில் எண்ணை ஊற்றிக்
காத்திருந்தது,
பிரச்சினை கிளப்பவே
பரம்பரை பரம்பரையாய்
பழக்கப்பட்ட கூட்டம்.

போதகராய் இருப்து
வெகுமானம்
அவன் பாவிகளின் பாயில் அமர்ந்து
விருந்துண்பது
அவமானம்.
உங்கள் போதகருக்குப் புரியவில்லையோ ?

பரமனின் உறவுகள் எல்லாம்
உதவாக்கரைப் பாவிகளோடா ?
கேலிக் கேள்விகள்
சுழன்றது சீடர்களை நோக்கி.

இயேசு,
கேள்வித் தீயாய் எரித்தவரை
பதில் நீரில்
நனைத்தெடுத்தார்.

என் பணி,
நீங்கள் தேடும் மக்களோடல்ல
இதயம் வாடும் மக்களோடு
உங்கள் எல்லைகளுக்கு அப்பால் தான்
என்
ஆரம்பமே ஆரம்பம்.

மருத்துவனின் பணி
ஆரோக்கியவானின்
அறைகளிலல்ல,
நோயாளிகளின் நிலையங்களில்.

பலியை புறந்தள்ளி விட்டு
இரக்கத்தை மட்டுமே
இதயங்களில்
இறக்க வந்தேன்.

செதுக்கி முடித்த சிற்பத்தில்
சிற்பியின் உளிக்கு
வேலையில்லை.
வரைந்து முடித்த ஓவியம் தான்
நீதிமான்கள்
என் தூரிகைத் தழுவல்கள்
ஓவியமாகக் காத்திருக்கும்
காகிதங்களோடு தான்.
காவியமாய் காத்திருக்கும்
ஓவியங்களோடல்ல.

என் தேடுதல்கள்
குற்றம் விலகிய மனங்களல்ல,
குற்றம் விலக வேண்டிய
மனங்கள்.

நீதிமான்
நீதிமானாய் இருக்கட்டும் !
ஆனால்
பாவி பாவியாய் இருக்க வேண்டாம்.

பாவிகளின் பாதை மாற்றி
நீதிக்குள் அவர்களை
நடக்கவைப்பதே என் பணி,
மீன்களுக்கு நீச்சல்
பயிற்றுவிப்பதல்ல.

கறையற்றவர்களை தழுவுகிறேன்
அவர்கள்
நேசத்தில் நனைகிறேன்,
கறையுற்றோரைக் கழுவுகிறேன்.
அவர்களை
நேசத்தால் நனைக்கிறேன்.

இயேசுவின் விளக்கம்
தப்பாமல் வந்தது.
தப்பு சொன்னவர்கள்
தப்பி ஓடினார்கள்.

 
படைத்தவனுக்கு இடமில்லை

 

மறைநூல் அறிஞன் ஒருவன்
இயேசுவை அணுகி,
போதகரே,
உம் பயணம் தொடருமிடமெல்லாம்
இனி
என் பாதங்களும் படரும் என்றான்.

இயேசு அவரிடம்,
நரிகளுக்கு வளைகள் உண்டு.

பறவைகளுக்குக் கூட
சிறகு வலித்தால்
சங்கமிக்க கிளைகளிடையே
கூடுகள் காத்திருக்கும்.

மனுமகனுக்கோ
தலைச்சாய்க்கக் கூட
இடமிருக்காது,
தொடரத் தயாரென்றால் தொடரலாம்.
என்றார்.

இன்னொரு சீடர் அவரிடம்,
ஆண்டவரே,
என் தந்தை
இறந்துவிட்டார்,
அடக்கம் செய்துவிட்டு வரவா ?
என,

வாழ்வை முடித்தவர்க்காய் நீங்கள்
கவலைப் படுகிறீர்கள்,
வாழ்வை
துவங்காதவர்களுக்காய் நான்
துக்கப்படுகிறேன்,

உலகக் கவலைகள் உங்களை
உலுக்குகிறதென்றால்
உன்னதப் பணிக்கு
இன்னும் நீங்கள்
தயாராகவில்லை என்பதே பொருள்.
என்றார்.

 

இடம், பொருள், ஏவல் முக்கியம்

 
 
பழைய ஆடையில்
புதுத் துணியை
ஒட்டுப் போட உபயோகிக்காதீர்,
அது
கிழிசலைப் பெரிதாக்கி
ஆடையை அழித்துவிடும்.

புதிய இரசத்தை
புதிய சித்தைகளில் ஊற்று,
பழைய சித்தைகளில்
அதை ஊற்றினால்
எல்லாம் வீணாகும்.

சரியானதைச் செய்யுங்கள்
சரியான இடத்தில்.

 
 
மீண்டும் ஓய்வு நாள் சர்ச்சை

 

இன்னொருமுறை,
சூம்பியக்கையன் ஒருவனை
சுகமாக்கினார் இயேசு
ஓய்வு நாள் அது.
இன்னொரு குற்றச்சாட்டு குதித்தது.

ஓய்வு நாளில் என்ன
பிணி மாற்றும் பணி?
ஓய்வு மட்டுமே
ஓய்வு நாளுக்கான பணி
புரியாதவன் பரமனா ?

இயேசு சொன்னார்,
உன்
ஆட்டுக்குட்டி
குழியில் விழுந்தால்
ஓய்வு நாளெனில் அதை
சாக சம்மதிப்பாயா ?
சாகசம் செய்தாகிலும்
காப்பாற்றி கரையேற்றாயா ?

பள்ளத்தில் உன் பசு விழுந்தால்
ஓய்வு நாளெனில்
அதை
உதறிவிடுவாயா ?

ஆட்டைவிட மேலானவன்
மனிதன்,
இதை மறுதலிப்பவன் எவன் ?

நன்மைகளின்
விற்பனைக் கூடத்தில்,
முட்டுக் கட்டைகளை இட்டு
நிரப்பி வைக்காதீர்கள்.

வழக்கம் போல்
விளக்கம் கேட்டவர்
விலகினர்.
விளக்கம் பெற்றவர்
நெருங்கினர்.

 
விண்ணக இருக்கைக்கு விண்ணப்பம்
 

செபதேயுவின் மனைவி
தம் மக்களோடு வந்து
இயேசுவிடம்
விண்ணப்பம் ஒன்றை வைத்தாள்.

நீர் ஆட்சி அரியணையில்
அமரும்போது,
இவர்களை உம்
இரு பக்கங்களிலும்
இருக்கச் செய்யும் என்பதே
அவ்விண்ணப்பம்.

இயேசு
அவளைப் பார்த்தார்.
புரியாமல் பேசுகிறாய் நீ,
என்
துன்பக் கிண்ணத்தில் இவர்கள்
குடிப்பது சாத்தியமா ?
என்றார்.

தம் சிலுவைச் சாவையே
அவ்வாறு கேட்டார்.
அவளுக்கோ அது விளங்கியிருக்க
நியாயமில்லை.

ஆனாலும்
முடியும் என்றாள்.

இயேசுவோ
என்
பாடுகளைப் பகிர்தல்
ஒருவேளை சாத்தியமாகலாம்.

ஆனால்
விண்ணக வீட்டில்
என் பக்கத்தில் அமர்வது
என் தந்தையின் விருப்பத்தைப்
பொறுத்தது.
என்று பதிலளித்தார்.

 

சிறியவனே பெரியவன்

 

சீடர்கள் இயேசுவை அணுகி
வானுலகில்
பெரியவன் யார் ?
சற்றே எங்களுக்கு சொல்லும் என்றனர்.

இயேசு,
ஒரு சிறுவனைச் சுட்டி
சீடரிடம் சொன்னார்
இந்தச் சிறுவனைப் போல
தன்னைத் தாழ்த்துபவன்
விண்ணரசில் பெரியவனாய்
உயர்த்தப்படுவான்.

உங்களில்
பெரியவனாக இருக்க விரும்புகிறவன்
பணியாளனாய் பணியாற்றட்டும்,
ஆழ்கடல் ஆரவாரிப்பதில்லை
கரைகளில் மட்டுமே
அலைகள் அலையும்.

உங்களில் தலைவனாக
இருக்க விரும்புபவன்,
தொண்டனாய் முதலில்
தொண்டாற்றல் வேண்டும்.

தற்பெருமை கொள்பவன்
தகர்க்கப் படுவான்,
தாழ்ச்சி உள்ளவன்
தலைவனாக்கப்படுவான்.

மனுமகன் வந்தது
கிரீடம் சூட்டி அரசாள அல்ல,
மனுக்குலத்தை
தீய சிந்தனைகளிலிருந்து
கரையேற்றவும்,
அதற்காக சிலுவையில்
உயிர் அறையப்படவும் தான்.

பூமியின் பொருட்களில்
பற்றுக் கொள்வதை விட்டு விடுங்கள்,
ஆவியின் அருட் கொடையில்
பற்றிக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

ஒன்றா, தொன்னூற்று ஒன்பதா ?

 

மேய்ப்பனுக்குச் சொந்தமாய்
நூறு ஆடுகள்
இருந்தாலும்,

மேய்ச்சல் முடித்துத் திரும்புகையில்
ஆடு ஒன்று
திரும்பும் வழியில்
தொலைந்து போனால்,

ஒன்று போனால்
ஒன்றும் நேராதென்று
மெளனமாய் இருப்பதில்லை
மேய்ப்பன்.

மிச்ச
தொன்னூற்றொன்பது ஆடுகளையும்
மலையில் விட்டு விட்டு,
தொலைந்த ஆட்டைத்
தேடுவான்.

கண்டெடுத்து கட்டியணைப்பான்
ஆனந்த சத்தமிட்டு
முகம் தொட்டு முத்தமிட்டு
கூட்டத்தோடு கொண்டு சேர்ப்பான்.

அவனே உண்மை ஆயன்.

தவறிப்போகாத
மிச்ச ஆடுகளோடு
முடிந்துவிடுவதில்லை
நல்ல ஆயனின் பணி.
மேய்ச்சல் நிலத்தில்
தவறிப்போன சின்ன ஆட்டை
தேடிப் பிடித்து
தோள் தடவும் வரை அது தொடரும்.

மனுமகனும் அவ்வாறே,
யாரும் அழிவுறுதல்
ஆண்டவன் ஆசையல்ல.
மீட்பு என்பது
சிலருக்கு வழங்கப்பட வேண்டிய
சலுகைச் சலவை அல்ல.
 

திருந்துவதற்காய் திருத்து

 

யாரேனும் தவறிழைத்தால்,
அன்பான வார்த்தையில்
அவனை நீ
திருத்து.

மீண்டும் மீளாமல்
தவறான வழியில் அவன்
தவறாமல் சென்றால்,

இன்னும் இருவரை அழைத்து
அறிவுரை அளி.

பின்னும்
அவன் தடம்
தவறான இடம் எனில்,
திருச்சபைக்குச் சொல்.

திருச்சபைக்கும் மறுப்பவனை
ஓரமாய் ஒதுக்கிவிடு.
பொதுத் தீர்வையில்
அவனுக்கு
மன்னிப்பு மறுக்கப்படும்.

மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.

 

எத்தனை முறை மன்னிப்பது முறை ?

 

எத்தனை முறை மன்னிப்பது ?
ஏழு முறையா ?
சீடன் ஒருவன்
கேள்வியை வைத்தான்.

ஏழு முறை என்றல்ல,
எழுபது முறை ஏழு முறை
என்றார் இயேசு.

எண்க்கை பாராமல்
மன்னிப்பு வழங்கு என்பதை
மறைமுகமாய்
வெளிப்படுத்தும் வாசகம் அது.

ஏழுமுறை தான்
மன்னிக்க வேண்டும் எனும்
பழைய சட்டங்களை இயேசு
தணிக்கைக்குள் தள்ளுகிறார்
எண்ணிக்கைக்குள்
ஏன்
மன்னிப்பை அடக்க வேண்டும்
திருந்தும் வரை மன்னிப்போம் என
திருத்தம் செய்கிறார்.

தொடர் மன்னிப்பின் பலன்
சில இதயம்  சரியாதல் தான்.
அதுவே
மன்னிப்பின் மையம்.
 

விலக்குதல் விலக்கு

 

மனைவியை விலக்குதல்
முறையா ?
மனுமகனிடம் கேள்வி ஒன்று
கொடுக்கப்பட்டது.

ஆதாம் ஏவாள்
காலத்து ஆரம்பம்
ஆண் பெண் இணைந்து வாழும்
உன்னதம்.

ஆணும் பெண்ணுமாய்
இணைந்து வாழ்தல்
இறைவனின் விருப்பம்
மனைவியோடு வாழ்தலிலே தான்
மனிதனுக்கு மகத்துவம்.

இரு மனங்கள்
ஒரு உயிரில் உற்பத்தியாதல்
தான்
தாம்பத்யம்.

விவாகரத்து அளிப்பது
விண்ணகத்துக்கு எதிரான குற்றம்,
நடத்தை கெட்ட பெண் தவிர
மற்றவரை
விலக்குபவன்
விபச்சாரப் பாவம் செய்கிறான்
விளங்கிக் கொள்ளுங்கள்.

பிரிவதற்குக் காரணங்களை
சட்டங்களின்
மூலை முடுக்குகளில் தேடாமல்,
வாழ்வதற்கான காரணங்களை
மனதின்
மூலை முடுக்குகளிலும்
நிரப்பி வைத்தலே
இயேசுவின் அறிவுரையின் சாரம்.

 

பகிர்ந்தளி, அதுவே மீட்பின் வழி

 

பணக்காரன் ஒருவன்
பரமனிடம் வந்தான்.

மீட்பின் வாசலுக்கு
நான் வர வேண்டும்,
என் கடமை என்னவென்று
கருணையில் சொல்வீர்.

இயேசு சொன்னார்
கட்டளைகளைக் கடைபிடி,
கொலை, விபச்சாரம், களவு, போன்றவை
செய்யாதே
உன்னைப்போல் அயலானை
அன்பு செய்.

இவையெல்லாம்
என்
சிறுவயதுப் பழக்கம்,
இம்மியளவும் நான் தவறியதில்லை,
வேறென்ன செய்யவேண்டும் ?
கேள்வி யில் மறுபடி
தொங்கினான் அவன்.

இயேசு அவனைப் பார்த்தார்.
நல்லவனுக்குரிய
ரேகைகள்
அவன் விழிகளில் நீந்தின.

ஒன்று உன்னிடம்
குறைவெனக் காண்கிறேன்.

உன்
சொத்துக்களை விற்று
ஏழைகளுக்குக் கொடு.

ஒருவனுடைய வாசலில்
பட்டினியின் பாயும்,
இன்னொருவனுடைய வீட்டில்
பட்டாபிஷேகமும் ஆகாது.

அயலானை
உன்னைப்போல் நேசி.

பணக்காரன்
விழிகள் சோர்ந்துபோய்
வெளியேறினான்.
அவனுக்குச்
சொந்தமாய் ஏராளம்
சொத்திருந்தது.

 

ஊசிக் காதுக்குள் ஒட்டகம்
 

உறுதியாக சொல்கிறேன்,
பணக்காரன்
விண்ணரசு வருவது
மிக மிக அரிதென்பதை
அகத்தில் எழுதுங்கள்.

பணக்காரனின் விண்ணகப்
பயணத்தை விட,
ஊசிக் காதுக்குள்
ஒட்டகம் நுழைவது எளிது.

ஒருவன்,
அயலானின் வியர்வை துடைக்க
விருப்பப்படால்,
பகிர்தலில் மிளிர்வான்,
பகிர்தலின் புதல்வர்கள்
பணக்காரர் ஆவதில்லை.
இதுவே இக்கருத்தின்
உட்கரு.

சமத்துவச் சிந்தனைகளை
அகத்தினில் கொள்வதே
ஆண்டவன் அறிவுரை.

 *
எனக்காய் நீங்கள்
இழப்பவை எல்லாம்,
தந்தையால் உங்களுக்கு
தவறாமல் தரப்படும்

  
சொல்லுக்கு விலை இல்லை

 

கேள்வியில் விடையை
கிளற வைப்பார் இயேசு.

ஒருவனுக்கு
பிள்ளைகள் இருவர் இருந்தனர்.

தோட்டத்தில் கொஞ்சம்
வியர்வைப் பணி
மிச்சமிருந்தது.
மகன்களை போகச் சொன்னார்
தந்தை.

முதலானவன் முரண்டுபிடித்தான்.
முடியாது என்பதே
என் முடிவு என்று
கண்களை மூடினான்.

பின் மனம் திறந்தான்
தந்தை சொல் தட்டிய
தவறுணர்ந்தான்
தோட்டம் நோக்கி
ஓட்டம் கொண்டான்.

இரண்டாமவனிடமும்
தந்தை சென்றார்.
விழித்திருந்த மகனோ
இதோ என்றான்
ஆனால்
வார்த்தை உறுதிமொழியை
நிறைவேற்றத் தவறினான்.

இருவரில் யார்
இறைவனுக்கு ஏற்புடையவர் ?
இயேசுவின் கேள்வி
இலக்கைத் தொட்டது.

முதலானவன் என்ற பதில்
முண்டியடித்து முன் வந்தது.

இயேசு
புன்முறுவல் பூத்தார்.,
நீங்கள் சொன்னது சரியே.
செயல்களே முக்கியம்
வார்த்தைகள் எல்லாம்
செயலில்லையேல் செத்தவையே.

 
இரு வாழ்வும் தேவையே

 

செசாருக்கு வரிசெலுத்த வேண்டுமா ?
இயேசுவைப்
பொறிவைத்துப்
பிடிக்கப் பார்த்தது
பரிகாசப் பரிசேயர் கூட்டம்.

இயேசு
அவர்கள் உள்ளக் கிடங்கை
அகக்கண்ணால் ஆராய்ந்தார்.

வேண்டாம் என்றால்,
அரசனைப் பழிக்கிறான் என்று
நீண்ட வழக்கிடும்.

வேண்டும் என்றால்,
மனுமகனின் பணி
மண்ணுலகப் பதானோ என்று
காது வரை கேலி நீளும்.

இயேசு கேட்டார்,
உங்கள் நாணயத்தில்
பொறிக்கப்பட்டிருப்பது யார் பெயர் ?

செசார் என்றனர்,
செருக்குற்றவர்.

இயேசு இரண்டே வார்த்தை
இயம்பினார்.
செசாருக்குரியதை செசாருக்கும்
கடவுளுக்குரியதை கடவுளுக்கும்
கையளியுங்கள்.

கூட்டம்
திடுக்கிடலோடு திரும்பிச் சென்றது

 

மறு உலகில் யாருக்கு மனைவி ?

 

சதுசேயர் சிலர்
சதிக்கேள்வி கேட்டனர்,
இயேசுவை வார்த்தை வலையில்
வீழ்த்த எண்ணி.

ஒருத்தி மணமாகி
மகப்பேறுக்கு முன்பே
கணவன் மரணமடந்தால்
அவன் சகோதரன்
அவளைக்
கைப்பிடித்தல் மோயிசன் சட்டம்.

ஒருத்தி,
ஏழு சகோதரரை
ஒருவர் பின் ஒருவராய் மணந்து
எழுவரையும் இழக்கிறாள்.
பின்
உயிர்த்தெழுதலில் அவள் யார் மனைவி ?

அசத்தல் கேள்வியைக்
கேட்டதாய்
ஆனந்தத்தை
அசை போட்டது கூட்டம்.

இயேசு சொன்னார்,
சின்ன விசுவாசக் காரர்களே,
வேடதாரிகளே கேளுங்கள்.

உங்கள் அறியாமைக் கண்கள்
மூட மறுக்கின்றன,
வெளிச்சம் உங்கள்
ஊனக்கண்ணுக்கு உள்ளே வர
மறுக்கிறது.

விண்ணரசு,
சமகால வாழ்வின் நகல் அல்ல,
அங்கே
பெண் கொள்வதும் கொடுப்பதும் இல்லை.

எல்லோரும்
தேவதூதப் பிறவிகளே.

அசை போட்ட கூட்டம்
வசை கேட்டு விலகியது.

 

பெரிய கட்டளை

 

சதுசேயரின் சதிக்கேள்வி
சிதைந்ததும்,
பரிசேயரின் ஒரு கேள்வி
மிதந்தது.

திருச்சட்டத்தின் மிகப் பெரிய
கட்டளை என்ன ?
காதுகளைச் செதுக்கி
காத்திருந்தது கூட்டம்.

இயேசு சொன்னார்,
கடுகளவும் குறைவின்றி
முழு மனசோடும் ஆன்மாவோடும்
ஆண்டவனை அன்பு செய்.

உன் மீது
நீ காட்டும் அதே அன்பை
உன்
அயலான் மீதும் வை.

இவ்விரண்டு கட்டளைகளுமே
அத்தனை சட்டங்களுக்குமான
அச்சாணி.

 
விலங்குகளை விலக்குங்கள்
 

யூதர்களைப் பார்த்து
இயேசு சொன்னார்.
நீங்கள்
அடிமைகளாய் இருக்கிறீர்கள்
விலங்குடைக்காவிடில்
நீங்கள்
விலங்குகளே.

யூதர்கள் கொதித்தனர்.
நாங்கள் அடிமைகளா ?

ஆபிரகாம் முதல்
நாங்கள்
ஆணையிடும் வம்சம்
அடிமையின் வாரிசல்ல
என்றார்கள்.

இயேசு சிரித்தார்.
பாவம் செய்யும் எவனும்
பாவத்துக்கு அடிமை !

விட்டொழியுங்கள்
இல்லையேல்
கெட்டழிவீர்கள் என்றார்.

 
தந்தையை நான் அறிவேன்
 

கடவுளைச் சார்ந்தவன்
கடவுளுக்குச் செவிகொடுப்பான்,
நீங்கள்
சார மறுக்கிறீர்கள்
சாரமற்றுப் போகிறீர்கள்
என்றார் இயேசு.

யூதர்கள்
குதித்தனர்
கோபத்தில் கொதித்தனர்.

வானத்தில் மிதக்கும்
நினைவுகளோடு வாழ்ந்தவர்கள்
பாதாளத்தில்
எறியப்பட்டதால் பதறினர்.

நீ பேய் பிடித்துப் பிதற்றுகிறாய்,
ஆதாரம் இல்லாமல்
சதிராடுகிறாய்.

உன் மனமெனும்
கூடாரம்,
சேதாரம் ஆகிவிட்டது.
என்றனர்.

இயேசு சொன்னார்,
நான்
எனக்குப் பெருமை தேடுபவனல்ல,
உங்கள்
விசாரணைகளுக்கு
விளக்கமளிக்கத் தேவையில்லை.

எனக்குப் பெருமை தருவது
தந்தையின் அருகாமையும்,
திருந்தும் மக்களின்
இருதயங்களும் தான்.

என்
மானிட வயது மிகச் சிறிதே.

ஆனால்
ஆபிரகாமுக்கு முன்பே
நான் இருக்கிறேன்.

வார்த்தையாயும்
இல்லாமையிலும் இருந்தேன்.

நான் தந்தையை அறிவேன்,
அவருக்காய் தருவதற்கே
நான்
வருவிக்கப் பட்டேன்.

என் உயிரைக் கூட
அவருக்கே தருவேன்
அவர்
அதை எனக்குத் திரும்பத் தருவார்.

என் நாவு
பொய் சொல்வதோ
எனக்குள்
பேய் செல்வதோ சாத்தியமில்லை.
என்றார்.

வார்த்தைகளைப் பொறுக்க
மறுத்து,
கற்களை மட்டுமே
எடுக்கப் பழகிய கூட்டம்
இயேசுவை நோக்கி
கற்களை எடுத்தது.

காற்றை எறிய
யாரால் கூடும்,
கர்த்தரைத் தாக்க
கற்களால் கூடுமோ ?

இயேசு
விலகிச் சென்றார்.
இடத்தை விட்டு
இதயங்களை விட்டல்ல.

 

எதிராய் இருப்பவனே எதிராளி

 
என் வார்த்தைகளை
நம்புங்கள்,
இல்லையேல் செயல்களையேனும்
நம்புங்கள்.

ஏன் இன்னும்
குருடாய் தான் இருப்பேனெனெ
முரட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?
முரடாய் தான் இருப்பேனென
குருட்டுப் பிடிவாதம்
பிடிக்கிறீர்கள் ?

0

இயேசுவின் அற்புதங்கள்
தலைமைக் குருக்களின்
நிலைமை தகர்த்தது.
பரிசேயரைப் பார்த்து
பரிகாசம் செய்தது.

அடக்கி விடு
இல்லையேல் அழித்து விடு
வட்டமிட்டது கூட்டம்.

இயேசுவை
வளைப்பது இயலாதென்பதால்
உடைத்திட திட்டமிட்டது.

அணையை உடைப்பது போல
கடலை உடைக்கலாமென
கங்கணம் கட்டியது .

கடலோ
சுயமாய் வற்றிப் போக
சம்மதித்தது
உள்ளுக்குள் கிடக்கும் வளங்களை
வெளிக்காட்டும் விதமாக.
 

இறைமகனென்றால் இறப்பில்லையே

 

மக்கள் கூட்டம்
இயேசுவைப் பார்த்து,

மெசியாவானால்
நிலைப்பார் என்பதே
நிலைப்பாடு.

மரணங்களைக் கடந்தவரே
மனுமகனாக முடியும்.
கையளவு நீர்
கடலென்ற பெயர் பெறாது.

நீர்
இறப்பேன் என்பதும்
உயர்த்தப் படுவேன் என்பதும்
ஆண்டவனுக்கான
அடையாளங்கள் அல்லவே ?
என்றது.

இயேசு சொன்னார்,
ஒளி
சிலகாலமே உங்களோடு இருக்கும்.
இருக்கும் போதே
பெற்றுக் கொள்ளுங்கள்.

இரவில் ஒளி வற்றிப் போகும்
வெளிச்சம் இருக்கும் போதே
வந்து
மனசுக்குள் ஊற்றிப் போங்கள்.

இற்றுப் போன மனசுக்காரர்கள்
தோற்றுப் போவார்கள்.

வாருங்கள்
ஒளியை பெற்றுக் கொள்ளுங்கள்.
வழியை
கற்றுக் கொள்ளுங்கள்.
என்றார்.

 

வல்லமையின் பிறப்பிடம்

 
இயேசுவின்
நோய்தீர்க்கும் செயல்களால்
காய்ச்சல் கண்ட
தலைமைக் கூட்டம்
இயேசுவை அணுகிக் கேட்டது.

எந்த அதிகாரத்தால்
இதைச் செய்கிறீர் ?

நம்பிக்கை இல்லா
அவர்களிடம்
விளக்கம் கூற விரும்பாமல்
இயேசு,
கேள்விக்குப் பதிலாய்
இன்னோர் கேள்வியை வைத்தார்.

யோவான்
திருமுழுக்கு அளித்தது
எந்த வல்லமையால் ?
விண்ணகமா ?
மண்ணகமா என்றார்.

கூட்டம் கேள்வியில்
மறைந்திருந்த
கண்ணிவெடியைக்
கண்டு கொண்டது.

விண்ணகம் என்போமெனில்
ஏன்
யோவான் விளம்பிய
விண்ணக வார்த்தையை
நம்பவில்லை என்ற கேள்வி வரும்.

மண்ணகம் என்றால்
நம்பிக் கொண்டிருக்கும்
மக்கள் கூட்டம்
கோபத்தில் கல் எறியும்.

சொல்லைக் கொடுத்து
கல்லை வாங்க
விருப்பப் படாத,

இருதலைக் கொள்ளி எறும்பாபென
உஷ்ணத்தில்
உழன்ற தலைவர்கள்
‘தெரியாது’ என்று தப்பித்தனர்.

இயேசு
எதிர்பார்த்த பதிலையே
எதிர்த்தவர்கள் கொடுத்தனர்.

அப்படியே,
இதுவும் உங்களுக்கு
தெரிவிக்கப் படாது என்றார்
இயேசு.

 
பாவமில்லையேல் கல் எறி
 

ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

 

உள்ளம் வெளுக்கட்டும்

 

நல்லவற்றின்
கருவூலத்தில்
தீயவை இடப்படுவதில்லை,
தீயவற்றின்
தோட்டத்தில்
நல்லவை நடப்படுவதுமில்லை.

உள்ளத்தில் உள்ளவை
நல்லவை எனில்,
எடுக்கப்படுபவையும் நல்லவையாகும்.

உன் வார்த்தைகள்
உள் மனசின் சத்தங்கள்.

உன் வார்த்தைகள்
உன்னை வாழ்த்தும் ஒலிகள்,
அல்லது
உன்னை வீழ்த்தும் பொறிகள்.

வார்த்தைகளை அன்பில்
வார்த்தெடு.

உன்
வார்த்தைகளின் நெறியில்
நீ
தீர்ப்பிடப்படலாம்.
இயேசு சொன்னார்.

உண்மை தான்.
தாழம்பூக் கூடையில்
வாழைப்பூ வாசம் வருவதில்லையே.

வாசம்
வாசம் செய்யும் மனம் தானே
நேசர் நம்மிடம் வேண்டுவது.

 
உண்மையான செபம்

 

இருவர் ஆலயம் சென்று
ஆண்டவனிடம் செபித்தனர்.
ஒருவன்
பரிசுத்தனாய் பறைசாற்றப்படும்
பரிசேயன்
ஒருவன் பாவியென்று அழைக்கப்படும்
ஆயக்காரன்

பரிசேயன் செபித்தான்.
ஆலய பீடத்தைத்
தொடும் தூரத்தில் நின்று
அலட்சியமாய் செபித்தான்.

அவனுடைய செபம்
அகந்தையின்
அறிவிப்புக் கூட்டமாய்
கர்வத்தின்
திருவிழாவாய் தெரிந்தது.

ஆண்டவரே
நான் நல்லவனாய் இருப்பதற்கு
நன்றி.

நோன்புகளில் நான்
நாள் தவறியதில்லை,
காணிக்கையில் நான்
கணக்கு தவறியதில்லை.

ஆயக்காரனைப் போல
பாவியாய் என்னை
படைக்காததற்கு நன்றி.

ஆயக்காரன் செபித்தான்
ஆலயத்துள் நுழையாமல்
முற்றத்தில் நின்றே
குற்றத்தை ஒப்புக்கொண்டு
தலைகுனிந்தான்.

மார்பில் அடித்து
மண்டியிட்டான்.

ஆண்டவரே
நான் பாவி
என்மேல் இரக்கம் வையும்.

இருவரின் செபத்தில்
இந்த
இருவரி செபமே
இறைவனுக்கு ஏற்புடையதாயிற்று.

தன்னை
புனிதனென்று சொல்லிக் கொள்பவன்
பித்தனாய் இருக்கிறான்,
பாவி என்று ஒத்துக் கொள்பவன்
மனிதனாய் பிறக்கிறான்.

விளம்பரங்களின் விளக்கு வெளிச்சம்
இதயத்தை இன்னும்
இருட்டாக்கிவிடும்.
தாழ்ச்சியின் பீடத்தில் மட்டுமே
தலைசாயுங்கள்
 

புறம் அல்ல அகமே அவசியம்
 

இயேசுவின் மேல்,
இன்னொரு குற்றச்சாட்டு
எறியப்பட்டது.

உம் சீடர்கள்,
உணவு உண்ணும்போது
கை கழுவுவதில்லை.
இது
பரம்பரைச் சட்டம்
மீறுவோர் எல்லாம் மட்டம்.

அடையாளங்களால்
அடையாளம் காட்டப்பட்டவர்கள்
ஆண்டவனிடம்
படபடத்தனர்.

இயேசு சொன்னார்,
ஆண்டவன் கட்டளையை
நீங்கள் தான்
அவமதிக்கிறீர்கள்.

தாய் தந்தையரை
போற்றச் சொன்னது
கடவுளின் வேதம்
நீங்களோ
மாற்றுக் கொள்கை காட்டுகிறீர்கள்.

என் சொத்தெல்லாம் ஆண்டவனுக்கு
என்று
நேர்ச்சி கொடுத்தால்,
நோயில் அமிழ்ந்து
பெற்றோர்
பாயில் படுத்தாலும்,
உயிர் விட்டாலும் பாவமில்லை
என்கிறீர்கள்.

உண்மை அன்புக்கு முன்
உங்கள் சட்டங்கள் செல்லாது.

நீங்கள்,
தவறான வரைபடம் வைத்துக் கொண்டு
இல்லாத தேசம்
தேடிக்கொண்டிருக்கிறீர்கள்.

வெளிவேட வாழ்க்கைக்காரர்களே
உங்கள்
உதடுகளுக்கும்
உள்ளத்துக்குமிடையே,
ஏன் இத்தனை தூரம் ?

குருடனுக்கு வழிகாட்டும்
குருடனாய் இருக்கிறீர்கள்
நீங்கள்.
உங்கள் சட்டங்களுக்கோ
கண்களே இல்லை

அன்பே முக்கியம்.

மனிதனுள் செல்வது
மனிதனை மாசுபடுத்தாது.
உள்ளத்திலிருந்து
புறப்படும் ஊனமான உண்மைகளே
அவனை
மாசு படுத்தி அழிவில் தள்ளும்.

களைய வேண்டிய
களவு,
போக்க வேண்டிய
பேராசை,
தீர்க்க வேண்டிய
தீச்செயல்,
விலக வேண்டிய
வஞ்சகம்,
விலக்க வேண்டிய
விபச்சாரம்,
செல்ல வேண்டிய
செருக்கு
மறைய வேண்டிய
மதிகேடு

பொல்லாத பொறாமை
இழுக்கு தரும் பழிப்புரை
எல்லாமே
உள்ளிருந்து வெளிவந்து
மனிதனை
தீயவனாக்கி பழிவாங்கும்.

உள் செல்லும் உணவோ
செரிமானம் ஆகி மறையும்.

கரங்களை அல்ல
மனங்களைக் கழுவுங்கள்,
அழுக்கு
உள்ளங்கையில் உள்ளதல்ல
உள்ளங்களில் உள்ளது.

 

நான் யார் அறிவீர்களா ?

 நான் யாரென்று
மக்கள் சொல்கிறார்கள் ?
ஒரு பொழுதில்
இயேசு வினவினார்.

போதகர் என்கிறார்கள்
பலர்,
தீர்க்கத்தரிசி என்கிறார்கள்
சிலர்
சொன்னார்கள் சீடர்கள்.

நீங்கள் ?
கேள்வி பிறந்தது இயேசுவிடமிருந்து.

நீர் மெசியா,
கடவுளின் மகன்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விடைசொன்னார் சீமோன்.

இயேசு அகமகிழ்ந்தார்
அவரை
ஆரத் தழுவினார்.

சீமோனே,
உன்னில்
நான் பெருமை கொள்கிறேன்,
உன் விசுவாசத்தின் விழுதுகளில்
என்
திருச்சபையைக் கட்டுவேன்.

உன் பெயர் இனிமேல்
பாறை.
உன்மேல் கட்டப்படுபவை
அஸ்திவாரம் இல்லாமல்
அழிக்கப்படமாட்டாது.

வானகத்தின்
திறவுகோல்கள் இனிமேல்
உன் விரல்களுக்கு
வழங்கப்படும்.

நீ,
மண்ணகத்தில் கட்டுபவை
விண்ணகத்தில் உனக்காய்
கட்டப்படும்.

இங்கே நீ
அவிழ்ப்பவை எல்லாம்
விண்ணகத்திலும் அவிழ்க்கப்படும்.

இயேசுவின் வலிமை வார்த்தைகள்
சீமோனுக்கு அளிக்கப்பட்டது.
திருச்சபையின்
வாசல் திறக்கும் வல்லமை
சீமோனுக்கு இங்ஙனம்
சொந்தமானது.

 சுயபுராணம் செல்வதில்லை

 

நீர் இறைமகனா
கேட்டது கூட்டம்.

அதெப்படிச் சாத்தியம் ?
என்னைப் பற்றி
நானே
சான்று பகர்தல் ?

நான் சுயபுராணச்
சக்கரங்களில்,
சுழன்று கொண்டிருப்பவனல்ல,
என்
வருகைக்கான தயாரிப்பாளன்
யோவான்.

விண்மீன் நடக்க
மின்மினியின்
விளக்கொளி தேவையில்லை

கடலுக்குக்
கால்வாயின்
சாட்சிகள் தேவையில்லை.

ஆனாலும்,
உங்கள் விசுவாசத்துக்காய்
அவர் வார்த்தைகளை
கேளுங்கள். என்றார்.

யோவான்
விடியும் வரை விளக்கெரிப்பவர்,
நானோ
உலகம் முடியும் மட்டும்
உடனிருப்பவன்.

அவர்
சில காலத்துக்காய்
செலுத்தப்பட்டவர்,
நானோ
காலங்களையே செலுத்துபவன்.

நீங்கள்
துருவித் துருவித் தேடும்
மறைநூலுக்குள்
மறைந்திருக்கிறது எனக்கானச்
சான்று.

நீங்கள்
கேட்டிராத பார்த்திராத
வானகத் தந்தையிடமிருந்து
வருகிறது
எனக்கான சான்று.

மோசே என்னைப் பற்றியே
பேசினார்.
யோவான் என்னைப் பற்றியே
பேசுகிறார்.
நீங்களோ
மரத்தைப் பாராட்டி விட்டு
நிலத்தை நிராகரிக்கிறீர்கள்.

மழையில் மகிழ்ந்து விட்டு
வானத்தை விரட்டுகிறீர்கள்.

நம்புங்கள்
என்னை நம்புபவன்
மீட்படைவான்.
மறுப்பவன் மீட்படையான்.
என்றார்.

மெய்யைப் புறக்கணிக்கும்
கூட்டம்,
பேய் பிடித்திருப்பதாய்
பிதற்றியது.

மெய் மெல்ல
புன்னகைத்து நகர்ந்தது.

 

பாதத்தில் பூசப்பட்ட பாசம்

 

பரிமளத் தைலத்தை,
இயேசுவின் பாதத்தில்
பூசினாள் பெண்ணொருத்தி.

இயேசுவின்
பொதுநலப் போதனைகளை
புரிந்து கொண்டிருந்த
சீடர்கள் அவளிடம்
இதை விற்று ஏழைகளுக்கு
அளித்திருக்கலாம்,
இதன் விலை ஏராளம் என்றனர்.

இயேசுவோ,
வேறு விளக்கம் வைத்திருந்தார்.

ஏழைகள் உங்களோடு
என்றும் உள்ளனர்.

இது,
என் சாவுக்கான ஓர்
முன்னுரையே.
அவளை தடுக்கவேண்டாம்
என்றார்.

இயேசுவின் புதுமைகள் ஞாயிறு, நவ் 23 2008 

 
 

 அற்புதங்கள் அற்புதங்களே

 இயேசுவின் புதுமைகள்.
அவை,
நம்பிக்கைக்கு அளிக்கப்பட்ட
நன்கொடைகள்.
விசுவாசத்துக்கு அளிக்கப்பட்ட
விருதுகள்.

மாந்திரீகத்தின்
மந்திரக் கோல் அல்ல
இயேசுவின் புதுமைகள்,
அவை
உறுதியை வளர்க்கப்
பவனி வந்த
அவனியின் ஆச்சரியங்கள்.

கானாவூர் திருமணம், அற்புதத்தின் ஆரம்பம்

 

முதலவன் செய்த
முதல் புதுமை இது.

கலிலேயாவில் கானாவூரில்
கல்யாணம் ஒன்று
கலகலப்பாய் நடந்தது.

பிந்தியவர்க்கு
பந்தியில் பரிமாற
திராட்சை ரசம் இல்லாமல்
திருமண வீடு
குறையொன்று கண்டது.

இயேசுவும், தாயும், சீடரும்
விருந்துக்காய்
வந்திருந்தனர்.

இறைவனின் திட்டம்
அன்னை மரி
அறிந்திருக்க வேண்டும்.

மகனின் மனசுக்கு
ஓர்
மனு அனுப்பினார்.
திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!.

விண்ணப்பத்தை வாங்கிய
விண்ணக மகன்
வினவினார்.

என் நேரம்
வரவில்லையே அம்மா?
புதுமைகளில் படிக்கட்டுகளை
இப்போதே அடுக்குதல்
அடுக்குமா ?

தாய் தடுமாறவில்லை,
பணியாளரைப் பார்த்தார்
இயேசு சொல்வதை
மறுக்காமல் செய்யுங்கள்
என்றார்.

ஆறு கற்சாடிகள்
யூதரின் 
ஒழுங்கு முறைப்படி
அங்கிருந்தது.

தண்ணீர் நிறையுங்கள்
சாடிகளின் கழுத்துவரை !
அமைதியாய் சொன்னார்
ஆண்டவர்.

இதென்ன வினோதம் ?
கைவசம் ரசமுமில்லை,
வாங்கி வர நேரமுமில்லை.
இதிலே
நீர் எதற்கு
நீர் நிறைக்கச் சொல்கிறீர் ?
எனும் கேள்வி
அவர்கள் உள்ளத்தில்
உருண்டிருக்க வேண்டும்.

உள்ளே ரசம் வேண்டும்
கூட்டமிருக்கிறது.
இயேசுவிடம்
அதற்கென ஓர்
திட்டமிருக்கிறது
என்று நினைத்த அவர்கள்,

இறைத்த தண்ணீர் எடுத்து.
நிறைத்து வைத்தனர்

இயேசு,
அவற்றை ஆசீர்வதித்தார்.

கிணற்றிலிருந்து
கரையேறி வந்த தண்ணீர்
திராட்சை இரமாய்
உருமாறியது !

பயமும், வியப்பும்
பற்றிக்கொள்ள
பணியாளர்கள் நடுங்கினர்.

திருமகன் தந்த
திராட்சை ரசமோ
சுவையில்
போட்டியின்றி வென்றது
புதுமையின்
முதலெழுத்தால் நின்றது.

விருந்தினர்
அருந்தினர்.
வியப்பில் விழிகள்
விரிந்தனர்.

 

குளக்கரைப் பிணியாளன் குணமாகிறான்

 

யெருசலேமில்
பெத்சதா என்றொரு குளம்
இருந்தது.
குணமாக்கும் குளம்.

பக்கத்தில் இருந்த
கட்டிடத்தின் கால்மனையில்
கட்டிலோடு கிடந்தான்
முப்பத்தெட்டு ஆண்டைய
பிணியாளிப் பாமரன் ஒருவன்.

தேவதூதர்கள்
குளத்தைக் கலக்கும் போது
முதலில் இறங்குவோர்
பிணி துறந்து
குணம் பெறுவர் என்பது
நம்பிக்கையாயிருந்தது.

இயேசு அவனிடம்
கனிவுடன் கேட்டார்.
குணமாக விரும்புகிறாயா ?

எனக்கு சொந்தம் இந்த
நோய் மட்டுமே,
என்னை குளத்துள் இறக்கிவிட
பொது நலக் கைகள்
இதுவரை வரவில்லை.

சுயநலக் குளியல்களையே
தரிசித்து தரிசித்து
மரத்துப் போய்விட்டது மனசு.
நோயாளி வருந்தினான்.

இயேசுவோ,
படுக்கையை மடித்து எடுத்துப்போ
நீ
குணம் பெற்றாய் என்றார்.
அந்நேரமே அவன்
வலி விலகி வலிமையானான்.

என் வார்த்தைகளைக் கேட்டு
வாழ்க்கையை கட்டுபவன்
என்றும்
சாவுக்குள் சஞ்சரியான்.
சத்தியமாய் அவன்
வாழ்வுக்குள் வந்திடுவான்.

கல்லறைகள் கலங்கும்
கடைசி நாள் வரும்,
நீதித் தீர்ப்பு அப்போது
நிறுத்தப்படாது.

மனம் திரும்புங்கள்
மனிதராகுங்கள்.
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்.

 

லாசரைப் பிரிகிறது மரணம்

 

லாசர்,
மார்த்தாள், மரியாளுக்கு
சகோதரன்.
இயேசுவின் நேசத்துக்குச்
சொந்தக்காரன்.

பிணியுற்ற லாசரை
பார்த்துவிட்டு,
பயணம் தொடர்ந்தார் பரமன்.
சிலநாளில்
லாசர் இறந்து விட்டான்.

லாசரின் மரணம்
இயேசுவின் புதுமைக்கான
ஓர் களம்.

லாசரின் பிரிவு
இயேசுவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இயேசு திரும்பினார்.
லாசர் வீட்டை நோக்கி
நேசர் நடந்தார்.

எதிர்கொண்டு
கண்ணிரண்டில்
கண்ணீர் மொண்டு
கால் தொட்டு கதறினர்
சகோதரியர்.

இயேசுவே
நீர் இருந்திருந்தால்
அவன் இறந்திருப்பானா ?
நீர்
விலகியதால் தானே
உடலைவிட்டு விட்டு
அவன் உயிர்
விலகிச் சென்றது.

மீண்டும் கண்ணீர்
இமை இடித்துக் கொட்டியது.

கலங்கிய கர்த்தர்,
கல்லறை எங்கே என்றார்.

உடலை அடைத்திருந்த
குகை
தூரமாய்,
ஒரு ஓரமாய் இருந்தது.

கல்லறை வாசலில்
கல்லொன்று கதவாகி இருந்தது.

திறவுங்கள்,
கல்லறையின் கதவை
இயேசு சொன்னார்.

நான்கு நாள் ஆன உடல்
நாற்றத்தில் இருக்குமே,
வினா விழித்தெழுந்தது.

நம்புங்கள்,
வல்லமையின் ஒளி
கல்லறை வரை பாயவேண்டும்.
நானே ஒளி !

கல்லறை திறக்கப்பட்டது.

இயேசு கட்டளையிட்டார்.
‘லாசரே வெளியே வா’

அதிர்ச்சிக் குரல்களும்
ஆச்சரியக் குரல்களும்
மலைகளில் மோதி
மண்டை உடைய,
லாசர் உயிர்பெற்று வந்தான்.

கட்டவிழ்த்து அவனை
நடக்க விடுங்கள்
இயேசு சொன்னார்.

லாசரின் உடலைச் சுற்றியிருந்த
துணி அவிழ்க்கப்பட்டது
கூட்டத்தினர் மனசில்
துணிவு சுற்றிக் கொண்டது.

இயேசு
சாவுக்கு சாவும அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.

அஞ்சிய கூட்டம்
அகல,
எஞ்சிய கூட்டம்
மீட்பின் கூட்டத்தில்
மனசை நட்டது.

 

பாதையோரப் பார்வையற்றவன்

 

இயேசு
எரிகோ செல்லும் வழியில்
பார்வையற்ற ஒருவன்
அமர்ந்து
அகப் பார்வை உள்ளோரிடம்
பிச்சை சேகரித்துக் கொண்டிருந்தான்.

திடீரென
சத்தங்கள் அவனை
சூழ்ந்து கொண்டன.

என்ன சத்தம் ?
அருகில் இருந்தவரை
வினவினான்,
இயேசு செல்கிறார்
என்று பதில் கூறினர்.

சட்டென்று அவனுடைய
பிச்சைப் பாத்திரத்தில்
ஓர்
பிரபஞ்சம் விழுந்ததாய்,
உள்ளுக்குள் விழுந்து கிடந்த
நம்பிக்கை எலும்புகள் எல்லாம்
நலம் பெற்று மிளிர்ந்தன.

இயேசுவே
இரக்கம் வையும் என
கதறினான்.

‘இதென்ன கூச்சல் ?
நாகரீகமற்ற கத்தல்
அவர் பெரியவர்
பேசாதிரு’
என அதட்டினர் அவனை.

அவர்களோ
முகத்தில் கண்கள் கொண்டவர்கள்
இவனோ
நம்பிக்கைக்கு
பார்வை முளைத்தவன்.
நிறுத்தாமல் கத்தினான்.

இயேசு நின்றார்.
அவனைக் கூட்டி வாருங்கள்
என்றார்.

குருடன் வந்தான்,
அப்போதே
பார்வை பெற்ற ஆனந்தம்
அவன் முகம் முழுதும்.

இயேசுவே என்றான்.

‘நான் என்ன செய்ய வேண்டும்’
இயேசு வினவினார்.

பார்வை இழந்தவனுக்கு
தேர்வை வைக்கிறார் தேவன்.

நான்
பார்வை பெற வேண்டும் ஆண்டவரே
என்றான் அழுக்குப்
போர்வைக்குள் கிடந்த அவன்.

பெறு என்றார்.
பெற்றுக் கொண்டான்.

உன்னை நலமாக்கியது
நானல்ல.
என்மேல்
நீ கொண்ட நம்பிக்கையே
என்றார்.

அவனுடைய
கருப்பு வாழ்வின்
நிறுத்தப் புள்ளியாய்
இயேசு
கண்களைப் பரிசளித்து நகர,
அவன்
பார்வைக்குப் பரிகாரமாய்
பாதையை மாற்றினான்.

இயேசுவின்
சுவடுகளுக்குள் விழித்திருந்த
சத்தியத்தைத் தொடர்ந்தான்.

 
பிறவிக் குருடன் கண் திறக்கிறான்
 

பிறவி எடுத்ததே
பார்வையற்றிருக்கத் தான் என்று
கண்ணுடையோர் எல்லாம்
காணாமல் நடக்க,
பிறவிக் குருடன் ஒருவன்
கண்ணின்றி இருந்தான்.

பொருளாதாரம்
அவன் கையில்
பிச்சைப் பாத்திரத்தை
பிச்சையிட்டிருந்தது.

இருளுக்குள் கிடந்து
பாத்திரத்தில் விழும்
பொருளுக்குள் கிடக்கும்
இதயங்களை
கைகளால் தீண்டி
இதயத்தால் அழுது கொண்டிருந்தான்
அவன்.

இயேசுவே,
இவன் குருடனாய் இருப்பது
அவன் பாவமா ?
இல்லை ஜென்ம பாவமா ?
என்று கேட்டது
கூட்டம்.

இயேசு சொன்னார்,
நோயாளி
பாவத்தின் அடையாள அட்டை அல்ல
இங்கே
அருள் நடக்கும் பாருங்கள்
என்றார்.

உமிழ்நீரால் சேறுண்டாக்கி
அவன்
விழிமீது பூசினார்.

போ,
சீலோவாம் குளத்தில்
கண்களைக் கழுவு.
பார்வையைத் தழுவு என்றார்.

அவன்
பார்வை பெற்றார்.
பொருள் தடவி நடந்தவனுக்கு
அருள் உதவி கிடைத்தது.

மண்ணிலிருந்து முளைத்த
ஆதாமின் சந்ததிக்கு
மண்ணிலிருந்தே பார்வை
வழங்கப்பட்டது.

ஆனந்தத்தில் கிடந்தது
நம்பிக்கைக் கூட்டம்,
அதிச்சியில் உறைந்தது
எதிர்த்த கூட்டம்.

பெற்றோர் பரசவப் பட்டனர்
மற்றோர்
இயேசுவைத் தீர்க்க
அவசரப் பட்டனர்.

இயேசு அவர்களிடம்
குருடர்களுக்குப் பார்வை
இருக்கிறது,
இல்லையேல் கிடைக்கிறது.
நீங்களோ
காண்கிறது என்னும் கனவில்
காணாமல் கிடக்கிறீர்கள்
என்றார்.

 

தொழுநோய் தொலைகிறது

 தொழுநோயாளிகள்,
தீண்டத்தகாதவர்கள் என
ஒதுக்கப்பட்ட மனிதக் குப்பைகள்.

பாவத்தின் பதுங்கு குழிகளென்று
புறக்கக்கப்பட்ட
பிணியாளிகள்.

ஒருமுறை
போதனை முடித்துப் பரமன் திரும்ப,
விசுவாசத்தின்
தோள்தொட்டு நின்றான்
தொழுநோயாளி ஒருவன்.

நீர் விரும்பினால்…
நான் குணமாவேன்,
விருப்பத்தின் மருந்துகளால்
நோயோட்ட மாட்டீரா ?
வினயத்தோடு வினவினான்.

இயேசு சொன்னார்,
சித்தமாயிருக்கிறேன்
சுத்தமாகு.
ஏக்கத்தின் உச்சரிப்பை ஏற்று
நோய்க்கு எச்சரிக்கை
அனுப்பினார்.

அதிசயத்தின் ஆடுகளமானது
அவன் தேகம்.
நோயின் சுவடுகள் கலைந்தன
சடுதியில் சுகமானான்,
சகலராலும் ஒதுக்கப்பட்டவன்.

 அரச அலுவலர் மகன் குணமாதல்

 

கப்பர்நாகூமில் இருந்தது
அந்த
அரச அலுவலரின் இல்லம்.

அவர் மகன்
சாவின் நுனியில்
சக்தியின்றி
தொங்கிக் கொண்டிருந்தான்.

எந்நேரமும் அவன்
மரணத்தின் கழுத்தில்
மாலையாகலாம் என்பதை
அறிந்த தந்தை,
பாசத்தின் பச்சையம்
உலர உலரக் கலங்கினார்.

அப்போது தான்
அவருடைய
அச்சாணி சிதறிய
நம்பிக்கைத் தேருக்கு
புது அச்சாணியாய் வந்தது
அச்செய்தி.

இயேசு
கலிலேயாவில் இருக்கிறார்.

கடைசிக் கொழுகொம்பைத் தேடி
செடி
இடம் மாறி ஓடியது.

பேய்கள் பதறி ஓடுகின்றன,
நோய்கள் உதறி ஓடுகின்றன
தண்ணீர் திராட்சை இரசமாகிறது
என்றெல்லாம் வந்த
செய்திகள் அவனுக்குள்
புதிது புதிதாய்
விசுவாச விதைகளை விதைத்துச்
சென்றன.

ஓடினான்,
கலிலேயாவிற்கு.
அங்கு இயேசுவைக் கண்டு
இதயம் கதறினான்.

இயேசுவே வாரும்,
என்
மகனின் பிணிக்கு மருந்து
நீரே,
என் மகனெனும் கிளைக்கு
நீர் தான் வேரே,

அவன் சாகும் முன்
அவனை சமீபிக்க வேண்டும்,
உயிர்
அகலும் முன் அவனுக்கு
அருள வேண்டும்.

என் மகனைக்
குணமாக்க வேண்டும்,
என் நம்பிக்கைகளை
முடமாக்க வேண்டாம்.
என்று மன்றாடினான்.

இயேசு அவரை நோக்கி,
அருஞ் செயல் இல்லையேல்
நீங்கள்
பரம் பொருளை நம்புவதில்லை.

நீ போகலாம்,
உன் மகன் நலமானான்.
என்றார்.

அவரும் திரும்பி
மகனை நோக்கி ஓடினார்.
தொலை தூரத்து
இல்லம் நோக்கி.

மறுநாள்,
பயணத்தின் வழியில்
பணியாளர் வந்து,
மகன் பிழைத்தான் என்றனர்.

தந்தை
உச்சிவரை உற்சாகமானார்,
ஆனந்தத்தின்
ஆணிவேரோடு அறிமுகம்
கொண்டார்.

எப்போது நலமானான் என
ஆனந்தத்தில் வினவ,
நேற்று பிற்பகல் ஒருமணி
என்றனர்.
அது இயேசு
நலமாவான் என்றுரைத்த
நேரமென்று கண்டான் தலைவன்.

ஒரு வார்த்தை
தூரங்களை எல்லாம்
தாண்டி,
மகனை மீட்டதால்,
அவர் குடும்பமே
இயேசுவில் இணைந்தது.

 

திமிர் வாதத்தின் திமிர் தீர்கிறது

 தலைவன் ஒருவனின்
ஊழியனுக்கு வந்தது
உயிர் உலுக்கும் திமிர்வாதம்.

ஒரு வார்த்தை விழுந்தால்
ஊழியன் நலமாய் எழுவான்,
நம்பினான்
நூற்றுவர் தலைவன்.

இல்லம் செல்லலாம்
என்கிறார் இயேசு.
தாழ் பணிந்து
தாழ்மை சொல்கிறான் தலைவன்.

உம் பாதம்
படுமளவுக்கு
என் தகுதி தகாது பரமனே,
ஒரு வார்த்தை சொன்னாலே
ஊழியன் நலமாவான்.

எனக்கு பணிசெய்யவும்
பணியாளர் உண்டு
வா என்றால் வருவான்
போ என்றால் போவான்
செய் என்றால் செய்வான்
எதிர்ப்பதில்லை எதுவும்.

நீரும்
ஆணையிட்டால் போதும்
அருள் வந்து சேரும்
என்றான்.

அவன் நம்பிக்கையின்
ஆழத்தில் அதிசயித்தார்
ஆண்டவர்,
விசுவசித்தபடி நடக்கும் என்றார்,
அவ் வினாடியே
ஊழியன்
வாதம் விலக வலுவடைந்தான்.

 

காய்ச்சல் கலைகிறது

 

பேதுருவின் மாமியார்,
உடல் முழுதும் உலைக்களமாய்
கடும் காய்ச்சல்.
உயிரைச்
சுடும் காய்ச்சல்.

இயேசு வந்தார்,
இருளும் பகலும் ஒரே இடத்தில்
இருக்க இயலுமா ?
நோயும் மருந்தும்
ஒரே புட்டிக்குள் படுக்க இயலுமா ?
நோயைத் தீர்த்தன
இயேசுவின் விரல்கள்.

பிணிகளை உறிஞ்சி
ஆரோக்கியத்தை ஊற்றியது
உன்னதரின் உள்ளங்கை.

கரம் தொட்டதும்
காய்ச்சல் விட்டது.

 

பத்துத் தொழுநோயாளிகள்

 

இயேசுவின்
யெருசலேம் பயணத்தின் வழியில்
இயேசுவை
பத்து பேர் எதிர்கொண்டார்கள்.

அவர்களின்
மேனியெங்கும் தொற்றிக் கிடந்தது
தொழு நோய்.

அவர்களின்
விழிகளெல்லாம்
அழுது கொண்டிருந்தன
விரல்களெல்லாம்
விழுந்து கொண்டிருந்தன.

ஓர்
இலையுதிர்க் கால
மரத்தைப் போல,
நம்பிக்கையின் கடைசி இலை
காற்றிலும் கிளையிலுமாய்
ஊசலாட,
இயேசுவிடம் வந்தனர்.

இயேசுவே,
இரக்கமற்ற சமுதாயம்
எங்களை
முரட்டு இருட்டுக்குள்
பூட்டி விட்டது.

எங்களை வருத்தும்
நோய்களைத் துரத்தும்
என்றனர்.

இயேசு,
‘போய் உங்களை
குருக்களிடம் காட்டுங்கள் ”
என்றார்.

நோயைப் போக்கச் சொன்னால்
குருவிடம்
போகச் சொல்கிறாரே
என்று எண்ணியபடி
நோயாளிகள் சென்றனர்.

வழியிலேயே
அவர்களின்
நோய் விலக , வியந்தனர்.

அவர்களில் ஒருவன்,
ஒருவன் மட்டும்
ஆண்டவரை நோக்கி ஓடினான்,
ஆண்டவரே
நன்றி என்று
கால்கள் தொட்டு கதறினான்.

ஒரு பானை சோற்றுக்குப்
பதம்
ஒரு சோறு தானே.

இதுவரை
தன்னை ஒதுக்கி வைத்த
சமுதாயத்தின் முன்
பதுங்காமல் நின்றான் அவன்.

இயேசு புன்னகைத்தார்,
மற்றவர்கள் எங்கே ?
வேண்டுதல்களில் பத்துபேர்
நன்றி செலுத்துதல்
ஒற்றை மனிதனா ?

செல்.
உன் நம்பிக்கை தான்
உன்னை நலமாக்கிற்று
என்று சொல்.
என்றார்.

 

அசுத்த ஆவி அகல்கிறது

 

உடல் அடையும்
கல்லறைகளுக்கிடையே இருந்து
அசுத்த ஆவிபிடித்தவன்
ஒருவன்
அலறினான்.

மலைகளோடு கூச்சலிட்டு
கல்லறைகளோடு
படுத்துக் கிடந்தவன் அவன்.

நரம்புகளில் பாயும் இரத்தத்தை
கற்களால் கீறி
கண்களால் பார்த்துக்
கொண்டிருந்தவன் அவன்.

சங்கிலிகளால்
பிணைக்கப்பட்டிருந்தும்
இணக்கத்துக்கு வரமறுத்த
இரும்பு நோயாளி அவன்.

பல பேய்களின்
மாநாடு அவன் தேகம்.
அதனால்
பல நோய்களின்
படுக்கையறையாகவும்
நீண்டு கிடந்தது.

அவனுடைய
கண்களுக்கு இயேசு
தெரிந்தார்.
இயேசுவாய்.

என்னை வதைக்கவேண்டாம்
எங்களை
சிதைக்க வேண்டாம்.
நீர் கடவுளின் மகன்
நானறிவேன்.
விட்டுவிடும் என்னை
கட்டளையிட்டு கலைத்து விடாதேயும்
என்று உறுமினான்.

இயேசுவின் கண்களில்
உறுதி உலவியது
பேயின் கண்களில்
கிலி பரவியது.

துரத்துவதாய் இருந்தால்
அதோ
அந்த பன்றிக் கூட்டத்தில்
புகலிடம் தாரும் என
அசுத்த ஆவிகள்
விண்ணப்பம் வைத்தன.

இயேசு
அனுமதித்தார்.
பேய்கள்
மனிதனை விட்டுவிட்டு
பன்றிகளில் புகுந்தன.

மனிதன் நலமானான்
பன்றிகள்
பேய்களின் புகுதலால்
சரிவில் புரண்டு,
கடலுள் பாய்ந்து
காணாமல் போயின.

o

பேய் பிடித்த இன்னும்பலர்
பரமன் பார்வைக்காய்
பார்த்திருந்தனர்.
பேய்களோ
பரமனைப் பார்த்ததும்
பதறின,
உடல்களை விட்டுச் சிதறின.

 பெயல்சபூல்

குறைசொல்லும் கூட்டம்
புதிதாய் கதை சொன்னது,
பேய்களின் தலைவன்
பெயர் பெயல்சபூல்.
அவனைக் கொண்டே
இவன்
அதிசயம் செய்கிறான்.

சாத்தான் சாத்தானை
ஓட்டுமா ?
பூட்டு பூட்டைத் திறக்குமென்று
பூச்சுற்றுகிறீர்களே.
வீடு
தன் வீட்டுக்கெதிரானால் வாழுமா ?
அது
சுய கல்லறைக்குச் சமம்.

தன் தலையில்
உலை வைக்கும் வேலையை
சாத்தான் செய்வானா ?

இறையைக்
குறைசொல்வதைக்
குறைத்துக் கொள்ளுங்கள்,
நிறைவாய் நம்பிக்கையை
நிறைத்துக் கொள்ளுங்கள்.

நம்பிக்கை.
அதுதான்
உடலில் உலவும் உயிர்.

 

இயற்கை இறைவனில் சங்கமம்
 

நீலக்கடலின் நீள்பாதையில்
படகில் ஒருநாள்
பயணித்தார் பரமன்
சீடர்களின் அருகாமையில்.

கடலின் கர்ப்பத்திலிருந்து
புயல்த் துண்டொன்று பதறி எழுந்தது,
அலைகள் எழுப்பிய பள்ளத்துள்
படகுகள் அலைக்கழிக்கப்பட்டன.

அலைகளின் மேல்
முரட்டுக் காற்று உட்கார்ந்து
கடிவாளம் இல்லாக் குதிரையை
கடற்பரப்பெங்கும்
ஓட விட்டுக் கொண்டிருந்தது.

வானத்து மேகத்தை
தொட்டு விடும் ஆவேசத்தில்
அலைகள்
எம்பி எம்பிக் குதித்துக் கொண்டிருந்தன,

காற்றின் சத்தமும்,
இரவின் வண்ணமும் சேர்ந்து
பயத்தின் சதுப்பு நிலத்துக்குள்
சீடர்களைப் பதுக்கியது.

நித்திரையிலிருந்த இயேசுவை
பயந்த சீடர்கள்
பைய எழுப்பினர்.

இயேசுவோ,
காற்றோடும் கடலோடும்
அமைதி என்று சொல்லி
சாந்தப் படுத்தினார்.

சீடர்கள் வியந்தனர்.
அலைகளின் மொழியும்
அறிந்தவர் இவரோ,
காற்றின் காதுகள்
தெரிந்தவர் இவரோ ?

உடல்களோடு மட்டுமல்ல
கடல்களோடும்
கட்டளை இடுகிறாரே.
என
வியப்பின் எல்லையை
தயக்கமின்றி விரித்தனர்.

 

கடல் மீது கடவுள்

 

இயேசு ஒருமுறை
கடல் மீது நடந்து
சீடர்கள்
பயணித்துக் கொண்டிருந்த
படகுக்குச் சென்றார்.

நீர் மீது அவர்கால்கள்
காற்றைப் போல
மூழ்காமல் மிதந்தன.

நான்காம் ஜாம இருட்டில்
கடல் மீது
ஓர்
இருட்டு உருவம்.

பதறிய சீடர்கள்
பேயென்று பயந்து
அலறினர்.

‘அஞ்சாதீர்கள் நான் தான்’
கடல் மீது நடந்தது
பரிச்சயமான பரமன் குரல்.

விசுவாசமே
செயல்களின் சுவாசம்.

பகலை
திருடிச் சென்ற இருட்டு
அலைகளின் முதுகை
வருடிக் கிடந்த இரவு அது.

சின்ன கல் கூட
ஆழம் வரை மூழ்கித் தொலைக்கும்
நீரில்,
நீர் எப்படி நடக்கிறீர் ?
வினாக்கள் உள்ளுக்குள்
வினாத்தாள் தயாரித்தன.
பயம்
பதிலெழுதிக் கொண்டிருந்தது.

பேதுரு
ஆர்வத்தில் எழுந்தார்.
நானும் நடக்கவா ?

இயேசு.
நட என்றார்.

சில அடிகள்
கடல் மீது வைத்த பின்
பயத்தின் உள்ளே
வழுக்கினார் அவர்.

நம்பிக்கை மெல்ல
கைவிட்டுச் செல்ல
கால்கள் தண்ணீருள் தாழ்ந்தன

காப்பாற்றும் கடவுளே
காப்பாற்றும்.
பயத்தின் குரல் பரபரத்தது.

இயேசுவின் கரம்,
அவரைத் தாங்கியது.

விசுவாசம் பெரிது,
நம்பிக்கை இல்லாவிட்டால்
செயல்கள் செய்வது சாத்தியமில்லை.
பரமன் மொழிந்தார்.
 

கூரைக்குள் வானம்

 ஒரு வீட்டில்
பேசிக்கொண்டிருக்கிறார்
இயேசு.

கட்டிலோடு தூக்கி வந்தனர்
ஒரு முடக்குவாதக் காரனை.

நாயகனைச் சுற்றி
மக்கள் கூட்டம்,
வாசல்களில் நசுக்கப்பட்டு
காற்று கூட
வெளிநடப்பு செய்தது.

முடக்குவாதக் காரன்
என்ன செய்வான் ?

நல்லவேளை
அவனை படுக்கையோடு
தூக்கி வந்த கூட்டம்
கூடவே
நம்பிக்கையையும்
கூட்டி வந்திருந்தது.

ஐந்து பக்கங்களும்
அடைந்துபோன வீட்டுக்கு
ஆறாவது பக்கமாய்
கூரை கதவாகி
கூப்பிட்டது.

நோயாளி
கூரை வழியே
பரமனின் முன் இறக்கப்பட்டான்.
பரமன் இரக்கப்பட்டார்.

கொடுக்கிற தெய்வம்
கூரையைப் பிய்த்தும் கொடுக்கும்,
கூரை பிய்த்துக் கேட்டாலும்
கொடுக்கும்.

இயேசு
அவன் பாவங்களை மன்னிப்பதாய்
பகிரங்கப் படுத்தினார்.

ஏட்டுச் சுருளுக்குள்
சுருண்டு கிடந்த கூட்டம்
விரிந்த இயேசுவின் மனசுக்கு எதிராய்
இருண்ட கேள்விகளை
மனதுக்குள்
உருட்டிக் கொண்டிருந்தது.

வானங்களில் வசித்தவர்
மனங்களை வாசித்தார்.
ஏன்
தேவையற்ற கேள்விகளோடு
அவையில் இருக்கிறீர்கள் ?

நான் மனுமகன்
எனக்கு
பாவிகளை தண்டிக்கும்
அகங்காரம் இல்லை.
பாவங்களை மன்னிக்கும்
அதிகாரம் உண்டு என்றார்.

சொல்லிவிட்டு
முடக்குவாதக் காரனை நோக்கி,
எழு
படுக்கையை எடு.
நட…
நல்வழியில் நட. என்றார்.

நோயில் சுற்றப்பட்டு
பாயில் வந்திறங்கியவன்,
நோயைச்
சுருட்டி எறிந்து விட்டு
பரவசப் பயணம் ஆரம்பித்தான்.

கூட்டம்
பிரமிப்பின் வரைபடத்தை
விழிகளில் வரைந்தது.

 

வருடங்களின் பிணி, வருடலில் மறைகிறது

 
பன்னிரண்டு ஆண்டைய
பிணி அவளுக்கு.
விலகவில்லையே எனும் வலி
விலகாதோ எனும் கிலி
எல்லாம் சேர்ந்து அவளை
கண்ணீர் தேசத்தின்
எல்லைக்குத் தள்ளின.

மிச்சமிருந்த நம்பிக்கையை
முடிச்சிட்டு எடுத்துக் கொண்டு
இயேசுவின்
பொன்னடிப்பாத
மண்ணடிச் சுவடைத் தேடி
ஓடினாள்.

நட்சத்திரங்கள் நெருக்கியதால்
மேகத்துக்குள்
மறைந்துபோன நிலவாய்,
கூட்டத்தின் இடையே
கடவுள் நடந்தார்.

பெரும்பாடுள்ள பெண்
தன் நோய்க்காய் நேரம் ஒதுக்க
இறைவனுக்கு இயலாதெனும்
நிலையறிந்து,
ஆடையைத் தொட்டாலே
என்
ஆயுள் நீளுமே,
வலியின் விரல்கள் வீழுமே
என்று உள்ளத்தில் எண்ணினாள்.

ஆடையின் ஓரம் தொட்டாள்.
ஆச்சரியத்தின் ஓர் இழை
அங்கே
ஆடைகளின் வழியே
ஆண்டவனுக்குள்ளிருந்து வந்தது.

தொட்ட வினாடியில்
அவளைத்
தொடர்ந்த வியாதி,
சூடுபட்ட பூனையாய் ஓடியது.

இயேசு திரும்பினார்,
மாது நடுங்கினாள்,

என் ஆடையைத் தொட்டது யார் ?
இயேசுவின் வார்த்தைகள்
சீடர்களை குழப்பின.

புயலடிக்கும் பூந்தோட்டமாய்
கூட்டம் நெருக்கும் இடம் இது !
என்னைத் தொட்ட
காற்று ஏதென்று
கடவுளிடமிருந்தே கேள்வியா ?

சீடர்களின் கேள்வி முடியும்முன்,
மண்டியிட்டழுதாள் மாது,
மன்னியுங்கள் மகானே,
கரம் தொடும் வரம் வராதோ எனும்
பயத்தின் நகம் கிழிந்ததால்,
ஆடையை மெல்ல தீண்டினேன்,
என் வலியின் தேசம் தாண்டினேன்,
நோய்
போய் விட்டது.
மன்னியுங்கள்.

இயேசு புன்னகைத்தார்,
நம்பினவர்களை
வாழ்க்கை நடுவழியில் விட்டுச் செல்லாது,
நீ நலமானாய்,
உன் நம்பிக்கையை
நலமாய் காத்துக் கொள்.

 

இறந்த சிறுமி உயிர்க்கிறாள்

 
தொழுகைக் கூடத் தலைவன்
இயேசுவைப் பணிந்தான்,
கண்களில் ஈரமாய் கண்ணீர்
நெஞ்சில்
பாரமாய் பாசம்.

என் மகள் இறந்துவிட்டாள்.
நீர் வந்தால்
மீண்டு வருவாள்
மீண்டும் வருவாள்
சாவை ஒதுங்கச் சொல்லி
ஓடி வருவாள்.
உம் கைகளை வைப்பீரா ?
கிழிந்த என் மனசை தைப்பீரா ?

ஆம்
என்னும் பதிலை மட்டுமே வேண்டி
அழுது நின்றான்

வேண்டியவர்களை
விலக்கிவிடுவது வேந்தனின்
செயல் இல்லையே,
ஒத்துக் கொண்டு ஓடினார்.

சிறுமியின் வீட்டு
வாசலெங்கும் மரண வாசனை.
தோளில் தாங்கிய மாதா
மார்பில் அடித்து
கண்ணீர் வடித்தாள்.

ஒப்பாரிகளின் சத்தத்தில்
மரணத்தின் ரணம் கசிந்தது.

இயேசு சொன்னார்,
சிறுமி தூங்குகிறார்
சாகவில்லை.
விலகிப் போங்கள்.

கூட்டம்,
நகைச்சுவையைக் கேட்டதாய்
நகைத்தது.

செத்துப் போனதை
ஒத்துக் கொண்ட கூட்டம்,
பொத்திப் பொத்திச்
சிரித்தது.

இயேசு
சிறுமியின் கையை
மெல்லமாய் தொட்டார்.

இமைகள் விலக
சிறுமி சட்டென்று எழுந்தாள்.
கனவு கண்டு விழித்ததாய்
கண்களை விரித்துச் சிரித்தாள்.

நகைத்த கூட்டம்
திகைத்தது.
சிறுமி உயிர்த்தெழுந்தாள் !
கூட்டத்தினரிடையே
சத்தம் செத்து விழுந்தது.

அமைதியாய் நகர்ந்தார்
இயேசு,
பணி முடிந்த திருப்தியில்.
சில மனங்களை
தன்பால் முடிந்து கொண்டு.

பரபரப்புச் செய்தி
பரவலாயிற்று.

 

இறந்த இளைஞன் எழுகிறான்

 

இயேசு
நயீன் என்னும் ஊருக்குச்
சென்றார்,
கரம் பிடித்து நடக்கும்
கடல் அலைகளாய்
பெருங்கூட்டம் பின் தொடர்ந்தது.

ஊரின் வாசலில்
வாழ்வை
ஓர் சாவு வரவேற்றது.

கைம்பெண் ஒருத்தியின்
ஒரே மகன்,
வாழ்வின் ஊன்றுகோலால்
அவளுக்கிருந்த
ஒரே நம்பிக்கை.
அவர் எதிரே
பாடையில்
பயணித்துக் கொண்டிருந்தது.

தாயின் இதயம்
ஒப்பாரிகளை விழுங்கி
உயிரை
கண்கள் வழியே
வடித்துக் கொண்டிருந்தது.

மனசு இடைவிடாமல்
மரண வலியில்
துடித்துக் கொண்டிருந்தது.

இயேசு நின்றார்.
ஒளிக்குள்
ஒளியப் பார்க்கும்
ஓர்
இருட்டுத் துண்டமாய்
மரணம் அவர் முன்னால் நின்றது.

அந்தத் தாயின் வலியை
ஓர்
புதுமைத் தூரிகையால்
துடைத்துவிட முடிவெடுத்தார்.

முன் சென்று
பாடையைத் தொட்டார்,
தூக்கி வந்தவர்கள் நின்றார்கள்.
கண்களால்
ஏன் என்றார்கள்.

இளைஞனே
எழுந்திரு. என்றார்.

மரணத்தோடு
இயேசு பேசியதை உணராமல்
உடலோடு
அவர் உரையாடுவதாய் எண்ணி
கூட்டம் நகைத்தது.

இளைஞன் எழுந்தான்.
பாடை தூக்கியவர்கள்
பயத்தைத் தூக்கினார்கள்.

இறந்து கிடந்தவன்
பேசத்துவங்கினான்,
பேசிக் கொண்டிருந்த கூட்டம்
வாயடைத்தது.

மிச்சம் மீதி இருந்த
அவ நம்பிக்கையை
அவிழ்த்தெறிந்தது.

ஆச்சரியச் செய்தி
ஊரெங்கும்
உச்சரிக்கப்பட்டது.

அச்செய்தி
யோவானின் காதுகளுக்கும்
போய் சேர்ந்தது.

அவர்
ஆயத்தப் பணிகளுக்காக
ஆண்டவரால்
அனுப்பப் பட்டவர்.

யோவான்
தன் சீடரை அழைத்து,
செல்லுங்கள் !
நாம் தயாரிக்கும் பாதைக்கான
மனுமகன் அவர் தானா
இல்லை இன்னோர்
அவதாரம் வருமா
என
அறிந்து வருங்கள் என்றார்.

அவர்கள்
இயேசுவை அணுகி வினவ,
இயேசுவோ
நீங்கள் கண்டவற்றை
அவருக்குச் சொல்லுங்கள்.

என்
செயல்களே எனக்கான
அடையாள அட்டை.

இதோ
நோயாளிகளின் நோய்களெல்லாம்
சொல்லிக் கொள்ளாமல்
ஓடுகின்றன.

பேய்களெல்லாம்
புறமுதுகு காட்டுகின்றன.

மரணத்தின் வாள்கள் கூட
முனை ஒடிந்து போகின்றன.

ஏழைகள்
நற்செய்தி பெறுகிறார்கள்.

அவரிடம் இதையெல்லாம்
அறிவியுங்கள்.

என்னை
விசாரணை செய்யாமல்
என்னில்
விசுவாசம் கொள்பவன்
பாக்கியவான் என்றார்.

 

நம்பிக்கைப் பார்வை நலமளிக்கும்

 குருடர் இருவர்
அகப் பார்வை பெற்று
ஆண்டவனிடம் வந்தனர்.
வந்தனம் செய்தே நின்றனர்.

நீ
குணமாவாய் என்று நம்புகிறாயா ?
ஒரே கேள்வி,
ஆம் என்ற பதில்
ஆணித்தரமாய் வந்தது.

என்மேல் உனக்குள்ள
விசுவாசம் உனக்கு
வாழ்வு தந்தது,
என்று சொல்லி
பார்வை பரிசளித்தார்.

o

நாவின் நரம்புகள்
நலிந்துபோய்,
மெளனம் பேசிப் பழகிய
ஊமையன் ஒருவன் வந்தான்.
புகழ் பாக்கள் பாடி
திரும்பிச் சென்றான்.

 

வாழ்வுக்கான நீர்

 

சமாரியா நோக்கிய
பயணத்தில் களைப்புற்று
இயேசு
கிணறொன்றின் கரையில்
தாகத்தோடு அமர்ந்தார்.

நண்பகல் வெயில் விரிக்க,
கிணற்றில் நீரெடுக்க
சமாரிய மங்கை ஒருத்தி
குடத்துடன் வந்தாள்.

மாதே,
தண்ணீர் தருவாய்
தாகம் கொள்கிறது நாவு.
இறைமகன் விண்ணப்பித்தார்.

அச்சத்தில் விழித்தாள்
அச் சமாரியப் பெண்.

யூதர் பரம்பரையே,
சமாரியரோடு
சகவாசம் கொள்வதில்லையே.
தண்ணீர் தரும் தகுதி
எனக்கில்லையே என்றாள்.

இயேசுவோ,
என்னை அறிந்திருந்தால்
நீயே
வாழ்வின் தண்ணீரை
வழங்கக் கேட்டிருப்பாய்.
நானும் கொடுத்திருப்பேன்
புன்னகையுடன் வந்தது பதில்.

ஆழமான கிணறிருக்கு,
கையில் கயிறு எங்கிருக்கு ?
தண்ணீர் எடுக்கும்
தந்திர வித்தை என்னவோ ?
மங்கை சிரித்துக்கொண்டே வினவினாள்.

இக்கிணற்றின் நீர்
அடுத்த தாகத்தின் அனுமதிச் சீட்டு.
வாழ்வின் நீர்
நிரந்தமாய் உன்
தாகம் தணிக்கும்.

நிரந்தரத் தீர்வு உண்டெனில்
சலுகைச் சமாதானங்கள்
எனக்கெதற்கு
அதிசய நீரை
நீர் எனக்குத் தாரும்.

நீள் தொலைவு நடந்து
பாதங்கள் பழுதடைகின்றன.
பெண் பணிந்தாள்.

உன் கணவனை
என்னருகே அழைத்து வா.
பொருள் பொதிந்த பார்வையில்
அருளாளர் சொன்னார்.

அவளோ,
கணவன் இல்லையே என
கண் கலங்கினாள்.

இயேசு பார்த்தார்.
உண்மை சொன்னதில்
உளம் மகிழ்ந்தார்.
உனக்கு கணவர் ஐவர் இருந்தனர்.
இப்போது இருப்பவன்
கணவன் அல்லன் என்றார்.

ஆச்சரியம் பூச்சொரிய
விழி மின்னல் வீச்செறிய
அவள் அவரை பார்த்தாள்.

உண்மையில்
நீர்
உன்னதரே
இதயம் தொட்ட இறைவாக்கினரே.
என்று பணிந்தாள்.

பரமபிதாவை தொழுவதில்
பழுதின்றி வாழ்
இயேசு பேசினார்.

மெசியா வருவார் என்பதை
அறிவேன் நான்.
வந்ததும் அறிவியும் என்றாள்.

இயேசுவோ,
உன்னோடு பேசும்
நானே அவர்.

அறுவடைக்காலம்
அண்மையில் உள்ளது
அரிவாள் முனைகள்
ஆயத்தமாகட்டும்
என்றாள்.

அவள்
ஊரெங்கும் ஓடிச் சென்று
வியப்புச் செய்தியை விதைத்தாள்.

 

வயிற்றில் பசி
சம்மணமிட்டு அமர
சீடர்கள் கேட்டனர்
உணவு வாங்கி வரவா ?

தந்தையின் விருப்பத்தை
தரணியில்
செயல் படுத்துவதே
அவர்
தனையனாம் எனக்கு உணவு.

வயல்வெளிகளை பாருங்கள்,
இலைகளின் இடையே
தலை நீட்டும் கதிர்கள் எல்லாம்
அறுவடைப் பக்குவத்தில்
தலையாட்டுகின்றன,

அறுப்பவர்கள் கூலிகிடைப்பதால்
மனசின்
சந்தோசக் கலங்களில்
புன்னகை நிறைக்கிறார்கள்,
உரிமையாளன்
அறுவடைப் பயனின்
அளவைக் கண்டு
ஆனந்தத்தில் திளைக்கிறான்.
என்றார்

சீடர்கள்
தலையாட்டினர்
காற்றில் ஆடும் இலைகளென.

 

ஐந்து அப்பமும், ஐயாயிரம் பேரும்

 

ஒருமுறை,
போதனைகள் கேட்கவும்,
புதுமைகள் காணவும்,
மக்கள் கூட்டம் நிறைந்தது.

போதனை நீள,
பசியில் கூட்டம் படுத்தது.

சீடர்களிடம்
இருந்ததோ வெறும்
ஐந்து அப்பமும் இரண்டு மீனும்.

இது போதும்
உள்ளோர் அனைவருக்கும்
உணவளிக்க,
புன்னகைத்தார் பிதாமகன்.

வந்தவரெல்லாம்
பந்தியில் அமரட்டும்
என்றார்.

அமர்ந்தனர்.

அப்பங்களை எடுத்து
வானக தந்தையின் அனுமதி கேட்டு
சீடர்களிடம் கொடுத்து
இயேசு சொன்னார்.

பரிமாறுங்கள்
பசியாறுங்கள்.

ஐந்து அப்பம்
ஐயாயிரம் பேருக்கு ஆகாரமாகுமா ?
ஐயத்தின் முனையில்
சீடர்கள் தொங்கினர்.

ஆனாலும்,
பரமனின் வார்த்தைகளை
கேலிக் குரல்களால்
கழுவிக் களையவில்லை,
ஆணையிட்டதை செய்தனர்.

பந்தியில் அப்பம்
பரிமாறப்பட்டது.
ஐயாயிரம் பேர் உண்ட மீதி
பின்
பன்னிரண்டு கூடையிலும்
நிரம்பி வழிந்தது.

ஆச்சரியம்
மக்களின் மனக்கூடையை
நிரம்பி வழிந்தது.

 
வலிப்பு வலி விலகியது

 

இயேசுவின் மேல்
பார்வை இருத்தி.
வலிப்பு நோய் வருத்திய
மகனுக்காய்
அழுதாள் தாய் ஒருத்தி

ஆண்டவரே இரங்கும்,
வலிப்பு நோயின்
வலியாய் அவதிப் படுகிறான்
என் மகன்,
தண்ணீரிலும் தீயிலும்
வலிப்பின் வலுக்கட்டாயத்தால்
விழுந்து விடுகிறான்.

உம் சீடர்களால்
நோய்தீர்க்க இயலவில்லை
உம்மால் கூடும்,
நோய்கள் ஓடும் என்றாள்.

இயேசு,
அவனை சந்தித்தார்.
எதிர் துருவம் கண்ட
காந்த விசை போல
வலிப்பு நோய் விலகியது.

சீடர்களுக்குள் சந்தேகம்
ஏன் எங்களால்
இயலவில்லை ?

நிறைய நோய்களைக்
குணமாக்கியதுண்டே
இயேசுவின் பெயரால்,
இந்த நோய்மட்டும் ஏன்
இடம் பெயராமல் ?

வினாக்கள் விழுந்தன.

இயேசு சொன்னார்,
உங்கள் நம்பிக்கை
இன்னும் ஆழப் பரவவில்லை.
அது தான் காரணம்.

உண்மை தான்
நம்பிக்கை நங்கூரம்
நாட்டப்படாத கப்பல்,
நிலையாய் இருப்பது
இயலாதே.
 

மீனுக்குள்ளும் நாணயம் உண்டு

 

இயேசுவும்
பேதுருவும்
கப்பர்நாகூம் கோயிலுக்கு வந்தனர்.

வரி செலுத்துங்கள்
வரி செலுத்துங்கள்.
இருவரும் வரி செலுத்துங்கள்.
வரி வசூலிப்போர் கேட்டனர்.

இயேசு பேதுருவிடம்
கேள்வி ஒன்றைக் கேட்டார்
பதில் தெரிந்து கொண்டே.

வரி யாரிடம் வசூலிக்கிறார்கள் ?
தம் மக்களிடமிருந்தா ?
இல்லை பிற மக்களிடமிருந்தா ?

பிறரிடமிருந்து தான்
பேதுரு பதிலிறுத்தார்.

எனில் நாம் வரிசெலுத்துதல்
கட்டாயமல்ல.
எனினும்
கட்டாமல் போவது நம்
திட்டமல்ல.

நீ போய் கடலில்
தூண்டில் போட்டு மீன் பிடி.
இயேசு சொன்னார்.

மீனை விற்றுப் பணமாக்கி
பணத்தை வரியாய்
வரவு வைக்கவா ?
பேதுரு மனதில் கேள்விகள்.

மனக் கேள்விக்கு
மனுமகன் விடைசொன்னார்.

உன் தூண்டிலில்
சிக்கும் முதல் மீனின் வாயில்
இரு நாணயம்
இருக்கக் காண்பார்.

நமக்கான வரி அது.
என்றார்.

பேதுரு,
கேள்விகள் ஏதுமின்றி
தூண்டில் வீச
மீனின் வாயில்
மின்னியது நாணயம்

விண்மீன் வால் நீட்டி
வாழ்த்தியது
அன்று.
கடல்மீன் வாய் காட்டி
வரிசெலுத்தியது
இன்று.

 

கேட்காத காது கேட்கிறது

 

செவிடனும் திக்குவாயனுமாய்
சமீபித்தான் ஒருவன்.

காதுகள் திறந்தால்
ஓசைகளோடு வசிக்கலாமே
திக்கு வாய்
தீருமெனில்
இசையையும் வாசிக்கலாமே

மனதுக்குள் கனவுகள்
விழுதிறக்க
ஆலமர நம்பிக்கையோடு
ஆண்டவரிடம் வந்தான்.

என்
செவிட்டை விரட்டுவாய்
திக்குவாய் தீர்க்குவாய்.
பணிவுடன் பணிந்தான்.

எப்பெத்தா என்றார்
இயேசு.

திறக்கப்படு என்பதே அதன் பொருள்,
திறந்து வைத்தார்
பரம் பொருள்.

சொன்னதைக் கேட்டான்,
காதுகளில் ஆச்சரிய மழை,
வார்த்தைகள் இப்போது
வாசலோடு விழவில்லை
உள்ளுக்குள் வழிந்தது.

வார்த்தைகளுக்கு இப்போது
முட்டி வலி இல்லை,
அவை
நொண்டாமல் நடந்தன.

இன்னொரு புதுமை
இப்படி முடிந்தது
இன்னொரு வாழ்வு
இப்படி விடிந்தது.

நுழைவோம் ஞாயிறு, நவ் 23 2008 

 
வாருங்கள்

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா ?
ஆம் என்பது ஆத்திகமா ?
இல்லை என்பது நாத்திகமா ?

அதோ
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னக் குருவியில்,

அசைவுகளில் அழகூட்டி
வாசனையில்
வரவேற்கும்
வண்ணப்பூக்களின் இதழசைவில்,

வரிசையாய்
மலைகீறி முளைத்திருக்கும்
உயர்ந்த மரங்களின் ஒய்யாரச் சரிவில்,

ஒவ்வோர் அழகும்
ஒளிந்திருக்கும்
பூமியின் பக்கங்களில்
இறைவன் இருக்கிறார்.

சாலையோர ஏழையின்
கைத்தடியாய் நீ
உருமாறும் போதும்,

ஓர்
விவசாய நண்பனின்
வியர்வைக்கரையில் நீ
உனை நனைக்கும் போதும்,

வறுமை வயிறுகளில்
சோற்றுப் பருக்கைகளாய்
நிரம்பும் போதும்,
வியாதியரின் வேதனைப் படுக்கையில்
ஆறுதலாய் நீ
அமரும் போதும்,

அயலானின் தேடல்களில்
சந்தோஷமாய் நீ
சந்திக்கப்படும் போதும்,
ஆண்டவனை நீ
சமீபத்தில் சந்திக்கிறாய்.

எப்போதேனும்
கற்பனையில் மோட்சத்தை
எட்டிப்பார்க்கத் தோன்றும் எனக்கு.

விரித்த கரங்களும்,
சிரித்த உதடுகளுமாய்,
ஆசனத்தில் அமர்ந்திருக்கும்
ஓர் கடவுள்,
சிறு வயதிலிருந்தே
பார்த்துப் பழகிய
இயேசுவின் முகம்.

சில வேளைகளில்
நான் குழந்தையாய்
அவர் கரங்களைப் பிடித்துக் கொண்டு,
திராட்சைத் தோட்டத்தில்
சின்ன நடை பயில்வதாய்
சிலிர்ப்பைத் தரும்.

செபிக்கும் போதெல்லாம்,
ஓர் சிவப்பு ஆடையின் உள்
தனைப் புதைத்து,
சிறு பாறையில் அமர்ந்து
நான் பேசுவதைக் கேட்பதாய்,
ஆறுதலாய் என் தோள் தொடுவதாய்
தோன்றும்.

சில வேளைகளில்
உருவத்துள் இழுக்க இயலா
ஓர் ஒளிப் பிரவாகமாய்….

கடவுளைக்
கடவுளாய் காணும் நிமிடங்கள் அவை.

சுயநலமற்ற அன்பின்
சுய உருவம் இயேசு.

போதனைகளைக் கேட்பவன்
புனிதனல்ல,
போதனைகளின் படி
வாழ்பவனே மனிதன்.
மனிதனாய் மாறுவதே
புனிதனாவதன் முதல் படி.

இயேசுவின் போதனைகள்,
சில தலைமுறைகளைச்
சலவை செய்தது.
ஆணித்தரமாய் இறங்கி
சம்பிரதாயங்களின் ஆணிவேரை
அச்சமில்லாமல் அசைத்தது.

கிறிஸ்தவம்,
இறைவனின் போதனைகளின்
பிம்பமாக வேண்டும்

கிறிஸ்தவன்
கிறிஸ்துவின் வாழ்வின்
பிம்பமாக வேண்டும்.

கிறிஸ்துவின் போதனைகள்
ஒரு
குழுவுக்காய் கொடுக்கப்பட்ட
ஒளித்து வைக்கப்பட வேண்டிய
ஓலைச் சுவடிகளல்ல.

முழு மனித சமுதாயத்துக்காய்
வழங்கப்பட்ட வழிமுறைகள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்
கொடுக்கப்பட்ட நன்கொடைகள்.

இயேசுவின் போதனைகள்,
மனுக்குலத்தின் மாண்புகள்.
மதச்சாயம் கண்டு
இதை
மறுதலித்து விடாதீர்கள்.

நுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008 

 

வாசல்

jesus_185

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார், 
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.

%d bloggers like this: