பாடுகளின் முன்னறிவிப்பு
தனக்கு வரப்போகும்
பாடுகளின் பாதையை
விளக்கத் துவங்கினார்
இயேசு
துயரங்களின் துருவங்களுக்கே
தான்
பயணிக்கப்போவதை
அடுத்திருந்த சீடர்களுக்கு
எடுத்துக் கூறினார்.
மனுமகன்
மரணத்திற்குள் தள்ளப்பட்டு
மண்ணுக்குள் மூன்று நாள்
புதைக்கப்படுவார்.
மனுமகன்
முற்றுப்புள்ளி இடப்படும் கதையல்ல,
அவர்
ஆரம்பத்துக்காய் புதைக்கப்படும்
விதை.
மூன்றாம் நாள்
நான் உயிர்ப்பேன்.
மரணத்தின் சுருக்குக் கயிறுகளில்
மரணத்தைத் தூக்கிலிட்டு
நான் உயிர்ப்பேன்.
இயேசு சொல்ல
சீடர்கள் அதிர்ந்தனர்.
இயேசுவின் பின்னால்
கர்வத்துடன் பவனி வந்தவர்கள்,
இயேசு
மரணிப்பேன் என்றதை
ஜீரணிக்காமல் பார்த்தனர்.
சட்டென்று
சங்கடத்தின் வார்த்தைகள்
அவிழ்த்தார் சீமோன்.
ஆகாது ஆண்டவரே…
உமக்கிது நேராது,
என் விழிகள் அதை பாராது.
இயேசுவின் வார்த்தைகள்
கோபத்தில் எழுந்தன.
போ அப்பாலே சாத்தானே.
நீ
கடவுளின் கருத்துக்கு
விரோதமாய் நகர்கிறாய்.
இறப்பதற்காகவே
பிறந்தவன் நான்.
என் சாவு
தற்காலிக இருள் போன்றது
நிரந்தர வெளிச்சத்தின்
முன்னுரை அது.
கடவுளின் விருப்பத்தை
ஆமோதிக்காதவர்கள்
அகன்று போகட்டும்.
இயேசுவின் கோபத்தில்
சிக்குண்ட சீமோன்
பாயும் சிங்கத்தைக் கண்ட
பசு போல
சத்தமின்றி பின்வாங்கினார்.
துணிந்தபின் விலகாதே
ஒருவன்
கோபுரம் கட்ட
ஆசைப்பட்டால்,
அஸ்திவாரம் தோண்டும் முன்பே
அதை
ஆராய்ந்து பார்க்கட்டும்.
பாதியிலே
விட்டு விடுபவன்
பழிச்சொல்லுக்கு ஆளாவான்.
போரிடச் செல்லும் அரசன்
எதிர் படையை
எதிர்கொள்ளும் முன்
படை பலத்தை
கணித்துக் கொள்ளட்டும்.
வெல்லும் போரா
வெள்ளைக் கொடியா என்பதை
அந்த
முன் ஆராய்ச்சி
முடிவு செய்யட்டும்.
கிளைகளின் கனவுகள்
பலிக்க வேண்டுமெனில்
வேர்களின் கால்கள்
நிலைக்க வேண்டும்.
என்னை பின்செல்பவன்,
தன்னை வெறுத்து
தன்
சிலுவையைச் சுமந்துகொண்டு
பின் செல்லட்டும்.
இது
பூக்களின் பயணமல்ல.
சிலுவைகளின் பேரணி.
இது
சங்கீதங்களின் வழிசல்
பாதையல்ல.
சங்கடங்களின் நெரிசல்
பாதை.
ஆன்மாவை இழந்தவன்
ஆகாயம் வரை தனதாக்கினாலும்
ஆதாயம் என்ன ?
உலகையே உள்ளங்கைக்குள்
உருட்டி வைத்தாலும்
உயிரை இழந்தால் பயனென்ன ?
முதன்மைப் பட்டியலில்
முதலிடம் பிடிப்பவை
விண்ணக வாழ்வின்
நுழைவுச் சீட்டுகளாகட்டும்.
மண்ணுலக வாழ்வின்
மதிப்பீடுகளின் அளவைகளில் தான்
விண்ணக இருக்கைகள்
வழங்கப்படும்
மரணம் என்னை நெருங்கும்
இன்னும் இரண்டு நாளில்
பாஸ்கா விழா.
இறைமகன் அப்போது
மரச் சிலுவை மரணத்துக்கு
கையளிக்கப்படுவார்.
சீடர்களிடம்
தன் சாவின் காலத்தைச்
சொன்ன இயேசு,
நீங்கள் என்னைவிட்டு
விலகி விட
விரும்புகிறீர்களா ?
என கேட்டார்.
எதிர்ப்பின் சூறாவளிக்கு
சிதைந்துவிடாத
சிந்தனை இருக்கிறதா,
பயத்தின் புயலில்
நிறம் மாறி விடாத
உரம் இருக்கிறதா என
அறியவே வினவினார்.
பேதுரு உடனே
பதிலளித்தார்,
ஆண்டவரே,
வாழ்வுதரும் வார்த்தைகள்
உம்மிடம் இருக்க,
வேறு யாரிடம் நாங்கள் போவோம் ?
இரையாவேனென்னும் பயத்தில்
மீன்கள்
கரையேறலாமோ
கடவுளே –
என்பதாய் ஒலித்தன
பேதுருவின் வார்த்தைகள்.
இயேசு புன்னகைத்தார்.
நீங்கள்
அகல மாட்டீர்கள் என்பதும்,
உங்களில் ஒருவன்
அலகை என்பதும்
எனக்குத் தெரியும் என்றார்.
தொடர்ந்தவனே இடர் தருகிறான்
இயேசுவின்
பன்னிரு சீடரில் ஒருவன்
யூதாஸ்.
யூதாஸ்
சலன மனதின் சொந்தக்காரன்.
மனக் குளத்தில்
வெள்ளிப் பணம் விழுந்தால்
துள்ளிக் குதிக்கும்
மீனாய் மாறுபவன்.
இயேசுவைக் கொல்ல
சதி வேலை செய்த
தலைமைக் குருக்கள்
வலையை வீசி
யூதாசைப் பிடித்தார்கள்.
இயேசுவை பிடிக்கப் போகிறோம்.
அவரை நீ
படைவீரர்களுக்கு
அடையாளம் காட்டினால்,
வெள்ளிப் பணத்தை
அள்ளிச் செல்லலாம்
செல்வம் கொண்டு உலகை வெல்லலாம்.
என
ஆசை விலங்குகளை
அவிழ்த்து விட்டார்கள்.
யூதாஸ்
சிந்தித்தான்
காட்டிக்கொடுக்கலாமா வேண்டாமா
என்றல்ல,
எத்தனை பணம் வாங்கலாம்
என.
காட்டித் தருவேன்
முப்பது வெள்ளிப்பணம்
தப்பாது தருவீர்களா ?
யூதாசின் விண்ணப்பம்
வாதிடாமல்
ஒத்துக் கொள்ளப்பட்டது.
ஒரு
சகாப்தத்தின் சரிவுக்கு
சதித் திட்டம் அங்கே
சப்தமில்லாமல் ஒப்பமானது.
சூரியனையே
எரித்துச் சாம்பலாக்க நினைத்த
அறிவிலிகளின்
அருகிருந்தான் அவன்.
கட்டளைகளுக்கு அப்பாற்பட்ட
கர்த்தரை
நான்
கட்டிப் பிடித்து காட்டித் தருவேன்.
ரத்தத்தின் மாளிகைக்கு
அவரை
முத்தத்தின் முன்னுரையோடு
அனுப்பிவைப்பேன்.
என்றான்.
சுயநல அழைப்புகளுக்கு
செவிகொடுத்ததால்,
யூதாஸ்
இறையின் வரலாற்றில்
ஓர்
கறையாய் உட்கார்ந்தான்.
இறுதி இரவு உணவு
மாலையில்,
பன்னிரு சீடரோடு
பந்தியமர்ந்தார் பரமன்.
அப்பத்தை எடுத்து
பிரார்த்தனை முடித்துப்
பகிர்தளித்து,
சீடர்களைப் பார்த்து சொன்னார்,
நண்பர்களே,
உங்களில் ஒருவன் என்னை
காட்டிக் கொடுப்பான்.
தெளிவாய் வந்தது
தெய்வ வாக்கு.
ஒட்டிக் கொண்டிருக்கும்
உங்களில் ஒருவன்
எனை காட்டிக் கொடுப்பான்.
என்னை
சுட்டிக் காட்டும் அவனுக்கு
ஐயோ கேடு.
அப்போஸ்தலர்கள்
அதிர்ந்தனர்,
எங்களில் ஒருவனா ?
ஏனிந்த சந்தேகம் ஆண்டவரே.
வானுக்கு எதிராய்
பறவைகள் வழக்கிடுமா ?
நதியின் துளிகள்
மழைக்கு எதிராய்
மனு கொடுக்குமா ?
யார் என்று சொல்லுங்கள்
ஆண்டவரே,
யார் அவன் சொல்லும் !
சினத்தில் சீடர்கள் சிவந்தனர்.
என் பாத்திரத்தில் கையிட்டு
என் முகத்தில்
புன்னகையிட்டு,
என்னோடு இருக்கும் ஒருவனே
அவன்.
நம்பிக்கை மீது
கோடரி வைத்த அவனுக்கு
ஐயோ கேடு என்றார்.
யூதாஸ் அவரிடம்,
காட்டிக் கொடுப்பவன்
நானா ஆண்டவரே என
அப்பாவியாய்க் கேட்டான்.
நீயே சொன்னாய்
புன்னகைத்தார் பரமன்.
பணி வாழ்வுக்குத் தேவை பணிவு
மரணத்துக்கு முந்திய,
இறுதி இரவுணவில்
இயேசு
சீடர்களின் பாதங்களை
தண்ணீரால் கழுவி
இடைத் துண்டால் துடைத்தார்.
உம் பாதம் பட்ட
நிழலில் நடந்தவர்கள் நாங்கள்
நீர்
எங்கள் பாதம் தொட்டு
கழுவுவதா ?
அரச கிரீடம் ஒன்று
அடிமை ஆடை துவைப்பதா ?
அதிர்ச்சிக் கேள்விகளால்
சீடர் குழு
நடுங்கியது.
தலைவன் என்பவன்
பணியாளன் என்பதை
பணி மூலம் புரியவைத்தார்.
பேதுரு வருத்த வார்த்தை
வருவித்தார்.
இயேசுவே
நீரா என் பாதங்களை
நீரால் கழுவுவது ?
நேராது பரமனே இது,
நேரானதல்லவே இது.
நான் உன் பாதங்களை
கழுவாவிடில்,
உனக்கு என்னோடு பங்கில்லை.
தாழ்த்துவதே தலையாய செயல்.
நான் செய்வது
பின்னர் உனக்குப் புரியும்.
எனில்,
பாதம் மட்டும் ஏன் பரமனே ?
தலையில் கூட
தண்ணீர் ஊற்றலாமே ?
பதட்டத்தில் பேசினார்
பேதுரு.
குளித்தவன் தூய்மையாய்
இருக்கிறான்
எனவே,
பாதம் கழுவினாலே
போதுமானது.
தலையில் இருந்தாலும்
தரையில் கிடந்தாலும்
கிரீடம் கிரீடம் தான்.
பணிவில் இருப்பவன் மட்டுமே
பணியில் இருக்க வேண்டும்.
உங்கள் ஆண்டவரான
நானே
உங்கள் பணியாளனானேன் !
நீங்களும்
கர்வத்தை அணியாமல்,
கவனமாய் இருங்கள்.
தற்பெருமைத் தலைகளை
துளிர்க்க விடாதீர்கள்
பணிவின் துணிவை வளருங்கள்.
என்றார்.
உடலை உண்ணுங்கள்
இயேசு
கோதுமை அப்பத்தை
கைகளில் ஏந்தி,
இது என் உடல் என்றார்.
திராட்சை இரசக் கிண்ணத்தை
எடுத்து
இது என் இரத்தம் என்றார்.
என் உடலை உண்டு
என் இரத்தத்தைக் குடித்து
என்
செயல்களுக்குள் செல்லுங்கள்.
இதுவே,
என் சாவுக்கு முந்தைய
இரவு உணவு.
இனிமேல் வருவதெல்லாம்
வேதனையின் காலம்.
போ யூதாஸ்,
நீ
செல்ல வெண்டிய தருணம் இது
செய்ய வேண்டியதை செய்.
என்றார்.
யூதாஸ் விலகினான்.
இயேசு பேசத் துவங்கினார்.
இப்போது
மானுட மகனின்
மாட்சிமைக் காலம்.
இன்னும் சில நாள் மட்டுமே
என் காட்சிக் காலம்.
பின் நீங்கள் என்னைக்
காணல் இயலாது.
நான் வரும் இடத்துக்கு
இப்போது நீங்கள்
வருவதும் நேராது.
மீண்டும் வருவேன்,
உங்கள் நம்பிக்கையின் மேல்
சில
பூக்களைத் தூவ.
உங்களுக்கான என்
கட்டளை ஒன்றே,
அன்பு செய்யுங்கள்.
நான் உங்களுக்குக் காட்டிய
அன்பின் ஆழத்தை
நீங்கள்
எல்லோர் மீதும் காட்டுங்கள்
பேச்சினால் பெரியவர்களாகக்
காட்டிக் கொள்ளும்
மனிதர்முன்,
நீங்கள்
புயல் போன்ற
செயல்களால் அறியப்படுங்கள்.
நீங்கள் என் பணியாளர் அல்ல,
ஏனெனில்
தலைவன் செய்வதை
பணியாளன் அறியான்.
நீங்களோ
என் தோழர்கள்.
என்னோடான பயணத்திற்கு
இணங்கியவர்கள்.
உங்களுக்கும் எனக்குமிடையே
மறைக்கும் திரைகள்
தொங்கியதில்லை.
எதிர் கருத்துக்கள் எதுவும்
தங்கியதில்லை.
உலகம் உங்களை வெறுக்கும்.
கவலைப் படாதீர்கள்
என்னையே மறுத்தவர்கள் அவர்கள்.
நீங்கள் இனி
உலகின் சொத்துக்களல்ல,
விண்ணக வித்துக்கள்.
நீங்கள் துயருறுவீர்கள்
அப்போது உலகம் மகிழும்.
நீங்கள் புலம்புவீர்கள்
அப்போதும் உலகம் மகிழும்.
ஆனால்,
உங்கள் புலம்பல் நீளாது.
வலியின் எல்லையெல்லாம்
மீண்டும்
என்னைக் காணும்போது
மாண்டு போகும்.
ஆனந்தம்
மீண்டு வரும் மீண்டும்.
அபோது நீங்கள்
சந்தோசத்தின் சக்கரவர்த்திகளாய்,
பூலோக அரியணையில்
புன்னகை புரிவீர்கள்.
உங்கள் அகமகிழ்ச்சி
அழிக்கப் பட மாட்டாது !
என்னிடம் நீங்கள்
விண்ணப்பங்கள் வைத்ததில்லை,
இனிமேல்
கேளுங்கள்… தரப்படும்.
உங்களுக்கு எதுவும் மறுக்கப் படாது
என்றார்.
பின்
வானத்தை நோக்கி.
தந்தையே,
நேரமாகி விட்டது
மகனை மகிமைப் படுத்தும்
என்றார்.
சீடர்கள்,
இயேசுவின் வார்த்தைகளை
உள்ளத்துள்
உருட்டிக் கொண்டிருந்தார்கள்.
மறுதலிப்பாய் நீ
சீடர்களோடு இயேசு
ஒலிவ மலைக்கு சென்றார்.
இன்றிரவே,
நீங்கள்
என்னைக் குறித்து இடறல் படுவீர்கள்.
மேய்ப்பனை வெட்டியபின்
மந்தைகள் சிதறடிக்கப்படும்
என்றார்.
மரத்தை முறித்துவிட்டால்
பறவைகள்
பறந்துவிடும் என்பதை
இயேசு அறியாதவரா ?
பேதுரு வருந்தினார்.
யார் உம்மை மறுதலித்தாலும்
நான் மாட்டேன் மெசியாவே என்றார்.
இயேசு சிரித்தார்,
இன்று இரவு
சேவலின் சத்தம் கேட்கும் முன்
மும்முறை நீ என்னை மறுதலிப்பாய்
என்றார்.
பேதுருவோ,
இல்லை இயேசுவே…
சாவதென்றாலும் அது
உம்மோடுதான் என்று முன்மொழிந்தார்.
சீடர் அனைவரும்
அதை வழிமொழிந்தனர்.
தந்தையோடு செபம்
பின்னர் இயேசு
கெத்சமெனித் தோட்டம் வந்தார்.
பேதுரு,யாக்கோபு,யோவான்
அவரோடு இருந்தனர்.
இறப்புக்கு முந்தைய இரவின்
வேதனையில் இயேசு செபித்தார்.
தந்தையே
முடியுமெனில்
இந்த வலி மடிந்து போகட்டும்.
ஆயினும்,
என் விருப்பம் முக்கியமன்று
உம் விருப்பமே என் பாக்கியம்.
மனிதனாய் வந்த மனுமகன்
வேதனையின் வார்த்தைகளை
வெளியிடுகிறார்,
ஆனாலும்
தந்தையின் விருப்பத்துக்கு
தலைவணங்குகிறார்.
சீடர்களோ
நித்திரையின் உச்சத்தில்
விழுந்து கிடந்தார்கள்.
அவர்கள்
நிலமையின் வீரியத்தை
உணராதவர்கள்.
பெருமழை வருவதறியாமல்
பறந்து திரியும்
பஞ்சு போல,
ஓய்வில் சாய்ந்திருந்தார்கள்.
ஒருமணி நேரம் செபிக்க
உங்களுக்கு முடியாதா ?
உள்ளம் ஊக்கமானது,
ஊனுடல் வலுவற்றது தான்.
ஆயினும்
விழித்திருந்து செபியுங்கள்.
கூறிய இயேசு,
இரண்டாம் முறையும்
தனியே சென்று
தந்தையிடம் செபித்தார்.
நான் பருகினால் மட்டுமே
இந்த
துன்பத்தின் பாத்திரம் காலியாகுமெனில்
விருப்பத்துடன் பருகுவேன்.
உம்
திட்டம் மட்டுமே நிறைவேறட்டும்
என்றார்.
மூன்றாம் முறையாக
மீண்டும் மனசும் உடலும் மண்டியிட
இயேசு செபித்தார்.
ஆழமான செபத்தின்
கரைகளில்
நிம்மதிக் காற்று அவரை வருடியது.
இதயம்
எதையும் தாங்க தயாரானது.
பின் சீடர்களிடம் வந்து,
தூக்கம் போதும்
துக்கத்தின் காலம் துரத்துகிறது.
என் சாவுக்கான மேளம்
சப்தமிடுகிறது.
எழுந்திருங்கள்
போகலாம் என்றார்.
நீளமான தூக்கத்தில்
மூழ்கிக் கிடந்த சீடர்கள்
அந்த
விடியலுக்கு வெகுதூரமிருக்கும்
அதிகாலையில்
தூக்கத்தை உதறி எழுந்தார்கள்.
இறுதிக்குள் நுழைகிறார் இயேசு
அப்போது
அவர்களை நோக்கி
ஆயுதங்களோடு
ஓர் அவசரக் கூட்டம் வந்தது
யூதாஸ் தலைமையில்.
யூதாஸ் முன் வந்தான்,
இயேசுவை முத்தமிட்டான்.
இயேசு அவனிடம்,
யூதாஸ்,
முத்தம் அன்பின் அடையாளம்,
அதை
சுட்டிக் காட்டும் அடையாளமாக்கி
அசிங்கப்படுத்தி விட்டாயே
என்றார்.
படை வீரர்கள்
உடைவாள்களை உருவிக் கொண்டு
கள்வனை வளைக்கும்
காவலர் போல
சுற்றி வளைத்தனர்.
சினந்த சீடர் ஒருவன்
கூர் வாளெடுத்து உருவி
வீரன் ஒருவனின்
காதைக் கத்தரித்தான்.
இயேசு தடுத்தார்.
உன் வாளை உறையில் போடு,
வாளெடுத்தவன் வாளால் மடிவான்.
இவை நிகழ வேண்டும்
என்பதே ஏற்பாடு என்றார்.
துண்டாய் விழுந்து
துடித்தச் செவியைத் தேடி எடுத்து
வெட்டுண்ட இடத்தில் தொட்டு
ஒட்டுப் போட்டார் இயேசு.
தீமையின் பறவைக்கும்
நன்மையின் சிறகுகளை
நல்குகிறார்.
தடவிப் பார்த்த காவலன் விரல்கள்
வெட்டுப்பட்ட
சுவடு கூட இல்லாததால்
திடுக்கிட்டுத் திரும்பியது.
தனக்கான
பலிபீடம் தயாரித்தவர்களோடும்
பரமனிடம் இருந்த பரிவு
பிடிக்க வந்த பரிவாரங்களை
உலுக்கியது.
ஆனாலும்
அவர்கள், ஆள்வோரின்
கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள்.
ஆணை யின்
மிதியடிகளை
தூக்கிச் சுமப்பவர்கள்.
இயேசு
அவர்களைப் பார்த்து.
திருடனைப் பிடிக்க வருவதுபோல்
இருட்டைக் கூட்டிக் கொண்டு
திரிவதேன் ?
எதற்கு இந்த
அதிகாரத் தடிகளும்,
மரணம் சுமக்கும்
உடை வாள்களும் ?
நான்
நாள் தோறும் கோயிலில்
நற்செய்தி அறிவிக்கிறேன்
அப்போதெல்லாம் நீங்கள்
ஆயத்தமாகவில்லையா
என்றார்.
இழுத்துச் செல்ல வந்தவர்கள்
இயேசுவை
அழைத்துச் சென்றார்கள்.
உடனிருப்பேன் என்ற சீடர்கள்
உடனே
ஓடிப்போயினர்.
காய்பாவிடம் கையளிக்கப் படுகிறார்
இயேசு
காய்பா என்பவனிடம்
கையளிக்கப்பட்டார்,
அவன் ஒரு தலைமைக் குரு.
பொய்சாட்சிகளுக்காய் அவர்கள்
பிணங்களைப்
பிராண்டினார்கள்.
எந்த வலையில் போட்டு
இவனை இறுக்குவதென்று
இதயத்தைக் கசக்கினர்.
இறுதியில்
இவன் ஆண்டவரின் ஆலயத்தை
இடித்துக் தள்ளுங்கள்
மூன்று நாட்களில்
மீண்டும் கட்டுவேன் என்றான்,
என்றனர்.
உன் பதில் என்ன?
தலைமைக் குரு
அதிகாரத் தோரணையில்
அகங்காரமாய் கேட்டான்.
இயேசுவோ
மெளனத்தின் மீதே
மனம் சாய்த்திருந்தார்.
நீ
மெசியாவா ?
குரு மீண்டும் கொக்கரித்தார்.
நீரே சொல்லிவிட்டீர்.
இனிமேல்
மனுமகனின்
மாட்சிமை வருகையை
நீர் கண்டிப்பாய் காண்பீர் என்றார்.
இதோ…
தேவ நிந்தனை.
இனியென்ன சாட்சி வேண்டும்
இவன்
சாட்சியின்றி சாவுக்குரியவன்.
கூடியிருந்தவர்கள்
தலைமைக் குருக்களின்
சூதுக்குள்
குடியிருந்தவர்கள்,
அவர்கள்
இயேவைக் கொல்லச் சொல்லி
நச்சரிக்க வேண்டுமென
எச்சரிக்கப் பட்டவர்கள்.
சதிகார எதிராளிகளின்
அவையில்,
நீதிப் பறவை
நிர்மூலமாக்கப் பட்டது.
வாழ்வின் உச்சத்தை போதித்தவர்
கன்னங்களில்
எச்சில் உமிழப்பட்டது.
உன்னதங்களின் தேவனின்
கன்னங்களில் அறைகள் விழுந்தன.
வீதிகளில் இன்னும்
வெளிச்சம் விழவில்லை,
மக்கள் இன்னும்
விழித்து எழவில்லை.
மறுதலிக்கப் படுகிறார் மனுமகன்
கூடத்தின் முற்றத்தில்
குளிரைக் கொலைசெய்ய
விறகுக்கு மேல்
வன்முறை வெப்பம்
கொழுந்து விட்டு எரிந்தது.
பேதுரு,
வெப்பத்தின் தெப்பத்தில்
முக்காடிட்டு
மறைந்திருந்தார்.
ஊழியக்காரி ஒருத்தி
பேதுருவைப் பார்த்ததும்
புருவம் சுருக்கினாள்,
ஐயம் பெருக்கினாள்.
நீ
இயேசுவோடு இருந்தவனா ?
கேள்வி விழுந்த வேகத்தில்
தடுமாறினார் பேதுரு.
நானா ? இல்லையே !
படபடத்தது பதில்.
முகத்தை இன்னும்
முறையாய்
மறைத்து
மறைந்திருந்தார் பேதுரு.
இயேசுவுக்கு என்ன நிகழ்கிறது
என்பதை
அறிந்து கொள்ளும்
வலி கலந்த ஆர்வம் அவருக்கு.
இரண்டாவதாய் இன்னொருத்தி
அருகே வந்து
பதுங்கிய
பேதுருவிடம் பேசினாள்.
பேதுருவின் பேச்சில்
உழைக்கும் வர்கத்தின்
வாசனை,
மீன் மணத்துடன் மிதந்திருக்க
வேண்டும்.
உன் பேச்சே உன்னை
காட்டிக் கொடுக்கும் கண்ணாடி,
நீ
அவனோடு இருந்தவன் தான்
அவள் அழுத்தமாய் உரைத்தாள்.
அது நானில்லை,
அவர் யாரென்றே அறியேன்
பேதுரு மீண்டும்
தப்பித்தல் பதிலை ஒப்பித்தார்.
அவள்
தன் சந்தேகத்தை
சில காதுகளுக்குள் ஊற்றினாள்.
மூன்றாம் முறையாக,
வேறு சிலர்
பேதுருவின் பக்கம் வந்தனர்.
உண்மையைச் சொல்.
நீ அவனுடைய சீடன் தானே
மிரட்டல் குரலில்
மிரண்டு பதிலிறுத்தார் பேதுரு.
இல்லை
இல்லை
இல்லவே இல்லை.
மறுதலித்த ஓசை
முடிவடைந்த வினாடியில்
சேவல் ஒன்று
எங்கோ சப்தமிட்டது.
பேதுருவின் உள்ளத்தில்
அதிர்ச்சிப் பருந்து
வந்தமர்ந்தது.
சேவல் ஒலி
கேட்கும் முன்
மும்முறை என்னை மறுதலிப்பாய்
எனும்
இயேசுவின் ஒலி
மனதில் எதிரொலிக்க
வெளியே சென்று கதறி அழுதார்.
அடுத்தகட்ட விசாரணை
இயேசு,
பிலாத்துவின் அரண்மனைக்கு
பழிவாங்க
அழைத்துச் செல்லப்பட்டார்
செய்திகள் கேள்விப்பட்ட
யூதாஸ் வருந்தினான்.
இயேசு
தண்டனைகளிலிருந்து
தப்பிவிடுவார் என்ற கணக்கு
தப்பாகிவிட்டதில் கலங்கினார்.
சூரியனை உருக்கி
குடுவையில் கொட்டுவது
இயலாதென்றே
இறுமாந்திருந்தான் அவன்.
பலமுறை இயேசு
சதிகாரர்களின் சதி வளையத்தை
எளிதாக
வளைத்தெறிந்திருக்கிறார்.
பிடிக்க வந்தவர்களிடமிருந்து
மாயமாய்
மறைந்திருக்கிறார்.
அப்போதெல்லாம்
இயேசுவின் வேளை வரவில்லை
இப்போது
வந்ததென்பதை
யூதாசின் மனம் அறியவில்லை.
மாசற்ற இரத்தத்தை
மாட்டி விட்டேன்
முத்தத்தின் ஈரத்தால்
காட்டி விட்டேன்.
வெள்ளை மனிதனை
வெள்ளிக் காசுக்காய்
விற்று விட்டேன்.
கதறிய யூதாஸ்
குருக்களிடம் போய்
கையேந்தினான்.
விட்டு விடுங்கள்.
இயேசு
கடவுளின் மனிதன்
மனிதனின் கடவுள்.
வெள்ளிக் காசுகள் இதோ
இந்த
சுருக்குப் பையில் இருக்கின்றன.
பெற்றுக் கொள்ளுங்கள்
அவரை
விட்டுத் தாருங்கள்.
முட்டையை விட்டு
வெளிவந்த பறவை
மீண்டும்
முட்டைக்குள் போவது
சாத்தியமில்லையே.
யூதாசின் விண்ணப்பமும்
நிராகரிக்கப் பட்டது.
யூதாஸ்
கையிலிருந்த காசை
ஆலயத்தில் விட்டெறிந்தான்.
இயேசுவே மன்னியும் என
இதயம் கதறினான்.
வெள்ளிக் காசுகள்
ஆலயமெங்கும் அனாதையாய்
ஓட,
சுருக்குப் பை
பாவத்தின் அடையாளமாய்
சுருங்கிக் கிடக்க,
யூதாஸ்
சுருக்குக் கயிற்றில்
ஜீவன் சுருக்கினான்.
இயேசு,
பிலாத்துவின் முன்
பிணைக்கப்பட்டு நிறுத்தப்பட்டார்.
நீ,
யூதனின் அரசனா ?
கிரீடம் சூட்டிய பிலாத்து
கைதிக் கோலத்தில் நின்றிருந்த
இயேசுவிடம்
ஏளனக் கேள்வியை எறிந்தான்.
அரசன் என்பது
நீர் சொல்லும் வார்த்தை.
என் பணி
கிரீடத்துக்குள் தலை கொள்வதல்ல
உண்மைக்குள் நிலை கொள்வது.
உண்மைக்குச் சான்று
பகர வந்தவன் நான்
பகர்ந்து விட்டேன்
பகிர்ந்து விட்டேன்.
பிலாத்து நெற்றி சுருக்கினான்
உண்மையா ?
அது என்ன என்று
வினவினான்.
பொய்களின் புகலிடங்களில்
உண்மை உறைவதில்லை,
வெளிச்சக் குதிரைகள்
வெளியேறிப் போனபின்
இருட்டுக் கொட்டகைக்குள்
தெளிவு தங்குவதில்லை.
இயேசு
பிலாத்துவுக்குப் பதில் சொல்லவில்லை.
உனக்கு எதிராய்
குற்றச் சாட்டுகள்
குவிகின்றன,
உன் பதில்
உடனே சொல்.
பிலாத்து கட்டளையிட்டான்.
இயேசுவோ,
தப்பிக்கும் பதில்களில்
தலைவைக்கவில்லை.
மெளனத்தின் மீதே மீண்டும்
மனம் வைத்துக் கிடந்தார்.
பிலாத்து திகைத்தான்.
மன்னனின் முன்னால்
மெளனத்தின் முடியவிழ்க்காத
இயேசுவின் நிலை கண்டு
நிலை குலைந்தான்.
தன் முன்னால்
மன்னிப்பு மடியவிழ்க்காத
இயேசுவின் உறுதியில்
பயந்தான்.
உன்னை விடுவிப்பதோ
மரணத்துள் இடுவிப்பதோ
என்
ஆணையில் அடங்கியிருக்கிறது
பேசு
பிலாத்து கர்ஜித்தான்.
இயேசு நிமிர்ந்தார்.
விண்ணகத்திலிருந்து
வழங்கப்படாதிருந்தால்
உனக்கு
என்மீது
எள்ளளவும் அதிகாரமில்லை.
பிலாத்துவின் மனைவி
பிலாத்துவை
ரகசியமாய் அழைத்து
காது கடித்தாள்.
அவர் மனைவிக்கு
இயேசுவின் மீதுள்ள குற்றச்சாட்டுகள்
பொறாமையின் பிள்ளைகள்,
உண்மையின் வாரிசுகளல்ல
என்பது விளங்கியே இருந்தது.
எப்படியேனும்
இயேசுவை விடுவியுங்கள்,
பாவத்தின் துளிகளால்
நம்
கரங்களைக் கறையாக்க வேண்டாம்
என
பிலாத்துவிடம் பரிந்துரைத்தாள்.
பிலாத்து
சிந்தித்தான்.
வெறிநாய்களிடையே வீசப்பட்ட
வெள்ளாட்டை
எப்படித் தப்புவிப்பது ?
வாழ்வுக்கு மரண தண்டனை
இயேசுவை விடுவிக்கும்
வாய்ப்புக்காய்
மூளை கசக்கிய பிலாத்துவுக்கி
முளைவிட்டது
அந்த யோசனை.
பாஸ்கா நாளில்
கைதி ஒருவரை
கருணை அடிப்படையில்
விடுவிக்கும் வழக்கம்
தொடர்கிறதே.
இயேசுவை
வழக்கிலிருந்து விடுவிக்க
அந்த
வழக்கத்தையே
வழியாகக் கொள்ளலாமே !
பிலாத்து சிந்தனையை
ஆழப்படுத்தினான்.
இரண்டு கைதிகளில்
ஒருவரை விடுவிப்பதே வழக்கம்
ஒருவர் இயேசுவெனில்
இன்னொருவர்
மக்களின் ஏகோபித்த
வெறுப்பைப் பெற்றவனாய் தான்
இருக்க வேண்டும்.
பரபாஸ் !
பிலாத்துவுக்குள்
வந்தது அந்த பெயர்.
பரபாஸ்,
கலகக் காரன் என்று
சகலராலும் சபிக்கப்பட்டவன்.
அவனை விடுவிக்க
கூடியிருக்கும் கூட்டம்
தூசித் துளியளவும்
ஆசைப்படாதென்பது
பிலாத்துவின் எண்ணம்.
இயேசுவும் பரபாசும்
கூட்டத்தினரின் முன்னால்
நிறுத்தப்பட்டனர்.
இரு துருவங்கள்
அருகருகே நின்ற
அதிசயம் அது.
மன சலவைக்காரனும்
வன் கலகக் காரனும்
முன்னால் நின்றார்கள்.
பிலாத்து
எதிர்பார்ப்பு பொதிந்த
கேள்வியைக் கேட்டான்.
இருவரில் ஒருவர்
விடுவிக்கப் படுவார்.
யார் வேண்டும் என்பது
உங்கள்
தெரிவின் உரிமை.
யார் வேண்டும் ?
பரபாஸா ? இயேசுவா ?
வினாடி நேரம் நிலவிய
மெளனத்தை
இயேசுவின் எதிர்ப்பாளர்கள்
உடைத்தார்கள்.
பரபாஸ் போதும் எங்களுக்கு.
கூட்டத்தினர்
முன்வந்த குரலைப்
பின் தொடர்ந்தனர்.
பரபாசை விடுதலை செய்யுங்கள்.
பிலாத்து
இருந்த வாசலும்
இறுக அடைக்கப்பட்டதில்
திகைத்தான்.
இயேசு ?
இயேசு இறக்கட்டும்
கூட்டத்தின் குரல்கள்
விட்டத்தை எட்டின.
யார் வாழ வேண்டும் என்று
உயிர் தேய உழைத்தாரோ,
அந்த கூட்டம்
இன்று சாவுக்கு சம்மதிக்கிறது.
நிழல் தந்த பெரிய மரம்
வேர்களுக்குள்
வேதனை பாய்ந்து நிற்கிறது.
இயேசுவை நான்
என்ன செய்யட்டும் என்றான்
பிலாத்து.
சிலுவைச் சாவே
அவனுக்குத் தேவை.
கத்தியது கூட்டம்.
சாவுக்குரிய குற்றமொன்றும்
இயேசுவிடம் இல்லை
சாவுக்கு இவனை
சம்மதிக்க முடியாது.
இவன் தீங்கு என்ன ?
பிலாத்துவின் கேள்விகள்
கூச்சலில் மடிந்தன.
சாவு வழங்கு,
அதுவே வழக்கு.
இயேசுக்கு ஆதரவானால்
நீர்
பேரரருக்கு எதிராவீர்
மிரட்டியது கூட்டம்.
கலகத்திற்கு
பயந்த பிலாத்து
இறைமகனை
இறக்க விட சம்மதித்தான்.
இவன் இரத்தத்தின் மீது
நான் குற்றமற்றவன்,
இனி உங்கள் பாடு
என்று
கைகழுவி நழுவிச் சென்றான்.
பரபாஸுக்கு
விடுதலையும்,
விடுதலை நாயகனுக்கு
சிலுவைச் சாவும் தீர்ப்பிடப்பட்டது.
வலியின் விளைநிலம்
தீர்ப்பிடாதீர்கள்
என்று போதித்த இயேசு
சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டார்.
சாட்டை நுனிகள்
மாட்டை அடிப்பது போல்
மனுககனை அடித்தன.
சங்கிலிகள் பிணைக்கப்பட்டு
அகப்பட்ட
ஆயுதங்களெல்லாம்
மேனியெங்கும்
வீரியத்துடன் பாய்ந்தன.
ஒருகன்னத்தில் அறைந்தவருக்கு
மொத்த உடலையும்
மறுப்பின்றி வழங்கினார்
இயேசு.
வலிகளின் விளைநிலமானது
மெய்யானவரின்
மெய்.
ஏளனப் பேச்சுகள்
அவருடைய உள்ளத்தையும்
ஆயுதப் பேச்சுகள்
அவருடைய உடலையும்
கிழித்துக் கொண்டே இருந்தன.
இரத்த நாளங்கள்
உடலுக்கு வெளியே ஓடுவதாய்
உடைபட்ட இரத்தம்
சொன்னது.
இயேசுவின் ஆடைகள்
அவிழ்க்கப்பட்டன
அவமானம்
அவருக்கு அளிக்கப்பட்டது.
வானம் தந்தவருக்கு
செந் நிறப் போர்வை ஒன்று
மானம் மறைக்க
போர்த்தப்பட்டது.
பூவின் தலைக்கு
முட்கிரீடம் ஒன்று மாட்டப்பட்டது.
முட்களின் முனை பாய்ந்து
குருதியின் பாசனம்
விழிகளில் வழிந்தது.
ஆடையின் சிவப்பும்,
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாய் வெளிக்காட்டியது.
ஏளனப் பார்வைகள்
இயேசுவைத் தைத்தன.
கேலியின் குரல்கள் காதுகளை
பிய்த்தன.
வலியின் மீது இயேசு
வலிய நின்றார்.
பரமன் தோள்களில்
பாரச் சிலுவை ஒன்று
சாய்க்கப்பட்டது.
பலிபீடம் சுமந்து
செல்லும் ஓர் செம்மறியாடாய்
சிலுவையுடன்
பரமனின் பாதங்கள்
கற்களை மிதித்தன.
கல்வாரி மலை
பரமனின் பாதம் பட்டுப்
புனிதமடையக்
காத்திருந்தது.
எனக்காக அழவேண்டாம்
இயேசு-வின்
சிலுவைச் சாலையின் இருபுறமும்,
வேடிக்கை பார்க்கும்
வாடிக்கை மனிதர் கூடினர்.
மெல்லிய மனம் கொண்ட
மங்கையர் சிலர்
ஒப்பாரி வைத்தனர்.
தங்கள் சுமைகளை
தாங்கியவர்
சிலுவைச் சுமையை
ஏந்திச் செல்லும் கவலை
அவர்களுக்கு.
தங்கள் நோய்களை
நீக்கியவர்
தன்னை மரணத்துக்கு
உயிலெழுதிய வலி
அவர்களுக்கு.
இயேசு அவர்களிடம்,
எனக்காக அழுதது போதும்
உங்களுக்காகவும்
உங்கள் பிள்ளைகளுக்காகவும்
அழ ஆரம்பியுங்கள்.
பச்சை மரத்தையே
எரிக்கிறார்கள் எனில்,
பட்ட மரம் மட்டும்
எரிவதை தவிர்க்குமா ?
என்றார்.
சிலுவை
தோளில் அழுத்த,
படைவீரர்கள் கேலியால் அமிழ்த்த
தன்
மனித அவதாரத்தை
உறுதிப் படுத்தும் விதமாய்
இயேசு
தடுமாறி விழுந்தார்.
மலையொன்று சரிந்து
மலர் மீது விழுந்ததாய்
சிலுவை
விழுந்தவரை அழுத்தியது.
எழுந்தார் இயேசு.
அவர்
எழுவதற்காகவே விழுந்தவர்
விழுந்தவர்கள் எழுவதற்காகவே
வாழ்ந்தவர்.
பயணம் தொடர
கால்கள் இடற
மீண்டும் விழுந்தார் இயேசு.
தடுமாறினாலும்
தடம் மாறாமல்
மீண்டும் பயணம் தொடர்ந்தார்.
மூவொரு தேவன்
தந்தை
மகன்
தூய ஆவியாய் உறைந்தவர்,
மூன்றாவது முறையாய்
மீண்டும் விழுகிறார்.
ஒரு முறை விழுந்தாலே
தாவியோடும்
தாயன்பு கொண்டவர்
விழுந்து விழுந்து நடந்தாலும்
உதவிக் கரங்கள் வரவில்லை.
மலைக்குச் செல்லும் முன்
இறைவன்
இறந்துவிடுவாரோ
என்னும் பயம் படைவீரர்களுக்கு.
அவர்கள் கண்ணுக்கு
சக்திமானாய் தெரிந்தார்
சீரேனே ஊரைச் சேர்ந்த
சீமோன்.
சீமோன்
சிலுவையைச் சுமக்க
இயேசுவுக்கு உதவினார்.
உலக வரலாற்றின்
உதடுகளால்
உச்சரிக்கப்படும் பாக்கியம்
பெற்றார்.
ஆணிகளுக்குள் ஆகாயம்
பயணம்
கொல்கொதா என்றழைக்கப்பட்ட
மலைக்கு வந்தது.
கொல்கொதா என்றால்
மண்டையோடு
என்பது பொருள்.
தன்
கொலைக்கருவியை
தானே தூக்கி வரும் வலிமை
அவருக்கு இருந்தது.
சிலுவை
தரையில் போடப்பட்டது.
இயேசு
சாவுக்குத் தயாரானார்.
படைவீரர்கள்
இயேசுவை
சிலுவையில் கிடத்தினர்.
நீளமான ஆணி ஒன்று
வலது
உள்ளங்கையை துளைத்தது.
இன்னொன்று
இடது கையைக் குடைந்தது.
உள்ளங்களை தேடி நடந்த
இயேசு
உள்ளங்கையில் குருதி
வெள்ளம் பாய சிலுவையில் கிடந்தார்.
கால்கள் இரண்டும்
சேர்த்து,
மூன்றாவது ஆணி அறையப்பட்டது.
இயேசு கதறவில்லை.
சிந்தை சிதறவில்லை.
வேதனையை உண்டார்.
வலியின் விஸ்வரூபம்
வாழ்வுக்கு
வழங்கப்பட்டது.
பூ பூத்த குற்றத்துக்காய்
பூச் செடிக்கு
தீச் சூளை பரிசு.
பாதைகளைச் செதுக்கியதற்காய்
பாதங்களுக்கு
மரண தண்டனை.
சுட்டது என்பதற்காய்
சூரியனுக்குச்
சிறைச்சாலை.
சிலுவை மரம் பின்னர்
நேராக நிறுத்தப்பட்டது.
இயேசுவின் கரங்களும் கால்களும்
உயிரோடு சேர்ந்து
கசிந்தன.
வருந்திய திருடன், திருந்துகிறான்
இயேசுவைத்
திருடனாய்ச் சித்தரிக்க
அவர் சிலுவையில்
இருபுறமும்
கள்வர் இருவர்
சிலுவைகளில் தொங்கினர்.
அவர்களில் ஒருவன்
சாவின் விளிம்பிலும்
ஆண்டவனைப் பழித்தான்,
நீ
ஆண்டவன் தானே
காயத்திலிருந்து எங்களைக்
காப்பாற்றேன், என்றான்.
மற்றவனோ,
அவனைக் கடிந்து கொண்டு
நாம்
தவறுகளுக்காய்
சிலுவையில் தொங்குகிறோம்,
அவரோ
தவறியும் தவறிழைக்காதவர்.
நம் சாவு
நீதி வாழ்வதன் அடையாளம்
அவர் சாவு
நீதி செத்ததன் சாட்சி.
என்றான்.
ஆண்டவரே
உம் விண்ணக வாழ்வில்
என்னையும் ஏற்றுக் கொள்ளும்
என
விண்ணப்பமும் வைத்தான்.
இயேசு அவனிடம்,
இன்றே நீ என்னோடு
வான் வீட்டில் இருப்பாய்
என்றார்.
தற்கொலை முனையில்
வழுக்கியவனுக்கு
மீண்டும் ஆயுள் அளிக்கப் பட்டதாய்,
சாவுக்கு முந்தைய
நிமிடத்தில்
அவன் நம்பிக்கைக்கு
வாழ்வு வழங்கப் பட்டது.
இயேசு
வேதனையின் வெடிப்புகளிலும்
தன்னை
சிலுவையில் அறைந்தவர்களின்
மன்னிப்புக்காய் மன்றாடினார்.
எதிரியை நேசிப்பதை
மலை மேலிருந்து
பேசியதோடு நின்று விடாமல்
சிலுவை மேலும்
போதித்தார்.
“தந்தையே இவர்களை மன்னியும்”
இவர்கள்
அறியாமல் தவறிழைக்கிறார்கள்.
வேலிகளற்ற கேலிகள்
சிலுவையின் தலையில்
‘யூதர்களின் அரசன்”
எனும் கேலி வாக்கியம்
ஒட்டப்பட்டிருந்தது.
சமாதானப் பறவையை
சிலுவையில் அறைந்தபின்
அதன் இறக்கைகளை
பிய்ப்பதுபோல,
இயேசுவின் ஆடைகளை
சீட்டுப் போட்டு பகிர்ந்து கொண்டனர்.
ஆலயத்தை இடித்துக் கட்டுவோனே
உன்னையே
நீ காப்பாற்றிக் கொள்.
கடவுளின் மகனுக்கு
கீழே இறங்கி வர
கால்கள் இல்லையா ?
ஏளனப் பேச்சுகள்
இயேசுவை காயப்படுத்தவில்லை.
உணராத உள்ளங்களுக்காய்
அவர்
இதயம் கதறியது
மன்னிப்பு வழங்க வேண்டி.
சிலுவையின் கீழ்
இயேசுவின் ஆதரவாளர்கள்
நிராயுதபாணிகளாய்
நின்றார்கள்
கண்ணீர் கவசங்களுடன்.
இதோ உன் தாய்
இயேசுவின் சிலுவை அடியில்
தாயும் சீடரும்
கண்ணீர்க் கடலில்
உயிர் கிழியும் வேதனை உடுத்தி
நின்றிருந்தனர்.
தாய்ப்பாசம் மாதாவை
ஆழமாய் ஊடுருவியது,
செல்ல மகன் சிலுவையில்
கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் சிந்த,
கீழே
அன்னை கண்ணீர் சிந்த
காண்கின்றாள்.
விளக்க முடியா வேதனை !
ஆனாலும் இயேசு
விளக்குகிறார்.
தாயை நோக்கி
சீடரைக் காட்டி
இதோ உன் மகன் என்றார்,
சீடரை நோக்கி
இதோ உன் தாய் என்றார்.
அன்னை
மனுக்குலத்தின் தாயானாள்
சீடர்
அன்னையைத் தத்தெடுக்கும்
பிள்ளையானார்.
விடைபெறுகிறார் வருகைக்கு
நண்பகல் துவங்கி
மூன்று மணி வரை
நகர் முழுவதும்
இருட்டு விரிக்கப்பட்டது.
சிலுவையில் தொங்கிய
இயேசு
தாகமாயிருக்கிறேன்
என்றார்.
மனிதம் மீதான
அவருடைய தாகத்தை
புரிந்து கொள்ள இயலாத
படைவீரர்கள்
தண்ணீரை நீட்டினார்கள்.
இயேசு
நாவை நனைத்துக் கொள்ள
ஆசைப்படவில்லை
உலகை அணைத்துக் கொள்ளவே
ஆசைப்பட்டார்.
மூன்று மணிக்கு,
இயேசு
உரக்கக் கத்தினார்.
ஏலி, ஏலி, லெமா செபக்தானி
என் கடவுளே, என் கடவுளே
ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்
கீழே நின்ற
கூட்டத்தினருக்கு
வழக்கம் போலவே
விளக்கம் தெரியவில்லை.
ஏலியைக் கூப்பிடுகிறானா
என்று
ஏளனம் செய்தது.
மீண்டும் ஒருமுறை
உரக்கச் சொன்னார்.
எல்லாம் நிறைவேறிற்று
என்று
இறுதியாய் சொல்லி
உயிரை உடலிலிருந்து
விடுவித்தார்.
தனக்காய் வாழாத
தவறுக்காய்,
உருகித் தீர்ந்தது
ஓர் மெழுகுவர்த்தி.
வீதிகளில் வெளிச்சத்தை
நிரப்பிவிட்டு.
கருணைக் கடல்
அடங்கிய வினாடியில்
நகர் முழுதும்
அதிர்ச்சி அலை அடித்தது.
ஆலயத்தின் திரை
மேலிருந்து கீழ் வரை
இரண்டாய் கிழிந்தது.
நிலம் நடுங்கியது,
பாறைகள் வெடித்தன,
கல்லறைகள் பல திறந்தன.
இதுவரை இல்லாத
ஆச்சரியச் செயல்களால்
நகர் முழுதும் அதிர்ந்தது.
மனுமகனுக்கான
முன்னுரையை
வானம் சொன்னது
வால் நட்சத்திரத்து வடிவில்.
பணி வாழ்வின் முதல் படியையும்
வானமே தெரிவித்தது.
இறைமகனுக்காய்
வானத்துப் புறா ஒன்று
இறக்கை அடித்து
வாழ்த்துச் சொன்னது.
இப்போது
முடிவுரையையும் அதுவே
கருப்புப் போர்த்தி
அறிவித்துப் போகிறது
மேகங்கள் வழியாய் கசிந்து விட்டு.
கல்லறைக்குள் உடல்
இயேசுவின்
இறப்பை உறுதிசெய்ய
குருக்கள் விரும்பினார்கள்.
இறக்காமல் இறங்கிவிடுவானோ
என்னும்
பயம் அவர்களுக்கு.
படைவீரர்கள்
இயேசுவின் சிலுவையருகே
வந்தார்கள்.
இயேசு
மரணத்தோடு எப்போதோ
பயணித்து விட்டிருந்தார்.
படைவீரர்கள்
ஈட்டியை எடுத்து
இயேசுவின் விலாவில் குத்தினர்.
இரத்தத் துளிகளும்
நீரும்
கசிந்தன
சாவுச் செய்திக்கு அது
முற்றுப் புள்ளியானது.
இறைவனின் உடலில் பட்ட
கடைசிக் காயமாய்
அது
உடலில் தங்கியது.
இயேசுவின் உடலை
எடுக்கவும்
அடக்கவும்
அனுமதி விடுக்கப்பட்டது
சூசை என்னும் சீடரால்.
பிலாத்து அனுமதி அளித்தான்.
இயேசுவின் உடல்
சீடர்களால் தரையிறக்கப்பட்டது
தாயின் மடியில்
சேயின் உடல் சலனமற்றிருந்தது.
அன்னையின் மனதில்
வேதனை வாள்
ஊடுருவியது.
தொழுவம் முதல்
கல்வாரி வரை
காட்சிகள் கண்ணீரோடு கசிந்தன.
இயேசுவை
யூத முறைப்படி
புதுக் கல்லறை ஒன்றில்
அடக்கம் செய்தார்.
சூட்சியின் சந்ததியினர்
பிலாத்துவிடம் வந்தனர்.
இயேசு,
உயிரோடு இருந்தபோது
மூன்று நாளுக்குப் பின்
மீண்டு வருவேன்
என்றான்
உயிர்த்தெழுதல் உண்டெனக்கு
சாவு எனக்கு
தற்காலிக ஓய்வு என்றான்.
எனவே கல்லறையை
காவல் காக்க வேண்டும்
இல்லையேல்
உடலை எடுத்துச் சென்றுவிட்டு
இயேசு
உயிரை உடுத்துச் சென்றதாக
சீடர்கள் கதையளக்கக் கூடும்
என்றனர்.
சதிகாரர்களின்
விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
காவலர்கள் கல்லறைக்குக்
காவலர் ஆனார்கள்.
கல்லறைக்கு
முத்திரை சங்கிலிகள் கட்டப்பட்டன.
சிலுவை.
சிலுவை.
ஓர் அவமானச் சின்னம்.
இயேசுவின் குருதி தான்
அதை
புனிதமானதாய்
புதுப்பித்தது.
சிலுவை,
இரு மரச்சட்டங்கள் இணைந்த
கொலைக் கருவி,
இயேசுவின் இரத்தம் தான்
அதை
இதய இணைப்பின் கருவியாய்
நிறம் மாற்றி நீட்டியது.
சிலுவை,
இயேசுவின் சிரம் தொடும் வரை
வெறும் மரம்,
பிறகே அது
வரமாய் உருமாறியது.
சிலுவை,
தாழ்த்தப்பட்ட சின்னம்
இயேசு
உயர்த்தப் படும் வரை.
ஓர் வலியின் சின்னமாய்
ஒலித்துக் கொண்டிருந்த
சிலுவைக் குரல்கள்,
ஒளியின் மின்னலாய்
மிளிரத்துவங்கின அந்த
மயான மத்தியானம் முதல்.
சில புனிதச் சின்னங்கள்
அவமானச் சின்னமாக
அவதாரம் எடுப்பதுண்டு.
யூதாஸின் கபடம் கலந்த
முத்தத்தைப் போல.
சில
அவமானச் சின்னங்கள்
வாழ்வின் சின்னங்களாக
விஸ்வரூபம் எடுப்பதும் உண்டு
இயேசுவைச் சுமந்த
சிலுவையைப் போல.
கொலை கொம்பாய் இருந்த
சிலுவை,
தன் ஜென்ம பாவங்களைக் கழுவி
கொழு கொம்பாய் மாறியது.
சிலுவை
இனி சாவின் சின்னமல்ல,
ஓர்
சாவு அதை
வாழ்வின் சின்னமாய்
வழிமொழிந்து சென்றது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
8 Responses »