இயேசுவின் இளமைக்காலம் ஞாயிறு, நவ் 23 2008 

இயேசுவின் பிறப்பு


 
எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.

பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.

கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.

கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.

மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.

மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.

ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?

இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?

ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?

ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.

கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.

சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.

மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.

புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு புதிய ஓர் தாயானாள்.

கணவனாகக் காத்திருந்த
யோசேப்பு அதிர்ந்தார்.

கவலை நெற்றியை தேய்த்தார்.
சந்தேகத்தின்
செந்தீயில் கண்களைத் தீய்த்தார்.

மரியாளின் கற்புக் கதவு
பலவீனமாகி விட்டதா
என பயந்தார்.

திருமணமே முடியாமல்
கரு உருவானதில்
கவலைப் பட்டார்.

வேருக்குள் விழுந்திருக்கும்
விஷயம்
ஊருக்குள் விழுவதற்குள்
மறைவாய் விலக்கி விடுதல்
நிறைவானது என்று
உள்ளுக்குள் முடிவெடுத்தார்.

இரவுத் தூக்கத்தில்
கடவுளின் தூதர்
அவருடைய
கனவின் கதவைத் திறந்தார்.
சந்தேகத்தின் கதவை மூடினார்.

தூய ஆவியால்
தாயானவள் தான் மரியாள்
பிறக்கும் பாலனுக்கு
இயேசு என்று பெயரிடு
தூதர் விளக்கினார்.

வந்திருப்பது
அவமானமல்ல,
வெகுமானம் என்பதை
குதூகலத்தோடு குறித்துக் கொண்டார்.

கடவுளின் சித்தம்,
எனக்குத் தேவை நித்தம் என்றார்,
ஓர்
வரலாற்றுக்குத் தந்தையாகும்
வரம் பெற்றார்.

 கன்னிக்குப் பிறப்பான்
மீட்பின் மகன் !
தீர்க்கத் தரிசனங்களின்
தீர்க்கமான முடிவின் துவக்கம் தான்
இறைமகன் வரவின் விளக்கம்.

பிறப்பின் காலம் பிறந்தது.
அப்போது
வான் தந்த நட்சத்திரம்
ஒன்றுக்கு
வால் வந்தது.

வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
செதுக்கிய முனைகளோடு
நகர,
நட்சத்திரம் வால் நீட்டி
சூரியன்
பூமியில் இருக்கிறான் என
சுட்டிக் காட்டியது.

தூரத்து விடிவெள்ளி ஒன்று
ஈர நிலா
பூமியில் இருப்பதை
விரல்கள் நீட்டி விளக்கியது.

இயற்கையே இறங்கி வந்து
குடிலில் கிடந்த
கொட்டில் மகனைச் சுட்டியது

 
ஏரோதின் சூழ்ச்சி

 

மேய்ப்பன் பிறப்பு
ஆடு மேய்க்கும் சிலருக்கு
தூதர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஞானியர் சிலரின்
ஞானங்களில்
அச்செய்தி அறிவுறுத்தப்பட்டது

கீழ்த்திசை ஞானிகள்
மேல் நோக்கினர்,
வானவன் தேவன் கீழ்நோக்கினார்.
ஒளியின் வடிவம்
இருளிள் இடிவுக்காய்
இறங்கியது அவர்கள் இதயங்களில்.

யூதேயா அரண்மனையின்
அரியாசன மஞ்சங்களில்
இடியென இறங்கியது
இயேசுவைத் தேடி வந்த
ஞானிகளின் வார்த்தைகள்.

“யூதர்களின் அரசன் எங்கே ?”
விண்மீன் ஒன்று வித்தை செய்கிறது,
பூமிப் பந்துக்கு இதோ
புது ராஜா பிறந்திருக்கிறாரே.
அந்த
“யூதர்களின் அரசன் எங்கே ?”

ஏரோதின் இதயத்துள்
விரோத முள் தைத்தது.

என் சாம்ராஜ்யத்தின்
எல்லை ஆள
இன்னொரு அரசனா ?

என் தோட்டத்து
மலர்களின்
மாலைகளுக்காய் இன்னொரு கழுத்தா ?

என் வாளும் கேடயமும்
இன்னொரு தோளுக்கா ?

இல்லை,
இதை அனுமதிப்பது ஆகாது.

ஒற்றைக்கதிரவன் நானே.
என்னை எடுத்து
எரியும் குழிக்குள்
எறியும் அவன் யார் ?

நீள் கடலை
உறிஞ்சப் பிறந்த அந்த
பிஞ்சுப் பஞ்சு எங்கே ?

நெஞ்சில் பாய்ந்த ஈட்டியை
சூசகமாய் மறைத்து விட்டு
சாகசமாய் பேசினான் மன்னன்.

தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும்
அவசரமாய் அழைக்கப்பட்டனர்
அரசவைக்கு.

மெசியா பிறந்தால்
எங்கே பிறப்பார் ?
அரண்மனையில் எழாத
அழுகுரலுக்குச் சொந்தமான
அரச குழந்தை
எங்கே பிறந்திருக்கலாம்
சொல்லுங்கள்.
மன்னன் வினவினான்.

அவை
ஏட்டுச் சுருளை விரித்தது.
நரைத்த தலையுள்
நுரைத்த அறிவை பிரித்தது.

பெத்லேகேமில் பிறக்கலாம் பிதாமகன்,
இறைவாக்கினர் வாக்குகள்
இறவா வாக்குகள்
அவை அதைத்தான் அறிவிக்கின்றன.

தீய்க்குத் தூபமிட்டன
அவர்களின் தீர்மானம்.

அரசன் அசரவில்லை,
ஞானிகளிடம்
அகத்து அழகு
முகத்தில் தெரியாமல் பேசினான்.

ஞானிகளே.

பெத்லேகேம் பேறுபெற்ற இடம்
அரசனைப் பெற்றதால்
பெருமைப்படப் போகும் இடம்.

செல்லுங்கள்.
அரசனைக்கண்டு வாருங்கள்,
நானும்
ஆராதிக்க ஆயத்தமாகிறேன்.

கண்டு வந்து சொல்லுங்கள்
நான்
கண்டு வணங்க வேண்டும்.

ஞானிகள் விலக,
சூட்சும அரசவை
மெளனத்துள் மண்டியிட்டது.

மூர்க்கத்தனமான ஓர் முடிவுக்காய்
வாள்கள் உறைக்குள்
அசையாதிருந்தன.

அரசவையின் இரகசியங்கள்
அறியாமல்
ஞானிகள் நடந்தனர்.
வானம் வழிகாட்ட
பூமியில் சுவடுகள் நீளமாயின.

குளிரில் உடல்கள் குறுகுறுக்க
இதயம் எதிர்பார்ப்பில்
எரிந்து கொண்டிருந்தது.

இதோ
வால் நட்சத்திரம்
நடப்பதை றுத்தி,
நடப்போரைப் பார்த்தது.

ஞானியர்
ஆனந்தக் கடலின்
அலைகளாய் அலைந்தனர்.

வானத்தின் வால்பிடித்து
ஞாலத்தின் சிறப்பருகே
ஞானியர் வந்தனர்.
o

மாட்டுத் தொழுவம் ஒன்று
மீட்பின் மகனுக்காய்
மடிதிறந்து படி அமைத்திருந்தது.

நாடுகளின் மெத்தைகள்
அரசனுக்காய் விழித்திருக்க,
பெத்லேகேம்
தொழுவமொன்று
தொழுகை பெற்றது.

வைக்கோல் கூட்டுக்குள்
ஓர்
வைரம் வளர்க்கப்பட்டது
வரலாற்றில் இது ஒரே முறை.
வரலாறே இவருக்கு விரல் முனை.

முத்துக்கள் எப்போதுமே
மாளிகைகளில் பயிராவதில்லையே,
சிப்பியில் தானே
அவை சிரம் கொள்கின்றன.

தலை தாழ்த்தித் தரை வீழ்ந்து
வணங்கினர் ஞானியர்.
பொன், தூபம், வெள்ளைப் போளம்
வழங்கினர் ஞானியர்.

பிறந்ததன் பயனாய்
உயர்ந்ததை வழங்கினர்.

 
கனவுகள் பேசுகின்றன

 

இரவின் ஜாமம் அதிகரித்தபோது
ஞானியர்க்கு
நித்திரையின் ஆழத்தில்
கனவொன்று கசிந்தது.
‘ஏரோதை சந்திக்காமல் செல்க’ என்று
கடவுளின் தூதர் கட்டளையிட்டார்.

பாதைகள் எல்லாம்
பாதங்களால் தானே
பரிசீலிக்கப் படுகின்றன.
ஞானியர் பாதை மாற்றி பயணம் சென்றனர்.

ஞானியர் சென்றபின்
தேவதூதரால் யோசேப்பு
எகிப்துக்குச் செல்
என எச்சரிக்கப் பட்டார்.

தொழுவத்தில் இருந்த
சிறு சூரியனை எடுத்துக் கொண்டு
எகிப்தின் எல்லைக்கு
மீட்பர் குடும்பம் இரவில் விரைந்தது.

காற்றைக் கொய்யும் கத்தியை
எந்தப் பட்டறை
தீட்ட இயலும் ?
தண்ணீரைக் கொல்லும் வாளை
எந்தப் போர்க்களம்
எடுத்து வர இயலும் ?

ஞானிகளுக்காய் காத்திருந்த
ஏரோது எரிச்சல் கொண்டான்.
ஏமாற்றப் பட்டதைக் கேட்டு
எரிமலையானான்.

அவனுடைய இதயம்
வெறியில் நிறம் மாறியது.
தீப் பொறியாய்
கட்டளைகள் கட்டவிழ்ந்தன.

பெத்லேகேமின் வீதிகளில்,
சுற்றி இருக்கும் நாடுகளில்,
இரண்டு வயதுக்குட்பட்டவரெல்லாம்
இறக்கட்டும் என்றான்.

அரச ஆணை
புரவிகளில் மரணத்தை ஏற்றி
பெத்லேகேமுக்குப் பறந்தது.

முளைவிடத்துவங்கிய செடிகள்
யானை நசுக்கியதாய்
உயிர் புதைத்தன.

சின்ன ரோஜாக்களின் மேல்
நீளமான வாள்கள்
அகழ்வாராட்சி செய்தன.

எல்லா வண்ணப் பூக்களும்
குருதியில் தோய்ந்து
சிவப்பாய் சமாதியாயின.

பெத்லேகேமின் வீதிகளில்
ஒப்பாரிகள்
உச்ச வேகத்தில் உலவின.

எரேமியா இறைவாக்கினர்
என்றோ உரைத்தது
இன்று உறைத்தது.

 

தீர்க்கத்தரிசனம்

எட்டாம் நாள் விடிந்ததும்
யெருசலேமில்,
பரலோகப் பிரதிதிக்குப்
பூலோகத்தில் பெயர் சூட்டினர்.

இயேசு!!.

பிறக்கும் முன்பே
வானதூதரால் நவிலப்பட்ட
நாமம்.

மனிதரின் பாவங்களை
தீர்ப்பவர்
என்பதே அதன் பொருள்.

மீட்பின் மனிதர் என்பதே
அதன் பொருள்,
மீட்பிற்காய் வந்தவரே
பரம் பொருள்.

தலைப்பேறான தனையனை
ஆண்டவனுக்காய்
அர்ப்பணித்தல்
வழுவாத வழக்கமங்கே.
ஜோடிப்புறாக்களோ,
மாடப்புறாக்களோ பலியிடல்
அர்ப்பணித்ததன் அடையாளமங்கே.

ஆலயத்தில் அமர்ந்திருந்தார்
சீரிய பக்தியின் சின்னமான
சிமியோன்.
மெசியாவின் வருகைக்காய்
மெய்வருத்தும் மெய் பக்தர்.

ஆண்டவரைப் பார்த்தபின்பே
ஆவி அகலும் அகத்தை விட்டென்று
ஆவியானவரால்
அறிவிக்கப்பட்ட
பக்தியில் பித்தர்.

இயேசுவைக் கண்டவுடன்,
சிமியோனின் புருவங்கள்
உருவங்கள் மாறின,
உள்ளுக்குள் ஓராயிரம்
உற்சாக மலைச்சரிவுகளில்
ஒய்யார பனிச்சரிவுகள்.

கரங்களில் கர்த்தரை ஏந்தி,
சிரங்களில் சுரங்களை ஏற்றி
பாடினார் சிமியோன்.

இனிமேல்
சாவு எனக்கு சங்கடமில்லை
வாழ்வை தரிசித்து விட்டேன்.

புறவினத்தாரின் இருளகற்றும்
புது விளக்கை,
பூமிக்காய் பிறந்திருக்கும்
பொது விளக்கை,
என் கண்கள் கண்டுகொண்டன.

அல்லி மலரை அரையில் தாங்கி
முல்லை நிலவில் முகத்துடனே
தங்கத் தாமரை
தரையிறங்கியதாய்
அன்னை மரி அருகிருந்தாள்.

சிமியோன் தாயிடம்
தீர்க்கத் தரிசனம் பரிசளித்தார்.

இதோ,
இப்பாலன்
இஸ்ராயேலரின் வாழ்வை
காயப்படுத்தாமல் சாயப்படுத்துவான்,

பலருடைய
வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
வார்த்தை வாள்களால்
தீர்ப்பினைத் தருவார்.

உமது உள்ளத்தையும்
ஓர் வாள் ஊடுருவும்
அப்போது
பலருடைய உள்ளங்களிலிருந்து
எண்ணங்கள் வெளிவரும்.

மரியாள்
புரியாமல் பார்த்தாள்.

அப்போது
ஆலயத்தில் வந்த
ஆசேர் குலத்து அன்னாவும்
மழலையைக் கண்டதும்
மீட்பரென்றறிந்து மகிழ்ந்தாள்.
வானகத்து தேவனை
வாயார புகழ்ந்துரைத்தாள்.

சட்டங்களின் படி
சம்பிரதாயங்கள் செய்தபின்,
கலிலேயா வின் நாசரேத்துக்கு
திருக்குடும்பம்
திரும்பிச் சென்றது.

இயேசு வளர்ந்தார்.

அறிவின் ஆழம் அடைந்து,
ஞானத்தினால் ஞாலம் குடைந்து,
கடவுளுக்கும் மனிதருக்கும்
உகந்தவராய்
உள்ளுக்குள் உரமேறினார்.

மனித வடிவ மனுமகன்
யூத குலச் சட்டங்களை எல்லாம்
அக்குவேறு ஆவேறாய்
அலசித் தேர்ந்தார்.

அறியாத ஒன்றுக்கு
எதிராகப் பாய்தல்
சரியல்ல என்று
சரியாய் கணித்திருந்தார்.

 
 

ஞாலத்தில் சிறந்த ஞானம்

 
பாஸ்கா விழாவில்
பங்கெடுக்க
ஆண்டுக்கொரு முறை
யெருசலேம் யாத்திரை
தவறாமல் நடந்தது.

பாலன் இயேசுவின்
பன்னிரண்டாம் பருவத்தில்,
ஒரு முறை
திருக்குடும்பம்
திருவிழா சென்றது.

திருநாட்கள் முடிந்தபின்
திரும்பியது பயணம்
நாசரேத் நகர் நோக்கி.
இயேசுவோ
யெருசலேம் ஆலயத்திலேயே
இருந்து விட்டார்.

உண்மை அறியாத
பெற்றோர்
பயணிகளோடு பாலகன்
முன்னால் சென்றிருக்கலாம்
என
பின்னால் வந்து கொண்டிருந்தனர்.

இரவிலும் இயேசுவைக்
காணாத
பெற்றோர் மனதில்
பயம் விழித்தெழுந்தது.

பயணிகள் கூட்டத்தில்
பாலனைக் காணாமல்
பரிதவித்து,
பதட்டத்தின் படியேறி
யெருசலேம் விரைந்தனர்.

மூன்று நாள் தேடலின் முடிவில்
ஆலயம் ஒன்றில்
பாலனைக் கண்டனர்.

இயேசு அங்கே,
போதகர்களின் போதனைகளின்
விலா எலும்புகளை
உருவிக்கொண்டிருந்தார்,
கேள்விகளால் போதகர்களை
துருவிக்கொண்டிருந்தார்.

பிரமிப்பின் பிரமிடுகளில்
போதகர்கள்
புதைக்கப்பட்டுக் கிடந்தனர்.

சின்ன மொட்டுக்குள்
அறிவின் கட்டுக்களா ?
உள்ளங்கைக்குள்
உலகின் பூட்டுக்களா ?

இந்த நதி,
பிறக்கும் போதே கடலானது
எப்படி ?
இந்த அருவி மட்டும் எப்படி
இலக்கணம் கற்காமல்
உச்சி நோக்கி ஓடுகிறது ?

இத்தனை காலமும்
சாம்ராஜ்யம் ஆண்ட சட்டங்களை
ஓர்
பிஞ்சுக் கரம்
பஞ்சாய் கிழிக்கிறதே !!

இவனென்ன
அறிவு மேகங்களை அடுக்கி வைத்த
அகலமான வானமா ?
இல்லை
பிறக்கும் போதே
செழித்துக் கிடந்த
அடர்த்தியான வனமா ?

வியப்பின் விரல் நுனிகள்
நடு நடுங்க,
பயத்தின் முதல் துளி
அவர்களிடம் பரவியது.

இயேசுவின் தாய்
பாசத்தில் குரல் கொடுத்தாள்.
தனியே நீ
தங்கியதென்ன மகனே,
கண்ணீரின் காலத்தை
தந்ததென்ன மகனே…

பாலன் இயேசு பார்த்தார்,
இது என்
தந்தையின் இல்லமம்மா,
இது தான் இனியென்
விருப்பமான இருப்பிடமம்மா.

எரியும் கவலையில்
திரிந்த மரியாள்
புரிந்தும் புரியாமலும்
பாலனைப் பார்த்தாள்.

தாயின் தடுமாற்றம் கண்ட
நாயகன்
கரம் பற்றி,
நாசரேத் நகர் நோக்கி
நடந்தார்.

சிலகாலம்
தாயுடனே தங்கி,
பிள்ளையின் கடமையை
பிழையின்றி செய்தார்.

 
ஒளிக்குச் சான்று

 
ஆதியிலே வாக்கு இருந்தது,
அது
கடவுளோடும் கடவுளாயும்
இருந்தது.

படைப்புகள் எல்லாமே
அவரால் தான்
படைக்கப் பட்டன,
அவருடைய அறிவுக்கு அப்பால்
எதுவும் அறியப்படவில்லை.

மனிதனின் வாழ்வு
அவரோடு வாசம் செய்தது,
அது
மனிதரின்
அக இருட்டுக்களை அழிக்கும்
ஒளியாய் மிளிர்ந்தது.

அந்த ஒளியை வீழ்த்த
இருளின் ஆயுதங்களுக்கு
வலு இல்லாமல்
வீழ்ந்தது.

யோவான் !!!

ஞானத்தின் விளக்குக்கு
ஞானஸ்நானம்
தரும் பாக்கியம் பெற்றவர்.
ஒளிக்குச் சான்று பகரவே
அவர் வந்தார்,
ஆனால் அவர் ஒளி அல்ல.

ஒட்டக மயிராடை
கட்டியவர்,
வார்க்கச்சை ஒன்றை
வரிந்தவர்.
வெட்டுக்கிளிகளை உணவாக்கி
காட்டுத்தேனுடன் கலந்துண்டவர்.

அவருடைய பிறப்பே
ஓர்
அதிசயத்தின் ஆரம்பம் தான்.

செக்கரியா என்னும்
குருவுக்கும்
எலிசபெத்து என்னும்
ஆரோன் வம்ச
மங்கைக்கும் பிறந்தவர் அவர்.

நேர்மையின் வேர்வைக்கு
நிலமாய் இருந்தது
அவர்களின் இதயம்.

வருடங்கள்
தன் முத்திரை குத்திக் குத்தியே
முதுமையை
முத்தமிட்டவர்கள்.

ஓர்
மழலை தன் இடை தொடவில்லையே
எனும்
இடி போன்ற சோகத்தை
மடி மீது குடி வைத்திருந்தனர்.

கடவுளின் தூதர்
செக்கரியாவுக்குத் தோன்றி
இதோ உம்
வேண்டுதலின் தூண்டுதல்
ஆண்டவனை தீண்டியாயிற்று.
ஓர்
உத்தமர் உன் மகனாவார்

வாழ்வுக்கான வழி
நிகழ்கால அழுக்களுக்குள்
அமிழ்ந்து கிடக்கிறது,
அவர் வந்து
பாதையை புலப்படுத்துவார்
பதர்களையும் பலப்படுத்துவார்.

யோக்கியமான அவருக்கு
யோவான் என பெயரிடும்.
என்றார்.

செக்கரியா
சந்தேகத்தில் சஞ்சரித்தார்.
எங்கள்
கல்லறை நோக்கிய பயணத்தில்
எப்படிக்
கருவறைக் கதவு திறக்கும்.

சருகுக்குள் எப்படி
விருட்சம் இருக்கும் ?

அந்தி சாய்ந்த பின்பா
ஆதவன் உதயம் ?
பிந்தி வந்து சேருமா
முதுமைக்கு ஓர் பந்தம் ?
என வினவ.

வாக்கு நம்பாத உமது நாக்கு
இனிமேல் பேசாது.
சொன்னது நடக்கும்,
அதன் பின்பே
உம் வாயில் வார்த்தை பிறக்கும்.
என்றார்.

அப்படிப் பிறந்தவர் தான்
யோவான்,
இயேசுவுவின் பிறப்புக்கு
முன்னுரை சொன்ன
கபிரியேல் தூதராய்
முன்னுரை சொல்லப்பட்டவர்.

இயேசுவின் தாயால்
வாழ்த்துச் சொல்லப் பட்ட
பெருமைக்குரியவர்.
அவர்
இயேசுவுக்கு முன்னோடி.

இயேசு என்னும்
ஒளிக்குச் சான்று பகர்வதே
அவருக்கு அளிக்கப் பட்ட பணி.

உலகை உருவாக்கிய சிற்பியை
உலகமே
அறிந்து கொள்ளவில்லை,
தன்னைத் தீட்டிய ஓவியனை
புறந்தள்ளிய
ஓவியமாய்க் கிடந்தது அது.

ஆனால்,
ஆண்டவருக்கானவர்கள் அவரை
அறிந்து கொண்டு
பரமனில் மீண்டும் பிறந்தார்கள்.

இது
உடல் சார்ந்த பிறப்பு அல்ல,
ஆன்மா சார்ந்த பிறப்பு.

முட்டை உடைத்து
பிறந்த நாகம்,
மீண்டும் சட்டையுரித்தல்
இயற்கை திருப்பம்.

கருவில் பிறந்த மனிதன்
மீண்டும்
திருவில் பிறத்தல்
இறைவன் விருப்பம்.

யோர்தானின் கரையில்
யோவான் விசுவாசம் விதைத்தார்.
விரியன் பாம்புக் குட்டிகளே
சினத்துக்குக் தப்புவிக்க
நீருக்குள் வாருங்கள்.
ஞானஸ்நானமே மீட்பின் முதல் நிலை.

முதல் நிலை இல்லாமல்
திரு நிலை இல்லை.

உங்கள் உள்ளங்களை
உழுதிடுங்கள்,
நல்லெண்ணமெனும் உரமிடுங்கள்,
நற்செயல்களென்னும் விதையிடுங்கள்.

செயல்களற்ற வார்த்தைகள்
செத்தவார்த்தைகள்,
பிணம் தின்னும் கழுகுக்கு
பிணத்துள் வித்தியாசம் பெரிதல்ல.

அடிமரத்துக்கு கோடரி வைத்தாயிற்று
கிளைகளின் கனிகளுக்காய் இனி
உச்சாணிக்கு
ஏணி சாய்க்காதீர்கள்.

 
திருமகனுக்கு திருமுழுக்கு

 யோவானைக் குறிவைத்து
குருக்கள் வந்தனர்,
நீ என்ன மெசியாவா ?
எலியாவா ? இல்லை
தூதர்கள் சொல்லிச் சென்ற
இறைவாக்கினனா ?
அடுக்கடுக்காய் கேள்விகளால்
அடித்துப் பார்த்தனர்.

யோவான் மறுத்தார்,
நான் யாருமல்லேன்,
ஆதியின் வார்த்தை
மனித அவதாரத்தில் வந்துள்ளது,
நான் வெறும்
சான்று பகர்பவனே,
சரித்திரம் படைப்பவனல்ல.

என் தண்ணீர் திருமுழுக்கில்
நீங்கள்
தடுமாறிப்போகிறீர்களே,
நீரூற்றி நிறம் கொடுப்பவன் நான்.
நெருப்பூற்றி முழுக்கு கொடுப்பவர்
எனக்குப் பின்னால் வருகிறார்.

நான் செய்தியாளன்.
செருக்குற்றோரைச் சிதறடிக்கும்
அவர் சிறப்புக்கு முன் அல்ல,
அவர் செருப்புக்கு முன்னும்
நான்
மிகச் சிறியவன் !

அவருக்கு
பதர்களோடும் கதிர்களோடும்
பரிச்சயம் இருக்கிறது,
பத்தாயத்துக்கு கோதுமையை அனுப்பி
பதரின் தலைக்கு தீயிடுவார்.

நீ கதிராய் இருந்தால்
அவர் ஒளியில் கனிதருவாய்.
வைக்கோலாய் இருந்தால்
எரிந்துபோவாய்.

வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வீரியத்துக்குப் பிறந்த
சுருள் வாளாய்,
கூட்டத்தின் நெஞ்சம் சென்று
தஞ்சம் கொண்டது.

இயேசுவும் வந்தார்,
யோவானிடம்
திருமுழுக்கு பெற.

வரம் தரும் பரமன்
வரம் வேண்டி வந்ததாய்
தடுமாறினார் யோவான்.

கடவுளே
நீர் விண்ணகத்தின் விளக்கு
என்னிடம்
திருமுழுக்கு பெறுவது
இழுக்கு உமக்கு.
நான் வெறும்
மனித அழுக்கு என்றார்.

இயேசு புன்னகைத்தார்.
என்
பணி வாழ்வை
நீர் தான் துவக்க வேண்டும்
நீரால் துவக்க வேண்டும்
என்றார்.

யோவான்
பிரபஞ்ச பாக்கியம் பெற்றார்.
இயேசு
ஞானஸ்நானம் பெற்றார்.

திடீரென்று,
ஒற்றையாய் இருந்த வானம்,
முதுகு கிழிய,
வெள்ளைப்புறா வடிவில்
பரிசுத்த ஆவி கீழிறங்க,

“இவரே என் மகன்,
 இவரில் நான் பூரிப்படைகிறேன்”
வார்த்தைகள் வான வாயில் புறப்பட,
இயேசு அடையாளப்படுத்தப்பட்டார்.

தூய ஆவி
புறாவின் வடிவில்
இயேவில் இறங்க
தண்ணீருக்கே தலைசுற்றியது.

மொத்த ஜனமும்,
மொத்தமாய் அதிர்ந்தது,
கால்கள் வலுவிழக்க
பூமியில் முழங்கால் படியிட்டது.

 
உன்னத உரையாடல்.


 
செபம்,
அது கடவுளோடு கொண்ட
உன்னத உரையாடல்.

செபம்,
அது
சூல் கொண்ட சோகங்களை
கால் கொண்டு நசுக்குமிடம்.

செபியுங்கள்,
உள்ளுக்குள் உற்சாகம்
அலையாய் புரண்டாலும்,
நெஞ்சுக்குள் ஓர் சோகம்
மலையாய் அரண்டாலும்,
கண்களை மூடி செபியுங்கள்.

செபம்,
வேண்டுதல்களின் சுருக்குப் பைகளை
விரிக்கும் இடமல்ல,
அது
இதயத்தின் சுருங்கிய தசைகளை
நிமிர்க்கும் இடம்.

சோகத்தின் தள்ளுவண்டிகளை
மட்டுமே
செபத்தின் சக்கரங்கள்
தூக்கிச் சுமப்பதில்லை,
அது சந்தோஷப் தோணிகளுக்கான
துடுப்பையும் தயாரிக்கும்.

செபம்,
அது ஓர் உற்சாகமான உணர்வு.
நாளைய வாழ்வை
நெறிப்படுத்தும் நிறைவு.

இயேசு சொன்னார்,
மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.

பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.
 

சாதனைக்கான சோதனைக்காலம்
 

இயேசுவும் செபித்தார்.
நாற்பது நாட்கள் நோன்பிருந்தார்.

சோதனைகளின் காலுடைத்து
வருபவர்களால் தான்
வேதனைகளின் சங்குடைக்க இயலும்.

இயேசுவும் சோதிக்கப்பட்டார்.
அலகையினால்.

நாற்பது நாள் நோன்பில்
இயேசு,
பசியால் உண்ணப்பட்டார்.

அலகை சொன்னது.
நீதான் தேவ மகனாயிற்றே !
இதோ கல்,
இந்தக் கல் கொண்டு
அப்பம் செய்,
அப்பம் மெல் பசியை வெல்.

புன்முறுவலோடு பதிலுரைத்தார் பரமன்.
அப்பத்தினால் மட்டுமே
மனிதன் வாழ்வதில்லை,
ஆகாரங்கள் உடனடித் தேவையின்
ஊன்றுகோல்கள்.
வாழ்வுதரும் வார்த்தைகளே
ஊற்று நீர்.
வயிற்றுக்கு மட்டுமாய் வாழ்வது வாழ்வல்ல,
மீட்புக்காய் வாழ்வதே வாழ்வு.

அகல மறுத்த அலகை சொன்னது,
இதோ,
உலகனைத்தும் உனக்குத் தருவேன்,
என்னை வணங்கு.

நீ காணும்
நீள் வளங்கள் எல்லாம்
என் அரசவையின் பொக்கிஷங்கள்.

மெலிதாய் சிரித்து
மனுமகன் சொன்னார்.

உன்
கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே
வணங்கு என்பதே இறை வாக்கு.
இவ்வுலகின் செல்வங்கள்
என்னை
எள்ளளவும் வெல்லாது,
உன் ஆசை காட்டும் வேலை
என்னிடம் செல்லாது.

முயற்சியில் தளரா அலகை,
ஆலய உச்சி ஒன்றில் ஆண்டவனை
அழைத்துச் சென்றது.
இங்கிருந்து கீழே குதி,
நீ வான் ஆள்பவர் என்றால்
வானதூதர் உன்னை தாங்கிக் கொள்வர்.

இயேசு அலகையை நோக்கினார்,
உன்
ஆண்டவரைச் சோதியாமல்
அகன்று போ.
கண்டிப்பின் வார்த்தைகள்
நொண்டியடிக்காமல் வந்தன.

தோல்வியின் பாரம் முதுகில் ஏந்தி
அலகை அகன்றது.

சோதனைகள்.
வாழ்வின் மீது விழும்
முரட்டுத்தனமான அடி.
சோதனையின் அழைப்பை ஒதுக்கி
பிழைத்து வருவதே பெருமை.

ஆசைகளின் கூடாரத்துள்
அசை போட்டுக் கிடந்தால்
கால்நடைகளுக்கும்
மானிடனுக்கும் வித்தியாசம் ஏது ?

மனித வாழ்வு,
சோதனைகள் மோதினால்
இலட்சியங்களின்
இலக்குகளை இடம் மாற்றி வைக்கும்.

வயிற்றுக்கான சோதனைகளில்
சில சமயம்,
பொருளுக்கான சோதனைகளில்
பல நேரம்,
புகழுக்கான சோதனையில்
பெரும்பாலும்
என மனிதன்
இடறி விழாத இடங்கள் குறைவே.

மூன்று சோதனைகள்,
மூவொரு இறைவனின் முன்னேயும்
முந்தி விரித்தது,
அவரோ சூரியன் !
மெழுகுக் கால்கள் அவரை
மிதிக்கப் பார்க்கின்றன !.
எரிந்து போவோம் என்பதை
அறியும் அறிவும் இல்லாமல்.

இயேசு வென்றார்.
இயேசுவாய் நின்றார்.
 

பணிவாழ்வுக்காய் பயணியுங்கள்

 

கலிலேயக் கடல்
கரைகளில் ஈரக்காற்றை இறக்கிவைக்க
அலைகளை
அனுப்பிக் கொண்டிருந்தது.

அங்கே இருவர்,
வலைகளை அனுப்பி
மீன்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் பேதுரு,
மற்றவர் அந்திரேயா.

இயேசு
அவர்களைப் பார்த்தார்.
வாருங்கள்,
வலைகளோடும் மீன்களோடும்
வாழ்வோரே வாருங்கள்.

இன்னும் எத்தனை காலம் தான்
நீருக்குள் மூழ்கும்
மீன்கள் பின்னே அலைவீர்கள்,
மீன்கள் பிடித்தது போதும்
மீண்டுமிருக்கும் வாழ்வில்
மனிதர் பிடிக்கலாம் வாருங்கள்.

ஒரே அழைப்பு.
மீனவர்கள் வானவரை
பின்தொடரத் துவங்கினார்கள்.

கடலின் மணல் கைகளில்
கால் சுவடுகள் பதித்து
நடந்து போகும் வழியில்
இன்னும் இருவரைக் கண்டார்.
அவர்கள்,
செபதேயுவின் மகன் யாக்கோபு,
அவரது சகோதரன் யோவான்.

அவர்கள்
வலைகளின் பழுதுகளை
தந்தையோடு அமர்ந்து
திருத்திக் கொண்டிருந்தார்கள்.

இயேசு அவர்களையும் அழைத்தார்.
வாருங்கள்,
பழுதுகள் வலைகளில் அல்ல
மனங்களின் நிலைகளில்.
சீரமைப்போம் புது
பாரமைப்போம் வாருங்கள்.

தந்தையிடம் வலையை விட்டுவிட்டு
தனையர் இருவரும்
இயேசுவின் பணிக்குள்
இணைந்து கொண்டார்கள்.

அடுத்த சீடருக்கான அழைப்பு
கப்பர்நாகூமில் வந்தது.
வரிவசூலிக்கும் மத்தேயு
வசவுகளை
வசூல் செய்து கொண்டிருந்தபோது
அவருக்கு வந்தது
வாழ்வுக்கானதை வசூலிக்கும் அழைப்பு.

நாணயங்களை சேகரிக்கும் அவர்
நாணயத்தை சேகரிக்க
அழைப்புக்கு அடிபணிந்தார்.

பிலிப்பு,
பார்த்தலமேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
சீமோன் மற்றும்
யூதாஸ் இஸ்காரியோத்து
இவர்களும் அழைக்கப்பட்டனர்.

தனி வாழ்வு சிந்தனைகள்
இனி வேண்டாமென்று,
சுய நல வாழ்க்கையை
கடலுக்குள் கரைத்து விட்டு
அழைக்கப்பட்டவர்
கடவுளின் கரம் பிடித்தனர்.

இயேசுவின் அழைப்பு
அடிமட்ட மக்களின்
வாழ்வுக்கான நெம்புகோலாய் விழுந்தது.
மதவாதிகளை
மதிக்காமல்,
சட்ட வல்லுனர்களை
சட்டை செய்யாமல்,
மாடமாளிகைகளுக்கு
தூது அனுப்பாமல்
ஏழைகளுக்காய் எழுந்தது.

இருக்கைகளின் தேடல்களை
வெறுத்து
இரக்கத்தின் தேடல்களையே
இறைமகன் நடத்தினார்.

 
வலுவாக்கும் அறிவுரைகள்

 

தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை
பண்ணையாளர்களின்
பண்ணைக்கு அனுப்பாமல்,
சிதறிப் போன
ஆட்டுக் கூட்டத்தை சேகரிக்கவே
இயேசு அனுப்பினார்.

இறை வல்லமையை
அவர்களுக்குள்
குறைவின்றி நிறைத்து.

செல்லுங்கள்,
ஓநாய் கூட்டத்து இடையே
செம்மறிகளை
அனுப்புகிறேன்,
சங்கடப் படாதீர்கள்.

சட்டங்களின் ஈட்டிகள் உங்களை
வழியில் தடுக்கும்,
சாட்டைகள் உங்களை
தொழுகைக் கூடத்தில் நிறுத்தி
தோல் கிழிக்கும், வருந்தாதீர்கள்.

என்ன பேசுவதென்று
பதட்டம் வேண்டாம்,
பரிசுத்த ஆவி பேசுவார்,
தயாரித்து வாசிக்கும் தளம் அல்ல
அந்த களம்.
உங்கள் தகுதியை தீர்மானிக்கும்
தளமுமல்ல.
நம் தந்தையின் வார்த்தைகள்
பரவும் இடம்.
அவசியமான போது
அவசியமானவை அருளப்படும்.

அச்சத்தை அவிழ்த்து விட்டு
ஆவியை அணிந்து கொள்ளுங்கள்.

காசுகளைச் சேகரித்து
எடுத்துச் செல்லவேண்டாம்,
உங்கள்
பணிக்கு உணவு
நல்லோரால் நல்கப்படும்.

வெளிப்படாமல்
மூடியிருப்பதும்,
அறிய முடியாதபடி
மறைந்திருப்பதும் எதுவும் இல்லை.
அறிவியுங்கள்,
உங்கள் காதுகளுக்கு நான்
சொல்வதை,
ஊரின் காதுகளுக்குள்
ஊற்றுங்கள்.

என்னையும்,
என் பொருட்டு உங்களையும்
ஏற்றுக் கொள்பவர்களை
நான்
இறுதி நாளில் உறுதியாய் ஏற்பேன்,
மறுதலிப்பவர்களையோ
நான்
மன்னிக்கவே மாட்டேன்.

உங்களுக்கு என் பெயரால்
ஒருகுவளை
தண்ணீர் கொடுப்பவன் கூட,
கைம்மாறு பெறத் தவறான்.

மனங்களைத் தயாரித்த
இயேசு,
அவர்களை
அறுவடைக்காய் அனுப்பினார்,
இதய அறுவடைக்காய்.

நுழைவோம் ஞாயிறு, நவ் 23 2008 

 
வாருங்கள்

கடவுளைக் கண்டிருக்கிறீர்களா ?
ஆம் என்பது ஆத்திகமா ?
இல்லை என்பது நாத்திகமா ?

அதோ
சிறகடித்துச் சிரிக்கும்
சின்னக் குருவியில்,

அசைவுகளில் அழகூட்டி
வாசனையில்
வரவேற்கும்
வண்ணப்பூக்களின் இதழசைவில்,

வரிசையாய்
மலைகீறி முளைத்திருக்கும்
உயர்ந்த மரங்களின் ஒய்யாரச் சரிவில்,

ஒவ்வோர் அழகும்
ஒளிந்திருக்கும்
பூமியின் பக்கங்களில்
இறைவன் இருக்கிறார்.

சாலையோர ஏழையின்
கைத்தடியாய் நீ
உருமாறும் போதும்,

ஓர்
விவசாய நண்பனின்
வியர்வைக்கரையில் நீ
உனை நனைக்கும் போதும்,

வறுமை வயிறுகளில்
சோற்றுப் பருக்கைகளாய்
நிரம்பும் போதும்,
வியாதியரின் வேதனைப் படுக்கையில்
ஆறுதலாய் நீ
அமரும் போதும்,

அயலானின் தேடல்களில்
சந்தோஷமாய் நீ
சந்திக்கப்படும் போதும்,
ஆண்டவனை நீ
சமீபத்தில் சந்திக்கிறாய்.

எப்போதேனும்
கற்பனையில் மோட்சத்தை
எட்டிப்பார்க்கத் தோன்றும் எனக்கு.

விரித்த கரங்களும்,
சிரித்த உதடுகளுமாய்,
ஆசனத்தில் அமர்ந்திருக்கும்
ஓர் கடவுள்,
சிறு வயதிலிருந்தே
பார்த்துப் பழகிய
இயேசுவின் முகம்.

சில வேளைகளில்
நான் குழந்தையாய்
அவர் கரங்களைப் பிடித்துக் கொண்டு,
திராட்சைத் தோட்டத்தில்
சின்ன நடை பயில்வதாய்
சிலிர்ப்பைத் தரும்.

செபிக்கும் போதெல்லாம்,
ஓர் சிவப்பு ஆடையின் உள்
தனைப் புதைத்து,
சிறு பாறையில் அமர்ந்து
நான் பேசுவதைக் கேட்பதாய்,
ஆறுதலாய் என் தோள் தொடுவதாய்
தோன்றும்.

சில வேளைகளில்
உருவத்துள் இழுக்க இயலா
ஓர் ஒளிப் பிரவாகமாய்….

கடவுளைக்
கடவுளாய் காணும் நிமிடங்கள் அவை.

சுயநலமற்ற அன்பின்
சுய உருவம் இயேசு.

போதனைகளைக் கேட்பவன்
புனிதனல்ல,
போதனைகளின் படி
வாழ்பவனே மனிதன்.
மனிதனாய் மாறுவதே
புனிதனாவதன் முதல் படி.

இயேசுவின் போதனைகள்,
சில தலைமுறைகளைச்
சலவை செய்தது.
ஆணித்தரமாய் இறங்கி
சம்பிரதாயங்களின் ஆணிவேரை
அச்சமில்லாமல் அசைத்தது.

கிறிஸ்தவம்,
இறைவனின் போதனைகளின்
பிம்பமாக வேண்டும்

கிறிஸ்தவன்
கிறிஸ்துவின் வாழ்வின்
பிம்பமாக வேண்டும்.

கிறிஸ்துவின் போதனைகள்
ஒரு
குழுவுக்காய் கொடுக்கப்பட்ட
ஒளித்து வைக்கப்பட வேண்டிய
ஓலைச் சுவடிகளல்ல.

முழு மனித சமுதாயத்துக்காய்
வழங்கப்பட்ட வழிமுறைகள்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காய்
கொடுக்கப்பட்ட நன்கொடைகள்.

இயேசுவின் போதனைகள்,
மனுக்குலத்தின் மாண்புகள்.
மதச்சாயம் கண்டு
இதை
மறுதலித்து விடாதீர்கள்.

இயேசுவின் காலம் : ஒரு வரலாற்றுப் பார்வை ஞாயிறு, நவ் 23 2008 

இயேசுவின் காலம்… ஓர் வரலாற்றுப் பார்வை 

ஸ்டெல்லா

jesus_029   

 
கடவுள் வானத்தையும், பூமியையும் படைத்து அதிலுள்ள அனைத்தையும் ஆள்வதற்கான அதிகாரத்தை மனிதனுக்கு அளித்தார். அக்காலத்தில் தேவன் மனிதனோடு உறவாடி அவர்களுடைய துன்ப நேரங்களில் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து வந்தார். கடவுள் மனிதனோடு தீர்க்கத்தரிசிகள் வழியாக பேசி அவர்கள் வாழவேண்டிய வழிமுறைகளைக் கட்டளைகளாகக் கொடுத்தார்.  இந்தக் கட்டளைகள் மூலமாக அவர்கள் ஆண்டவனிடத்தில் ஒன்றித்திருக்கவும் நல் வழியில் நடக்கவும் பணித்தார்.

பல தீர்க்கதரிசிகளும், நியாயாதிபதிகளும் இஸ்ரேல் மக்களை நல் வழியில் நடத்தினார்கள்.  காலம் செல்லச் செல்ல தேவனுடைய வார்த்தை இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தவில்லை.  புறஇனத்தார் போல தங்களையும் ஆள அரசர்கள் இருந்தால் நலமாக இருக்கும் என்று எண்ணினர். கடவுள் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை ஆள அரசர்களை ஏற்படுத்தினார். இறைவன் இஸ்ரேல் மக்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக இருந்தபடியால் இஸ்ரேல் மன்னனோடும், மக்களோடும் தீர்க்கதரிசிகள் மூலமாக தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்தார்.

இஸ்ரேல் என்பது பன்னிரண்டு கோத்திர மக்கள் சேர்ந்த ஒரு அரசாகும்.  அனைவரையும் ஒரே அரசர் அரசாண்டு வந்தார்.  உலகின் மிகப் பெரிய ஞானியான சாலமோன் மன்னனும் இஸ்ரேல் மக்களை ஆண்ட அரசர்களில் ஒருவர்.  சாலமோன் மன்னனுக்குப் பின் அவருடைய மகன் ரெகோபெயாம் ஆட்சிக்கு வந்தார். அவருடைய ஆட்சி காலத்தில் பெரும் புரட்சி உருவாகி இஸ்ரேல் அரசு இரு பிரிவாகியது.  பத்து கோத்திரம் இணைந்து இஸ்ரேல் ராஜ்யமாகவும் மீதி இரண்டு கோத்திரம் இணைந்து யூதா ராஜ்யமாகவும் மாறியது. 

யெரோபெயாமின் ஆட்சி இஸ்ரேல் ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு அடித்தளமாக விளங்கியது. இறைவனிடம் பல உறுதிமொழிகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்றிருந்தபோதிலும் யெரோபெயாம் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் வேற்று தேவர்களை தொழ ஆரம்பித்தார்கள்.  இதனால் இஸ்ரேல் அரசு மற்ற ராஜாக்களின் தாக்குதலுக்கு ஆளானது.

150 ஆண்டுகளுக்குள் இஸ்ரேல் சாம்ராஜ்யம் முழுவதும் வேற்று அரசர்களுக்கு கீழ் அடிமையாகி விட்டது.  இது நடந்த காலகட்டம் சுமார் கி.மு. 700-ம் ஆண்டாகும்.  சுமார் கி.மு. 705 ண்டில் யூத ராஜ்யம் சரிய ஆரம்பித்தது.

சுமார் கி.மு. 586 கால கட்டத்தில் பாபிலோன் மன்னன் செதேக்கியா என்னும் யூத அரசனை சிறை பிடித்து அவருடைய மகன்கள் இருவரையும் கொலை செய்தான்.  அப்படியாக யூதா முழுவதும் சிறைபிடிக்கப்பட்டு, பெரும் சிறப்புப் பெற்ற ஜெருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டு, அதில் இருந்த அனைத்து பொன்னும் பொருளும் கொள்ளையடிக்கப்பட்டு, யூதர்களின் கலாச்சாரம் சிதறடிக்கப்பட்டது.  அது முதல் யூதா அந்நிய அரசர்களின் ஆளுகைக்குள் வந்தது.

இஸ்ரேல் மக்கள் மற்ற அரசர்களிடம் அனுமதி கோரி செருபாபேல், எஸ்றா மற்றும் நெகேமியா என்னும் தலைவர்களின் கீழ் ஜெருசலேம் தேவாலயத்தை சீரமைக்கும் பணியை ஆரம்பித்தனர்.  இந்தத் தலைவர்கள் யூத மக்களை பண்படுத்தி அவர்கள் கடவுளின் வழியை விட்டு தேவையில்லாத பழக்கங்களில் ஈடு பட்டிருப்பதை உணர்த்தினர்.  இது சுமார் கி.மு. 400-வது ண்டில் நடந்தது.

அதற்குப் பின்பு அவர்களுக்கு தேவனால் எந்தத் தீர்க்கதரிசியும் அளிக்கப்படவில்லை.  அந்த கால கட்டத்தில் இஸ்ரேல் பெர்சியா மற்றும் எகிப்திய அரசாட்சியின் கீழ் இருந்தது.  மக்கள் மனம் போன போக்கில் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டனர்.  வேற்று அரசர்களின் அரசாட்சி, முக்கியமாக கிரேக்கர்களுடைய வழிபாட்டு முறைகள் இஸ்ரேல் மக்களை மிகவும் பாதித்தன.  நாட்கள் செல்லச் செல்ல யூத முறைகளைப் பின்பற்றுவது மிகப் பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.  இது யூதர்களைக் கோபமுறச் செய்தது.  அவர்கள் கிரேக்கர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர்

கலகத்திற்குப் பின் சிறிது காலம் யூதர்கள் கடவுள் கற்பித்தபடி வழிபட்டனர்.  ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.  அடுத்ததாக வந்த ரோமர்களின் ஆட்சி அவர்கள் வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறைகளை துவம்சம் செய்தது.  அந்த ஆட்சியும், காலகட்டமும் தான் உலகத்தின் மிகப் பெரிய நிகழ்வுகளுக்குப் பக்க பலமாக இருந்தது.  அது தான் வரலாறுகளைத் திருத்தி அமைத்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காலம்.

அந்த கால கட்டத்தில் மக்களிடையே பல பிரிவுகள் இருந்தன.  பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் போன்றவர்கள் அவற்றில் சிலர்.  சதுசேயர்கள் அரசியல்வாதிகள்.  அவர்களுடைய பிரதான எண்ணம் தங்களுடைய பதவியையும், செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்வது தான்.  சதுசேயர் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாதவர்கள்.  பரிசேயர்கள் அந்நிய ஆட்சியை எதிர்த்தவர்கள்.  அவர்கள் தங்களுடைய கலாச்சாரத்திலும், முன்னோர்கள் தங்களுக்குக் கொடுத்த சட்ட திட்டங்களிலும் நம்பிக்கையுள்ளவர்கள்.

இயேசு கிறிஸ்து அவர்களுடைய கண்மூடித்தனமான கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்தபடியால் அவர்கள் இயேசுவை எதிர்த்தனர்.  வேதபாரகர் சாதாரண மக்களில் ஒருவராக எண்ணப்பட்டனர்.  கலாச்சாரம் மற்றும் வேதத்தில் உள்ளவைகளை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்வது தான் அவர்களுடைய பணி.

யூத மதம் மறக்கப்பட்டு வெவ்வேறு அரசாட்சியினால் சிதறடிக்கபபட்டது.  ரோம அரசாங்கம் யூதாவை தொல்லை தரக்கூடிய ஒரு நாடாகக் கருதியது.  யூதர்கள் தீர்க்கதரிசிகள் உரைத்தபடி மேசியாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தினர்.  வெளிநாட்டு அரசர்களால் ஒடுக்கப்பட்டிருக்கும் தங்களை மேசியா என்னும் மீட்பர் வந்து அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பார் என்று எதிர் பார்த்தனர்.

ஆனால் மீட்பர் இயேசு கிறிஸ்துவோ தாழ்மையின் வடிவமாக கன்னி மரியின் மடியில் மாட்டுத் தொழுவமொன்றில் பிறந்தார். அரசரை எதிர்பார்த்திருந்த யூதர்களால் தொழுவத்தில் வந்தவர் தான் மேசியா என்பதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களில் பலர் ஏழ்மையில் பிறந்த அவரை ஆண்டவராய் காண மறுத்தனர். னால் எல்லா யூதர்களும் அவரை எதிர்க்கவில்லை, சில யூதர்கள் விதி விலக்காக இருந்தனர்.  இயேசு பிறந்தபொழுது சிமியோன் மற்றும் அன்னாள் என்னும் தீர்க்கதரிசிகள் அவரைக் கண்டு மிகுந்த சந்தோஷமடைந்து அவர் தான் இஸ்ரேலரை விடுவிக்கும் மேசியா என்று வெளிப்படையாக தீர்க்கத்தரிசனம் உரைத்தனர்.

கடவுள் மனிதன் மேல் வைத்த அளவில்லா அன்பினால் தம் சொந்த மகனையே மனிதனாக உலகிற்கு அனுப்பினார்.  ஆனால் யாருக்காக அவர் அனுப்பப்பட்டாரோ, அவர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. “மனுமகனுக்குச் சொந்த ஊரில் மதிப்பில்லை ” என்று இயேசுவே அதை உரக்கச் சொல்கிறார். குழப்பமான அரசியல் சூழ்நிலையில், மனிதனை பாவத்திலிருந்து மீட்டு நல்வழிப்படுத்தும் நோக்கத்தோடு இயேசு உலகத்தில் வந்தார்.  எதிர்ப்புகளின் மத்தியிலும்,  பெரும்பான்மையான யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலும், தான் வந்த காரியத்தை பொறுமையாக, அன்பாக தொடர்ந்து செய்தார்.

அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும் பொழுது அக்காலத்தில் அவரைப் பின்பற்றியவர்கள் மிகுந்த தைரியத்தோடு தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்து இயேசுவைப் பின்பற்றியிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.  இயேசு அவர்களுடைய தீய வாழ்க்கையைத் துவைத்து அழுக்ககற்றி அவர்களை தீவிர நம்பிக்கையுள்ளவர்களாக மாற்றினார். தான் மரித்து, உயிர்த்து, விண்ணகம் சென்றபின் தன்னுடைய பணியை மண்ணில்  தொடர்வதற்காக அவர்களை ஆயத்தப்படுத்தினார்.

இயேசுவின் போதனைகள் மக்களிடையே பெரும் கலகத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தின. எத்தனையோ அற்புதங்களை அவர்கள் மத்தியில் செய்த போதும் யூத மக்களின் விருப்பத்துக்கிணங்க ரோம அரசாங்கம் அவரைச் சிலுவையில் அறைந்தது.  அந்த சூழ்நிலையிலும், உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்ற தன்னுடைய போதனைக்கேற்ப அவரைக் காயப் படுத்தியவர்களையும் மன்னிக்க அவர் உலகக் கடவுளாகிய தன்னுடைய தந்தையிடம் செபித்தார்.

தீர்க்கதரிசிகளின் வாக்குப்படி மூன்றாம் நாள் இயேசு சாவின் கொடுமையை வென்று உயிரோடு எழுந்தார். என்ன ஒரு மகத்தான செயல்.  யூதர்கள் மட்டுமே உரிமை கொண்டாடிய வேதத்தை பேதமையின்றி எல்லா மக்களுக்கும் அறிவித்தார்.  பிதாவாகிய தேவன் உலகத்திற்கு தம்மை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றினார்.  தம்முடைய வருகையால் மனித வரலாற்றை கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரித்தார்.

தந்தையின் வாழ்த்து ஞாயிறு, நவ் 23 2008 

மகனுக்கு ஒரு வாழ்த்து !

தாசையன்

 

jesus_082

 

 உலகனைத்தும் தனதாக்கிக் கொண்டு
ஒப்பற்ற தன்னாத்மா இழந்து போனால்
வளமேது நலமேது.

இறைமகன் இயேசுவின் வாழ்க்கையையும், நற்செய்தியையும்
பாமரருக்கும் புரியும் படி,
எளிய நடையில் கவிதை படைத்து
வாழ்வு தனை வளமாக்கிடவும்
இறை ஒளியைப் பரப்பிடவும் முயன்று
வெற்றி பெற்றிருக்கும் என் மகனை வாழ்த்துகிறேன்.

வளரும் பயிர் முளையிலேயே தெரியும்,
பயிர் மட்டுமல்ல
விளையும் மூளையும் கூட முளையிலேயே தெரிய வரும்.
இளமையிலேயே
பாடக் குறிப்பேடுகளின் பக்கங்களில்
கவிதைகள் தான் குறிக்கப்பட்டிருக்கும்.
“கிறுக்குவதைக் கோத்தெழுது பலனளிக்கும்” என
அறிவுரைகள் கூறுவதுண்டு.

கல்லூரி வாழ்க்கையிலே அவன்
பரிசுகள் பல பெறுவதுண்டு
புத்தகங்களிலும் இடம் பெறுவதுண்டு அதனால்
உவகை மிக அடைவதுமுண்டு.

ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்
மனவிளிம்புகள்
இரண்டையுமே படித்த போது
மகனுக்குள் கவிஞனைத் தேடவில்லை
கவிஞனுக்குள்ளிருந்த மகனை தேடினேன்.
ஆகா என்ன வளர்ச்சி.

பெற்றோரிடம் அவனுக்குப் பெரும்பாசம்
அதிலும் தாயிடம் தனிப்பாசம்.
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் நிலைக்குள்
இரண்டு மனங்களும் நீராடுகின்றன இப்போது.

இறவாக் காவியம் !
அதொரு நிறைவுக் காவியம்.
ஒரு வாழ்க்கை முறையின் கவிதை முளை.

பிறர் உனக்கு என்ன செய்ய விரும்புகிறாயோ
அதையே நீ பிறக்குச் செய்யத் தவறாதே என்னும்
இறைவார்த்தையல்லவா இருக்கிறது இதிலே.

சேவியரை மேலும் மேலும் வாழ்த்துகிறேன்
முதல்வனைப் பாடும் இந்தக் காவிய உருவாக்கத்தில்
மனையாளின் செயலாக்கம் உடனுண்டு
அதிலே உயர்வுக்கு வழியுண்டு.

கவிதைகள் பல படைத்திடு உன்
திறமைகளை பலப்படுத்து.
மக்கள் மனம் பண்பட உன்
கவிதைகளைப் புலப்படுத்து.

நீ… எல்லா நூல்களிலும் வளர்கிறாய்.
ஆனாலும் இன்னும் அதே மகனாய்த் திகழ்கிறாய்.

வாழ்த்துகிறேன் உன்னை.
வேண்டுகிறேன் இறைவனிடம்,
இறவாக் காவியத்தின் படப்பாளியைப் பாதுகாத்திட..

.
  தாசையன்

அணிந்துரை : சகோதரர். மோகன் சி லாசரஸ் ஞாயிறு, நவ் 23 2008 

அணிந்துரை  

         
மோகன் சி. லாசரஸ், இயேசு விடுவிக்கிறார்.

 

jesus_198

 

 

 

 

 

 

 

 

“இறவாக் காவியம்”
இறைமைந்தன் இயேசுவை மகிமைப் படுத்தும்
மறவாக் காவியம்.
பரமனின் பாதங்களை ஆராதனை செய்ய
புதிய மலர் ஒன்று மலர்ந்துள்ளது கண்டு
மகிழ்கிறோம்.

மறவேன் என்றும் உன்னை
தருவேன் இரட்டிப்பான நன்மை
வருவேன் விரைவில்
என்றுரைத்த திருக்குமாரன் இயேசுவைக் குறித்து
கவிதை தந்த சேவியரை
வாழ்த்துகிறேன்,
இயேசுவின் ஈடில்லா நாமத்தில்.

பாவியாயினும் படு பாதகனாயினும்
பரமனின் போதனையைக் கடைபிடித்தால்
பாவம் பறந்திடும்
பரிசுத்தம் வந்திடும்
பரலோகம் கிட்டிடும் – என்னும் உண்மையினை
எளிய நடையில்
புதுமை படிக்கட்டுகளாக்கி
புதுக்கவிதை தந்து, அனைவரும்
படிக்கட்டுமே, படித்து மகிழட்டுமே
துடிக்கட்டுமே உள்ளுணர்வு,
கிட்டட்டுமே பரிசுத்தம்,
எழுந்து பிரகாசிக்கட்டுமே
இளையவர் கூட்டம் என
கவிதை படைத்த சேவியரை
மனதாரப் பாராட்டுகிறேன்.

“மனந்திரும்புங்கள்
மனிதராகுங்கள்
உள்ளத்தால் உள்ளவராகுங்கள்”
எனும் நற்செய்தியைப் பரப்பிட
புது வழியை
தேர்வு செய்த சேவியரை
வாழ்த்துகிறேன்.

“நானே வழி
நானே சத்தியம்
நானே ஜீவன்”

என மானிடர்க்கு வழிகாட்டியதோடு
வாழ்ந்து காட்டி,
தமது அடிச்சுவட்டை விட்டுச் செல்ல
விண்ணைத் துறந்து
மண்ணில் அவதரித்து
ஏழ்மையில் பிறந்து
தாழ்மையாய் மலர்ந்து;

பாவ
இருளகற்றும் ஒளியாய்
ஜீவ வழியாய்
மரண பரியந்தம்
வருத்தப்படுவோரின்

பாரம் சுமந்து, சிலுவை
மரத்தில் உயிர் துறந்து
உதிரத்தின் கடைசிச் சொட்டினையும்
நம்
பாவக்கறையினைக் கழுவிடவே
ஊற்றிக் கொடுத்து

பொல்லாங்கனால் பறிமுதல் செய்ய முடியாத
இரட்சிப்பின் சந்தோசத்தை நமக்குச் சொந்தமாக்கி
பரிசுத்தாவியின் நிறைவினால் நம்மை நிரப்பி,

தெய்வீக சமாதானத்தை
உலகிற்குத் தந்த உத்தமர்
இயேசுவின் கரங்கள்
சேவியரைக் காத்திட
வேண்டுகிறேன் கர்த்தரின் நாமத்தில்.

ஆவியின் கனி தருபவராக
புவியில் வாழ்பவரை மாற்றிட,
பரலோக வாழ்க்கைக்கு
பாதை காட்டிட சகோதரர்
சேவியர் எடுத்துள்ள முயற்சி
தொடரட்டும்
தூயவனைத் துதிக்கிறேன்.

மரணத்தின் கூர் ஒடித்து
பாதாளத்தின் திறவுகோலைக் கையிலெடுத்து
அலகைக்கு அடிமைகளாய், மரணபயத்தில்
பேடிகளாய் வாழ்ந்த மக்களை
மீட்டிடவே உயிர் துறந்து
விண்ணுலகை சிலகாலம் மறந்து,

விண்ணுலகு சென்று
மீண்டும் வருவேன்
திக்கற்றவர்களாக உங்களை விட்டுச் செல்லேன்
பரலோக பாக்கியம் தந்திடுவேன்
“வாழ்வின் இறுதிவரை உங்களோடிருப்பேன்” என

அறுதியிட்டுச் சென்றவரின் வரலாற்றை
இறவாக் காவியமாகப் படைத்த
சேவியரின் சேவையை
பாராட்டி மகிழ்கிறேன்.

நீவீர் பல்லாண்டு வளமுடன் வாழ்க
என வாழ்த்துகிறேன்.
வல்லவர் நாமம் பரவட்டும் பாரெங்கும்”

இதோ,
இறவாக் காவியத்தின்
மறவா உச்சரிப்புகள்.
இந்த உச்சரிப்புகளை
உச்சரித்து உச்சரித்து
நம்
நினைவுகளும் சிந்தனைகளும்
கிறிஸ்துவை தரிசித்துக் கொள்ளட்டுமே !.

” மன்னிப்பு
   தண்டனைகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.

விதையின் முடிவு
செடியின் விடிவு.

ஆடையின் சிவப்பும்
குருதியின் சிவப்பும்
இயேசுவை
சிவப்புச் சாயம் பூசிய
வெள்ளைப் புறாவாக வெளிக்காட்டியது.

உவமைகள்
அறிவுரைகளை ஏற்றிச் செல்லும்
அற்புத வாகனம்

வருகைக்குப் பின்
வாசல் பெருக்கத் துவங்காதீர்கள்.

இயேசு
சாவுக்குச் சாவுமணி அடித்தார்
வாழ்வுக்கு
வரவேற்புக் கம்பளம் விரித்தார்.

இவைகள் வார்த்தைகள் அல்ல
தேவனின் மகிமையைப் பேசுவதால்
வைரங்கள்
வைடூரியங்கள் !

சேவியரை ஆசீர்வதிக்கிறேன்.
ஆண்டவர் இயேசுவின்
உயிர்த்தெழுந்த வல்லமையினால்.

நுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008 

 

வாசல்

jesus_185

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார், 
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.

நுழைவாயில் ஞாயிறு, நவ் 23 2008 

 

மதங்களின் வேர் விசுவாசத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. அதன் கிளைகள் மனிதத்தின் மீது மலர் சொரியவேண்டும். மனிதத்தின் மையத்தில் புயலாய் மையம் கொண்டு சமுதாயக் கரைகளைக் கருணையின்றிக் கடக்கும் எந்த மதமும் அதன் அர்த்தத்தைத் தொலைத்துவிடுகிறது.

கிறிஸ்தவம்,
அது எப்போதுமே அன்பின் அடிச்சுவடுகளில் பாதம் பதித்து அயலானின் கண்ணீர் ஈரம் துடைக்கும் கைக்குட்டையோடு காத்திருக்கும் மதம். பல்லுக்குப் பல் என்னும் பழி வாங்கல் கதைகளிலிருந்து விலகி வாழ்வியல் எதார்த்தங்களின் கரம் பிடித்து சமுதாயத்தின் அடித்தட்டு மக்களின் வியர்வையும், குருதியும் கலந்த வேதனைப் பிசு பிசுப்பை துடைத்தெறியத் துடித்தவர் தான் இயேசு.
கடவுளினின்று மனிதனாக, மனிதனிலிருந்து கடவுளாக நிரந்தர நிவாரணமாக, உலவுபவர் தான் இயேசு.

சமுதாயக் கவிதைகளின் தோள் தொட்டு நடந்த எனக்கு ‘இயேசுவின்’ வாழ்க்கையை எப்படி எழுதவேண்டும் என்று தோன்றியது, அதை எப்படி எழுதி முடித்தேன் என்பதெல்லாம் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. இந்த படைப்பிற்குள் நீங்கள் காண்பதெல்லாம் ஒரு சரித்திரக் கதாநாயகனின் சாதனைப் பயணம் தான்.

இயேசு யார் என்பதை அறியாத மக்களுக்கு அவரை எளிமையாக அழுத்தமாக அறியவைக்க வேண்டும் என்னும் எண்ணமே இந்தப் படைப்பு உருவாகக் காரணம்.

தோப்புக்குத் தெரியாமல் குருவிக்குக் கூடுகட்டிக் கூட கொடுக்காத ஒரு சமுதாயத்தினரிடம்,
‘நீ வலக்கையால் செய்யும் தானம் இடக்கைக்குத் தெரியவேண்டாம்’ என்று அன்பின் ஆழத்தை அகலப்படுத்துகிறார்.
எதிரியை நேசி – என்னும் அறிவுரையால் அன்பை ஆழப்படுத்துகிறார், 
இன்னும் இதயம் தொடும் ஏராளம் அறிவுரைகளை அளித்து அன்பை நீளப்படுத்துகிறார்.

0

சாரத்தைத் தொலைத்துவிட்ட
உப்பும்,
ஈரத்தைத் தொலைத்து விட்ட
மனசும்,
உபயோகமற்றுப்போன உதிரிகள்.

0

உன் வார்த்தைகளுக்குள்
செயல்களின் சுடரை ஏற்றி வை.
விளக்குக்குத் திரியிட்டு
திரிக்குத் தீப் பொட்டிட்டு,
அதை
மூடிவைப்பது முட்டாள் தனம்…

0

விபச்சாரம்
உடல்சார்ந்த வன்முறை
மட்டுமல்ல.
இச்சைப் பார்வையின் மிச்சம்
விபச்சாரத்தின் எச்சமே…

0

அயலானுக்காய்
நீ
தொங்க விடும்
தராசுத் தட்டில் தான்,
உனக்கானதும் நிறுக்கப்படும்.

0

தீமையின் நெடுஞ்சாலையை
நிராகரியுங்கள்,
நன்மையின் ஒற்றையடிப்பாதையை
கண்டு பிடியுங்கள்.

0

என்று சின்ன சின்ன வார்த்தைகளால் அவர் சொன்ன போதனைகளுக்குள் ஒரு சமுத்திரத்தின் ஆழம் ஒளிந்திருக்கிறது.
சின்ன வரிகளுக்குள் ஒரு சீனச் சுவரே சிறைப்பட்டிருக்கிறது

இந்தப் படைப்பு, என் கவிதைத் திறமையை சொல்வதற்காய் செய்யப்பட்ட ஒரு படைப்பு அல்ல. விவிலியம் ஒரு கவிதை நூல் தான். அதை முறைப்படுத்தி, எளிமையாய் புதுக்கவிதையில் இறக்கிவைத்திருப்பது மட்டுமே நான் செய்த பணி.

பைபிளின் பழைய ஏற்பாடுகளில் ஆண்டவர் மேகம், இடி மின்னல் , தீ என்று இயற்கைக்குள் இருந்து மனிதனிடம் நேரடியாய் பேசுகிறார். புதிய ஏற்பாட்டில் இயேசுவாய் அவதாரம் எடுத்து மனிதரோடு பேசுகிறார். நம்பிக்கை, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, புதுமை என்று இயேசு தொடாத இடங்கள் இல்லை எனலாம்.

தீவிழும் தேசத்தில் இருந்துகொண்டு அவர் விதைத்த விசுவாச விதைகள் இன்னும் என் வியப்புப் புருவங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவில்லை.  காலம் காலமாய் அடையாளங்களோடு வாழ்ந்து வந்த மதங்களின் அஸ்திவாரங்களில் கடப்பாரையாய் இறங்க அவரால் எப்படி இயன்றது ? சர்வாதிகாரிகளின் அரசபையில் எப்படி அவரால் சத்தமிட இயன்றது ? ஒதுக்கப்பட்டவரோடு எப்படி அவரால் ஒன்றிக்க இயன்றது ? எதிர்த்து நின்ற அத்தனை மக்களைளோடும் ‘பாவமில்லாதவன் முதல் கல் எறியட்டும்’ என்று எப்படி அவரால் சொல்ல முடிந்தது, ஆணிகளால் அறையப்பட்டு வலியோடு எப்படி பயணம் முடிக்க முடிந்தது. அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் ‘அவர் இயேசு’ என்பது தான்.

சாதாரணக் கவிதைகளை மட்டுமே எழுதிப் பழக்கப்பட்ட என் விரல்கள் ஒரு இறைமகனை எழுதியதால் இன்று பெருமைப் படுகிறது. ஆனால் இந்தப் பெருமை எல்லாம் என்னைச் சேராது என்னும் எண்ணம் மட்டுமே என்னை மீண்டும் இறைவனில் ஆழமாய் இணைக்கிறது.

இந்தப் படைப்பைப் தொடராய் வெளியிட்ட நிலாச்சாரல் இணைய தளத்தின் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான்கு ஆண்டுகளாக இந்தப் படைப்பை புத்தக வடிவில் பார்க்கவேண்டுமென்று நான் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டைகள் முளைத்தபோதெல்லாம் எனக்கு ஆதரவாய் நின்ற இறைவனுக்கும், ஆறுதலாய் நின்ற பெற்றோருக்கும், தோள்கொடுத்து நின்ற துணைவிக்கும், ஊக்கம் தந்த உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

இயேசுவின் சமகாலத்தில், அவர் மடியில் தவழ்ந்த குழந்தைகளில் ஒன்றாய் வாழ இயலாமல் போன வருத்தம் நம்மில் பலருக்கும் இருக்கக் கூடும், அதற்கு அவரே சொல்லும் ஆறுதல் ‘என்னைக் காணாமல் விசுவசிப்பவன் பேறுபெற்றவன்’.

« முன்னைய பக்கம்

%d bloggers like this: