இயேசுவின் பிறப்பு
எல்லா பயணங்களும்
ஒரு
முதல் புள்ளியின் நீளல்களே.
பிறந்தபின் சிறந்தவராவர்
மனிதர்.
பிறப்பே சிறப்பானது
இறைமகன் பிறப்பில் தான்.
கலிலேயாவின் நாசரேத்தில்
கன்னியாயிருந்த மரியாளுக்கு
கபிரியேல் தூதர்
வான் வாழ்த்தொன்றை வழங்கினார்.
கன்னியான உமக்குள்
கடவுள் அவதரிப்பார்.
மரியாளின் மனதுக்குள்
அணையாது எரிந்தது
அந்த
சம்மனசு சொன்ன சங்கதி.
மரியாள் இன்னும்
தாயாராக
தயாராகவில்லை.
ஆண் வாசனை அறியாத
என் வாசலுக்குள்
ஓர்
ஆன்மீகக் குழந்தை அவதரிக்குமா ?
இதெப்படிச் சாத்தியம்
இல்லாமையிலிருந்து
ஓர்
இறைமகனின் அவதாரம் ?
ஏளனப் பார்வைகள் என்
கற்புக் கதவை
சந்தேகப் படாதா ?
ஆயிரம் கேள்விகளை
வினாடிக்குள் இழுத்து,
அத்தனை கேள்விகளையும்
அந்த
வினாடியின் முடிவில்
ஒடித்துப் போட்டது மரியின் உறுதி.
கோடி மக்களுக்குக்
கிடைக்காத பாக்கியம்
தேடி வந்திருக்கிறதே
என பிரமிப்புப் பூக்களை
விழிகளில் பயிரிட்டாள்.
சஞ்சலத்தின் வேர்களை
வெட்டிவிட
சம்மதம் செய்தாள்.
மண ஒப்பந்தமாகியிருந்த
மரியாள்,
மன ஒப்பந்தமும் கொண்டாள்.
புதியவனை உள்ளுக்குள்
பதியம் கொண்டு,
பூமிக்கு புதிய ஓர் தாயானாள்.
கணவனாகக் காத்திருந்த
யோசேப்பு அதிர்ந்தார்.
கவலை நெற்றியை தேய்த்தார்.
சந்தேகத்தின்
செந்தீயில் கண்களைத் தீய்த்தார்.
மரியாளின் கற்புக் கதவு
பலவீனமாகி விட்டதா
என பயந்தார்.
திருமணமே முடியாமல்
கரு உருவானதில்
கவலைப் பட்டார்.
வேருக்குள் விழுந்திருக்கும்
விஷயம்
ஊருக்குள் விழுவதற்குள்
மறைவாய் விலக்கி விடுதல்
நிறைவானது என்று
உள்ளுக்குள் முடிவெடுத்தார்.
இரவுத் தூக்கத்தில்
கடவுளின் தூதர்
அவருடைய
கனவின் கதவைத் திறந்தார்.
சந்தேகத்தின் கதவை மூடினார்.
தூய ஆவியால்
தாயானவள் தான் மரியாள்
பிறக்கும் பாலனுக்கு
இயேசு என்று பெயரிடு
தூதர் விளக்கினார்.
வந்திருப்பது
அவமானமல்ல,
வெகுமானம் என்பதை
குதூகலத்தோடு குறித்துக் கொண்டார்.
கடவுளின் சித்தம்,
எனக்குத் தேவை நித்தம் என்றார்,
ஓர்
வரலாற்றுக்குத் தந்தையாகும்
வரம் பெற்றார்.
கன்னிக்குப் பிறப்பான்
மீட்பின் மகன் !
தீர்க்கத் தரிசனங்களின்
தீர்க்கமான முடிவின் துவக்கம் தான்
இறைமகன் வரவின் விளக்கம்.
பிறப்பின் காலம் பிறந்தது.
அப்போது
வான் தந்த நட்சத்திரம்
ஒன்றுக்கு
வால் வந்தது.
வானத்து நட்சத்திரங்கள் எல்லாம்
செதுக்கிய முனைகளோடு
நகர,
நட்சத்திரம் வால் நீட்டி
சூரியன்
பூமியில் இருக்கிறான் என
சுட்டிக் காட்டியது.
தூரத்து விடிவெள்ளி ஒன்று
ஈர நிலா
பூமியில் இருப்பதை
விரல்கள் நீட்டி விளக்கியது.
இயற்கையே இறங்கி வந்து
குடிலில் கிடந்த
கொட்டில் மகனைச் சுட்டியது
ஏரோதின் சூழ்ச்சி
மேய்ப்பன் பிறப்பு
ஆடு மேய்க்கும் சிலருக்கு
தூதர்களால் தெரிவிக்கப்பட்டது.
ஞானியர் சிலரின்
ஞானங்களில்
அச்செய்தி அறிவுறுத்தப்பட்டது
கீழ்த்திசை ஞானிகள்
மேல் நோக்கினர்,
வானவன் தேவன் கீழ்நோக்கினார்.
ஒளியின் வடிவம்
இருளிள் இடிவுக்காய்
இறங்கியது அவர்கள் இதயங்களில்.
யூதேயா அரண்மனையின்
அரியாசன மஞ்சங்களில்
இடியென இறங்கியது
இயேசுவைத் தேடி வந்த
ஞானிகளின் வார்த்தைகள்.
“யூதர்களின் அரசன் எங்கே ?”
விண்மீன் ஒன்று வித்தை செய்கிறது,
பூமிப் பந்துக்கு இதோ
புது ராஜா பிறந்திருக்கிறாரே.
அந்த
“யூதர்களின் அரசன் எங்கே ?”
ஏரோதின் இதயத்துள்
விரோத முள் தைத்தது.
என் சாம்ராஜ்யத்தின்
எல்லை ஆள
இன்னொரு அரசனா ?
என் தோட்டத்து
மலர்களின்
மாலைகளுக்காய் இன்னொரு கழுத்தா ?
என் வாளும் கேடயமும்
இன்னொரு தோளுக்கா ?
இல்லை,
இதை அனுமதிப்பது ஆகாது.
ஒற்றைக்கதிரவன் நானே.
என்னை எடுத்து
எரியும் குழிக்குள்
எறியும் அவன் யார் ?
நீள் கடலை
உறிஞ்சப் பிறந்த அந்த
பிஞ்சுப் பஞ்சு எங்கே ?
நெஞ்சில் பாய்ந்த ஈட்டியை
சூசகமாய் மறைத்து விட்டு
சாகசமாய் பேசினான் மன்னன்.
தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞரும்
அவசரமாய் அழைக்கப்பட்டனர்
அரசவைக்கு.
மெசியா பிறந்தால்
எங்கே பிறப்பார் ?
அரண்மனையில் எழாத
அழுகுரலுக்குச் சொந்தமான
அரச குழந்தை
எங்கே பிறந்திருக்கலாம்
சொல்லுங்கள்.
மன்னன் வினவினான்.
அவை
ஏட்டுச் சுருளை விரித்தது.
நரைத்த தலையுள்
நுரைத்த அறிவை பிரித்தது.
பெத்லேகேமில் பிறக்கலாம் பிதாமகன்,
இறைவாக்கினர் வாக்குகள்
இறவா வாக்குகள்
அவை அதைத்தான் அறிவிக்கின்றன.
தீய்க்குத் தூபமிட்டன
அவர்களின் தீர்மானம்.
அரசன் அசரவில்லை,
ஞானிகளிடம்
அகத்து அழகு
முகத்தில் தெரியாமல் பேசினான்.
ஞானிகளே.
பெத்லேகேம் பேறுபெற்ற இடம்
அரசனைப் பெற்றதால்
பெருமைப்படப் போகும் இடம்.
செல்லுங்கள்.
அரசனைக்கண்டு வாருங்கள்,
நானும்
ஆராதிக்க ஆயத்தமாகிறேன்.
கண்டு வந்து சொல்லுங்கள்
நான்
கண்டு வணங்க வேண்டும்.
ஞானிகள் விலக,
சூட்சும அரசவை
மெளனத்துள் மண்டியிட்டது.
மூர்க்கத்தனமான ஓர் முடிவுக்காய்
வாள்கள் உறைக்குள்
அசையாதிருந்தன.
அரசவையின் இரகசியங்கள்
அறியாமல்
ஞானிகள் நடந்தனர்.
வானம் வழிகாட்ட
பூமியில் சுவடுகள் நீளமாயின.
குளிரில் உடல்கள் குறுகுறுக்க
இதயம் எதிர்பார்ப்பில்
எரிந்து கொண்டிருந்தது.
இதோ
வால் நட்சத்திரம்
நடப்பதை றுத்தி,
நடப்போரைப் பார்த்தது.
ஞானியர்
ஆனந்தக் கடலின்
அலைகளாய் அலைந்தனர்.
வானத்தின் வால்பிடித்து
ஞாலத்தின் சிறப்பருகே
ஞானியர் வந்தனர்.
o
மாட்டுத் தொழுவம் ஒன்று
மீட்பின் மகனுக்காய்
மடிதிறந்து படி அமைத்திருந்தது.
நாடுகளின் மெத்தைகள்
அரசனுக்காய் விழித்திருக்க,
பெத்லேகேம்
தொழுவமொன்று
தொழுகை பெற்றது.
வைக்கோல் கூட்டுக்குள்
ஓர்
வைரம் வளர்க்கப்பட்டது
வரலாற்றில் இது ஒரே முறை.
வரலாறே இவருக்கு விரல் முனை.
முத்துக்கள் எப்போதுமே
மாளிகைகளில் பயிராவதில்லையே,
சிப்பியில் தானே
அவை சிரம் கொள்கின்றன.
தலை தாழ்த்தித் தரை வீழ்ந்து
வணங்கினர் ஞானியர்.
பொன், தூபம், வெள்ளைப் போளம்
வழங்கினர் ஞானியர்.
பிறந்ததன் பயனாய்
உயர்ந்ததை வழங்கினர்.
கனவுகள் பேசுகின்றன
இரவின் ஜாமம் அதிகரித்தபோது
ஞானியர்க்கு
நித்திரையின் ஆழத்தில்
கனவொன்று கசிந்தது.
‘ஏரோதை சந்திக்காமல் செல்க’ என்று
கடவுளின் தூதர் கட்டளையிட்டார்.
பாதைகள் எல்லாம்
பாதங்களால் தானே
பரிசீலிக்கப் படுகின்றன.
ஞானியர் பாதை மாற்றி பயணம் சென்றனர்.
ஞானியர் சென்றபின்
தேவதூதரால் யோசேப்பு
எகிப்துக்குச் செல்
என எச்சரிக்கப் பட்டார்.
தொழுவத்தில் இருந்த
சிறு சூரியனை எடுத்துக் கொண்டு
எகிப்தின் எல்லைக்கு
மீட்பர் குடும்பம் இரவில் விரைந்தது.
காற்றைக் கொய்யும் கத்தியை
எந்தப் பட்டறை
தீட்ட இயலும் ?
தண்ணீரைக் கொல்லும் வாளை
எந்தப் போர்க்களம்
எடுத்து வர இயலும் ?
ஞானிகளுக்காய் காத்திருந்த
ஏரோது எரிச்சல் கொண்டான்.
ஏமாற்றப் பட்டதைக் கேட்டு
எரிமலையானான்.
அவனுடைய இதயம்
வெறியில் நிறம் மாறியது.
தீப் பொறியாய்
கட்டளைகள் கட்டவிழ்ந்தன.
பெத்லேகேமின் வீதிகளில்,
சுற்றி இருக்கும் நாடுகளில்,
இரண்டு வயதுக்குட்பட்டவரெல்லாம்
இறக்கட்டும் என்றான்.
அரச ஆணை
புரவிகளில் மரணத்தை ஏற்றி
பெத்லேகேமுக்குப் பறந்தது.
முளைவிடத்துவங்கிய செடிகள்
யானை நசுக்கியதாய்
உயிர் புதைத்தன.
சின்ன ரோஜாக்களின் மேல்
நீளமான வாள்கள்
அகழ்வாராட்சி செய்தன.
எல்லா வண்ணப் பூக்களும்
குருதியில் தோய்ந்து
சிவப்பாய் சமாதியாயின.
பெத்லேகேமின் வீதிகளில்
ஒப்பாரிகள்
உச்ச வேகத்தில் உலவின.
எரேமியா இறைவாக்கினர்
என்றோ உரைத்தது
இன்று உறைத்தது.
தீர்க்கத்தரிசனம்
எட்டாம் நாள் விடிந்ததும்
யெருசலேமில்,
பரலோகப் பிரதிதிக்குப்
பூலோகத்தில் பெயர் சூட்டினர்.
இயேசு!!.
பிறக்கும் முன்பே
வானதூதரால் நவிலப்பட்ட
நாமம்.
மனிதரின் பாவங்களை
தீர்ப்பவர்
என்பதே அதன் பொருள்.
மீட்பின் மனிதர் என்பதே
அதன் பொருள்,
மீட்பிற்காய் வந்தவரே
பரம் பொருள்.
தலைப்பேறான தனையனை
ஆண்டவனுக்காய்
அர்ப்பணித்தல்
வழுவாத வழக்கமங்கே.
ஜோடிப்புறாக்களோ,
மாடப்புறாக்களோ பலியிடல்
அர்ப்பணித்ததன் அடையாளமங்கே.
ஆலயத்தில் அமர்ந்திருந்தார்
சீரிய பக்தியின் சின்னமான
சிமியோன்.
மெசியாவின் வருகைக்காய்
மெய்வருத்தும் மெய் பக்தர்.
ஆண்டவரைப் பார்த்தபின்பே
ஆவி அகலும் அகத்தை விட்டென்று
ஆவியானவரால்
அறிவிக்கப்பட்ட
பக்தியில் பித்தர்.
இயேசுவைக் கண்டவுடன்,
சிமியோனின் புருவங்கள்
உருவங்கள் மாறின,
உள்ளுக்குள் ஓராயிரம்
உற்சாக மலைச்சரிவுகளில்
ஒய்யார பனிச்சரிவுகள்.
கரங்களில் கர்த்தரை ஏந்தி,
சிரங்களில் சுரங்களை ஏற்றி
பாடினார் சிமியோன்.
இனிமேல்
சாவு எனக்கு சங்கடமில்லை
வாழ்வை தரிசித்து விட்டேன்.
புறவினத்தாரின் இருளகற்றும்
புது விளக்கை,
பூமிக்காய் பிறந்திருக்கும்
பொது விளக்கை,
என் கண்கள் கண்டுகொண்டன.
அல்லி மலரை அரையில் தாங்கி
முல்லை நிலவில் முகத்துடனே
தங்கத் தாமரை
தரையிறங்கியதாய்
அன்னை மரி அருகிருந்தாள்.
சிமியோன் தாயிடம்
தீர்க்கத் தரிசனம் பரிசளித்தார்.
இதோ,
இப்பாலன்
இஸ்ராயேலரின் வாழ்வை
காயப்படுத்தாமல் சாயப்படுத்துவான்,
பலருடைய
வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும்
வார்த்தை வாள்களால்
தீர்ப்பினைத் தருவார்.
உமது உள்ளத்தையும்
ஓர் வாள் ஊடுருவும்
அப்போது
பலருடைய உள்ளங்களிலிருந்து
எண்ணங்கள் வெளிவரும்.
மரியாள்
புரியாமல் பார்த்தாள்.
அப்போது
ஆலயத்தில் வந்த
ஆசேர் குலத்து அன்னாவும்
மழலையைக் கண்டதும்
மீட்பரென்றறிந்து மகிழ்ந்தாள்.
வானகத்து தேவனை
வாயார புகழ்ந்துரைத்தாள்.
சட்டங்களின் படி
சம்பிரதாயங்கள் செய்தபின்,
கலிலேயா வின் நாசரேத்துக்கு
திருக்குடும்பம்
திரும்பிச் சென்றது.
இயேசு வளர்ந்தார்.
அறிவின் ஆழம் அடைந்து,
ஞானத்தினால் ஞாலம் குடைந்து,
கடவுளுக்கும் மனிதருக்கும்
உகந்தவராய்
உள்ளுக்குள் உரமேறினார்.
மனித வடிவ மனுமகன்
யூத குலச் சட்டங்களை எல்லாம்
அக்குவேறு ஆவேறாய்
அலசித் தேர்ந்தார்.
அறியாத ஒன்றுக்கு
எதிராகப் பாய்தல்
சரியல்ல என்று
சரியாய் கணித்திருந்தார்.
ஞாலத்தில் சிறந்த ஞானம்
பாஸ்கா விழாவில்
பங்கெடுக்க
ஆண்டுக்கொரு முறை
யெருசலேம் யாத்திரை
தவறாமல் நடந்தது.
பாலன் இயேசுவின்
பன்னிரண்டாம் பருவத்தில்,
ஒரு முறை
திருக்குடும்பம்
திருவிழா சென்றது.
திருநாட்கள் முடிந்தபின்
திரும்பியது பயணம்
நாசரேத் நகர் நோக்கி.
இயேசுவோ
யெருசலேம் ஆலயத்திலேயே
இருந்து விட்டார்.
உண்மை அறியாத
பெற்றோர்
பயணிகளோடு பாலகன்
முன்னால் சென்றிருக்கலாம்
என
பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
இரவிலும் இயேசுவைக்
காணாத
பெற்றோர் மனதில்
பயம் விழித்தெழுந்தது.
பயணிகள் கூட்டத்தில்
பாலனைக் காணாமல்
பரிதவித்து,
பதட்டத்தின் படியேறி
யெருசலேம் விரைந்தனர்.
மூன்று நாள் தேடலின் முடிவில்
ஆலயம் ஒன்றில்
பாலனைக் கண்டனர்.
இயேசு அங்கே,
போதகர்களின் போதனைகளின்
விலா எலும்புகளை
உருவிக்கொண்டிருந்தார்,
கேள்விகளால் போதகர்களை
துருவிக்கொண்டிருந்தார்.
பிரமிப்பின் பிரமிடுகளில்
போதகர்கள்
புதைக்கப்பட்டுக் கிடந்தனர்.
சின்ன மொட்டுக்குள்
அறிவின் கட்டுக்களா ?
உள்ளங்கைக்குள்
உலகின் பூட்டுக்களா ?
இந்த நதி,
பிறக்கும் போதே கடலானது
எப்படி ?
இந்த அருவி மட்டும் எப்படி
இலக்கணம் கற்காமல்
உச்சி நோக்கி ஓடுகிறது ?
இத்தனை காலமும்
சாம்ராஜ்யம் ஆண்ட சட்டங்களை
ஓர்
பிஞ்சுக் கரம்
பஞ்சாய் கிழிக்கிறதே !!
இவனென்ன
அறிவு மேகங்களை அடுக்கி வைத்த
அகலமான வானமா ?
இல்லை
பிறக்கும் போதே
செழித்துக் கிடந்த
அடர்த்தியான வனமா ?
வியப்பின் விரல் நுனிகள்
நடு நடுங்க,
பயத்தின் முதல் துளி
அவர்களிடம் பரவியது.
இயேசுவின் தாய்
பாசத்தில் குரல் கொடுத்தாள்.
தனியே நீ
தங்கியதென்ன மகனே,
கண்ணீரின் காலத்தை
தந்ததென்ன மகனே…
பாலன் இயேசு பார்த்தார்,
இது என்
தந்தையின் இல்லமம்மா,
இது தான் இனியென்
விருப்பமான இருப்பிடமம்மா.
எரியும் கவலையில்
திரிந்த மரியாள்
புரிந்தும் புரியாமலும்
பாலனைப் பார்த்தாள்.
தாயின் தடுமாற்றம் கண்ட
நாயகன்
கரம் பற்றி,
நாசரேத் நகர் நோக்கி
நடந்தார்.
சிலகாலம்
தாயுடனே தங்கி,
பிள்ளையின் கடமையை
பிழையின்றி செய்தார்.
ஒளிக்குச் சான்று
ஆதியிலே வாக்கு இருந்தது,
அது
கடவுளோடும் கடவுளாயும்
இருந்தது.
படைப்புகள் எல்லாமே
அவரால் தான்
படைக்கப் பட்டன,
அவருடைய அறிவுக்கு அப்பால்
எதுவும் அறியப்படவில்லை.
மனிதனின் வாழ்வு
அவரோடு வாசம் செய்தது,
அது
மனிதரின்
அக இருட்டுக்களை அழிக்கும்
ஒளியாய் மிளிர்ந்தது.
அந்த ஒளியை வீழ்த்த
இருளின் ஆயுதங்களுக்கு
வலு இல்லாமல்
வீழ்ந்தது.
யோவான் !!!
ஞானத்தின் விளக்குக்கு
ஞானஸ்நானம்
தரும் பாக்கியம் பெற்றவர்.
ஒளிக்குச் சான்று பகரவே
அவர் வந்தார்,
ஆனால் அவர் ஒளி அல்ல.
ஒட்டக மயிராடை
கட்டியவர்,
வார்க்கச்சை ஒன்றை
வரிந்தவர்.
வெட்டுக்கிளிகளை உணவாக்கி
காட்டுத்தேனுடன் கலந்துண்டவர்.
அவருடைய பிறப்பே
ஓர்
அதிசயத்தின் ஆரம்பம் தான்.
செக்கரியா என்னும்
குருவுக்கும்
எலிசபெத்து என்னும்
ஆரோன் வம்ச
மங்கைக்கும் பிறந்தவர் அவர்.
நேர்மையின் வேர்வைக்கு
நிலமாய் இருந்தது
அவர்களின் இதயம்.
வருடங்கள்
தன் முத்திரை குத்திக் குத்தியே
முதுமையை
முத்தமிட்டவர்கள்.
ஓர்
மழலை தன் இடை தொடவில்லையே
எனும்
இடி போன்ற சோகத்தை
மடி மீது குடி வைத்திருந்தனர்.
கடவுளின் தூதர்
செக்கரியாவுக்குத் தோன்றி
இதோ உம்
வேண்டுதலின் தூண்டுதல்
ஆண்டவனை தீண்டியாயிற்று.
ஓர்
உத்தமர் உன் மகனாவார்
வாழ்வுக்கான வழி
நிகழ்கால அழுக்களுக்குள்
அமிழ்ந்து கிடக்கிறது,
அவர் வந்து
பாதையை புலப்படுத்துவார்
பதர்களையும் பலப்படுத்துவார்.
யோக்கியமான அவருக்கு
யோவான் என பெயரிடும்.
என்றார்.
செக்கரியா
சந்தேகத்தில் சஞ்சரித்தார்.
எங்கள்
கல்லறை நோக்கிய பயணத்தில்
எப்படிக்
கருவறைக் கதவு திறக்கும்.
சருகுக்குள் எப்படி
விருட்சம் இருக்கும் ?
அந்தி சாய்ந்த பின்பா
ஆதவன் உதயம் ?
பிந்தி வந்து சேருமா
முதுமைக்கு ஓர் பந்தம் ?
என வினவ.
வாக்கு நம்பாத உமது நாக்கு
இனிமேல் பேசாது.
சொன்னது நடக்கும்,
அதன் பின்பே
உம் வாயில் வார்த்தை பிறக்கும்.
என்றார்.
அப்படிப் பிறந்தவர் தான்
யோவான்,
இயேசுவுவின் பிறப்புக்கு
முன்னுரை சொன்ன
கபிரியேல் தூதராய்
முன்னுரை சொல்லப்பட்டவர்.
இயேசுவின் தாயால்
வாழ்த்துச் சொல்லப் பட்ட
பெருமைக்குரியவர்.
அவர்
இயேசுவுக்கு முன்னோடி.
இயேசு என்னும்
ஒளிக்குச் சான்று பகர்வதே
அவருக்கு அளிக்கப் பட்ட பணி.
உலகை உருவாக்கிய சிற்பியை
உலகமே
அறிந்து கொள்ளவில்லை,
தன்னைத் தீட்டிய ஓவியனை
புறந்தள்ளிய
ஓவியமாய்க் கிடந்தது அது.
ஆனால்,
ஆண்டவருக்கானவர்கள் அவரை
அறிந்து கொண்டு
பரமனில் மீண்டும் பிறந்தார்கள்.
இது
உடல் சார்ந்த பிறப்பு அல்ல,
ஆன்மா சார்ந்த பிறப்பு.
முட்டை உடைத்து
பிறந்த நாகம்,
மீண்டும் சட்டையுரித்தல்
இயற்கை திருப்பம்.
கருவில் பிறந்த மனிதன்
மீண்டும்
திருவில் பிறத்தல்
இறைவன் விருப்பம்.
யோர்தானின் கரையில்
யோவான் விசுவாசம் விதைத்தார்.
விரியன் பாம்புக் குட்டிகளே
சினத்துக்குக் தப்புவிக்க
நீருக்குள் வாருங்கள்.
ஞானஸ்நானமே மீட்பின் முதல் நிலை.
முதல் நிலை இல்லாமல்
திரு நிலை இல்லை.
உங்கள் உள்ளங்களை
உழுதிடுங்கள்,
நல்லெண்ணமெனும் உரமிடுங்கள்,
நற்செயல்களென்னும் விதையிடுங்கள்.
செயல்களற்ற வார்த்தைகள்
செத்தவார்த்தைகள்,
பிணம் தின்னும் கழுகுக்கு
பிணத்துள் வித்தியாசம் பெரிதல்ல.
அடிமரத்துக்கு கோடரி வைத்தாயிற்று
கிளைகளின் கனிகளுக்காய் இனி
உச்சாணிக்கு
ஏணி சாய்க்காதீர்கள்.
திருமகனுக்கு திருமுழுக்கு
யோவானைக் குறிவைத்து
குருக்கள் வந்தனர்,
நீ என்ன மெசியாவா ?
எலியாவா ? இல்லை
தூதர்கள் சொல்லிச் சென்ற
இறைவாக்கினனா ?
அடுக்கடுக்காய் கேள்விகளால்
அடித்துப் பார்த்தனர்.
யோவான் மறுத்தார்,
நான் யாருமல்லேன்,
ஆதியின் வார்த்தை
மனித அவதாரத்தில் வந்துள்ளது,
நான் வெறும்
சான்று பகர்பவனே,
சரித்திரம் படைப்பவனல்ல.
என் தண்ணீர் திருமுழுக்கில்
நீங்கள்
தடுமாறிப்போகிறீர்களே,
நீரூற்றி நிறம் கொடுப்பவன் நான்.
நெருப்பூற்றி முழுக்கு கொடுப்பவர்
எனக்குப் பின்னால் வருகிறார்.
நான் செய்தியாளன்.
செருக்குற்றோரைச் சிதறடிக்கும்
அவர் சிறப்புக்கு முன் அல்ல,
அவர் செருப்புக்கு முன்னும்
நான்
மிகச் சிறியவன் !
அவருக்கு
பதர்களோடும் கதிர்களோடும்
பரிச்சயம் இருக்கிறது,
பத்தாயத்துக்கு கோதுமையை அனுப்பி
பதரின் தலைக்கு தீயிடுவார்.
நீ கதிராய் இருந்தால்
அவர் ஒளியில் கனிதருவாய்.
வைக்கோலாய் இருந்தால்
எரிந்துபோவாய்.
வார்த்தைகள் ஒவ்வொன்றும்
வீரியத்துக்குப் பிறந்த
சுருள் வாளாய்,
கூட்டத்தின் நெஞ்சம் சென்று
தஞ்சம் கொண்டது.
இயேசுவும் வந்தார்,
யோவானிடம்
திருமுழுக்கு பெற.
வரம் தரும் பரமன்
வரம் வேண்டி வந்ததாய்
தடுமாறினார் யோவான்.
கடவுளே
நீர் விண்ணகத்தின் விளக்கு
என்னிடம்
திருமுழுக்கு பெறுவது
இழுக்கு உமக்கு.
நான் வெறும்
மனித அழுக்கு என்றார்.
இயேசு புன்னகைத்தார்.
என்
பணி வாழ்வை
நீர் தான் துவக்க வேண்டும்
நீரால் துவக்க வேண்டும்
என்றார்.
யோவான்
பிரபஞ்ச பாக்கியம் பெற்றார்.
இயேசு
ஞானஸ்நானம் பெற்றார்.
திடீரென்று,
ஒற்றையாய் இருந்த வானம்,
முதுகு கிழிய,
வெள்ளைப்புறா வடிவில்
பரிசுத்த ஆவி கீழிறங்க,
“இவரே என் மகன்,
இவரில் நான் பூரிப்படைகிறேன்”
வார்த்தைகள் வான வாயில் புறப்பட,
இயேசு அடையாளப்படுத்தப்பட்டார்.
தூய ஆவி
புறாவின் வடிவில்
இயேவில் இறங்க
தண்ணீருக்கே தலைசுற்றியது.
மொத்த ஜனமும்,
மொத்தமாய் அதிர்ந்தது,
கால்கள் வலுவிழக்க
பூமியில் முழங்கால் படியிட்டது.
உன்னத உரையாடல்.
செபம்,
அது கடவுளோடு கொண்ட
உன்னத உரையாடல்.
செபம்,
அது
சூல் கொண்ட சோகங்களை
கால் கொண்டு நசுக்குமிடம்.
செபியுங்கள்,
உள்ளுக்குள் உற்சாகம்
அலையாய் புரண்டாலும்,
நெஞ்சுக்குள் ஓர் சோகம்
மலையாய் அரண்டாலும்,
கண்களை மூடி செபியுங்கள்.
செபம்,
வேண்டுதல்களின் சுருக்குப் பைகளை
விரிக்கும் இடமல்ல,
அது
இதயத்தின் சுருங்கிய தசைகளை
நிமிர்க்கும் இடம்.
சோகத்தின் தள்ளுவண்டிகளை
மட்டுமே
செபத்தின் சக்கரங்கள்
தூக்கிச் சுமப்பதில்லை,
அது சந்தோஷப் தோணிகளுக்கான
துடுப்பையும் தயாரிக்கும்.
செபம்,
அது ஓர் உற்சாகமான உணர்வு.
நாளைய வாழ்வை
நெறிப்படுத்தும் நிறைவு.
இயேசு சொன்னார்,
மண்ணுலகில்
ஒரு வேண்டுதலுக்காய்
மனமொத்து
சில இதயங்கள் செபித்தால்
அது வழங்கப்படும்.
பிறருக்காக வாழும்
வாழ்வின் அடித்தளம்
இயேசுவின் போதனையில்
புதுத் தளம்.
சாதனைக்கான சோதனைக்காலம்
இயேசுவும் செபித்தார்.
நாற்பது நாட்கள் நோன்பிருந்தார்.
சோதனைகளின் காலுடைத்து
வருபவர்களால் தான்
வேதனைகளின் சங்குடைக்க இயலும்.
இயேசுவும் சோதிக்கப்பட்டார்.
அலகையினால்.
நாற்பது நாள் நோன்பில்
இயேசு,
பசியால் உண்ணப்பட்டார்.
அலகை சொன்னது.
நீதான் தேவ மகனாயிற்றே !
இதோ கல்,
இந்தக் கல் கொண்டு
அப்பம் செய்,
அப்பம் மெல் பசியை வெல்.
புன்முறுவலோடு பதிலுரைத்தார் பரமன்.
அப்பத்தினால் மட்டுமே
மனிதன் வாழ்வதில்லை,
ஆகாரங்கள் உடனடித் தேவையின்
ஊன்றுகோல்கள்.
வாழ்வுதரும் வார்த்தைகளே
ஊற்று நீர்.
வயிற்றுக்கு மட்டுமாய் வாழ்வது வாழ்வல்ல,
மீட்புக்காய் வாழ்வதே வாழ்வு.
அகல மறுத்த அலகை சொன்னது,
இதோ,
உலகனைத்தும் உனக்குத் தருவேன்,
என்னை வணங்கு.
நீ காணும்
நீள் வளங்கள் எல்லாம்
என் அரசவையின் பொக்கிஷங்கள்.
மெலிதாய் சிரித்து
மனுமகன் சொன்னார்.
உன்
கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே
வணங்கு என்பதே இறை வாக்கு.
இவ்வுலகின் செல்வங்கள்
என்னை
எள்ளளவும் வெல்லாது,
உன் ஆசை காட்டும் வேலை
என்னிடம் செல்லாது.
முயற்சியில் தளரா அலகை,
ஆலய உச்சி ஒன்றில் ஆண்டவனை
அழைத்துச் சென்றது.
இங்கிருந்து கீழே குதி,
நீ வான் ஆள்பவர் என்றால்
வானதூதர் உன்னை தாங்கிக் கொள்வர்.
இயேசு அலகையை நோக்கினார்,
உன்
ஆண்டவரைச் சோதியாமல்
அகன்று போ.
கண்டிப்பின் வார்த்தைகள்
நொண்டியடிக்காமல் வந்தன.
தோல்வியின் பாரம் முதுகில் ஏந்தி
அலகை அகன்றது.
சோதனைகள்.
வாழ்வின் மீது விழும்
முரட்டுத்தனமான அடி.
சோதனையின் அழைப்பை ஒதுக்கி
பிழைத்து வருவதே பெருமை.
ஆசைகளின் கூடாரத்துள்
அசை போட்டுக் கிடந்தால்
கால்நடைகளுக்கும்
மானிடனுக்கும் வித்தியாசம் ஏது ?
மனித வாழ்வு,
சோதனைகள் மோதினால்
இலட்சியங்களின்
இலக்குகளை இடம் மாற்றி வைக்கும்.
வயிற்றுக்கான சோதனைகளில்
சில சமயம்,
பொருளுக்கான சோதனைகளில்
பல நேரம்,
புகழுக்கான சோதனையில்
பெரும்பாலும்
என மனிதன்
இடறி விழாத இடங்கள் குறைவே.
மூன்று சோதனைகள்,
மூவொரு இறைவனின் முன்னேயும்
முந்தி விரித்தது,
அவரோ சூரியன் !
மெழுகுக் கால்கள் அவரை
மிதிக்கப் பார்க்கின்றன !.
எரிந்து போவோம் என்பதை
அறியும் அறிவும் இல்லாமல்.
இயேசு வென்றார்.
இயேசுவாய் நின்றார்.
பணிவாழ்வுக்காய் பயணியுங்கள்
கலிலேயக் கடல்
கரைகளில் ஈரக்காற்றை இறக்கிவைக்க
அலைகளை
அனுப்பிக் கொண்டிருந்தது.
அங்கே இருவர்,
வலைகளை அனுப்பி
மீன்களை இழுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவர் பேதுரு,
மற்றவர் அந்திரேயா.
இயேசு
அவர்களைப் பார்த்தார்.
வாருங்கள்,
வலைகளோடும் மீன்களோடும்
வாழ்வோரே வாருங்கள்.
இன்னும் எத்தனை காலம் தான்
நீருக்குள் மூழ்கும்
மீன்கள் பின்னே அலைவீர்கள்,
மீன்கள் பிடித்தது போதும்
மீண்டுமிருக்கும் வாழ்வில்
மனிதர் பிடிக்கலாம் வாருங்கள்.
ஒரே அழைப்பு.
மீனவர்கள் வானவரை
பின்தொடரத் துவங்கினார்கள்.
கடலின் மணல் கைகளில்
கால் சுவடுகள் பதித்து
நடந்து போகும் வழியில்
இன்னும் இருவரைக் கண்டார்.
அவர்கள்,
செபதேயுவின் மகன் யாக்கோபு,
அவரது சகோதரன் யோவான்.
அவர்கள்
வலைகளின் பழுதுகளை
தந்தையோடு அமர்ந்து
திருத்திக் கொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களையும் அழைத்தார்.
வாருங்கள்,
பழுதுகள் வலைகளில் அல்ல
மனங்களின் நிலைகளில்.
சீரமைப்போம் புது
பாரமைப்போம் வாருங்கள்.
தந்தையிடம் வலையை விட்டுவிட்டு
தனையர் இருவரும்
இயேசுவின் பணிக்குள்
இணைந்து கொண்டார்கள்.
அடுத்த சீடருக்கான அழைப்பு
கப்பர்நாகூமில் வந்தது.
வரிவசூலிக்கும் மத்தேயு
வசவுகளை
வசூல் செய்து கொண்டிருந்தபோது
அவருக்கு வந்தது
வாழ்வுக்கானதை வசூலிக்கும் அழைப்பு.
நாணயங்களை சேகரிக்கும் அவர்
நாணயத்தை சேகரிக்க
அழைப்புக்கு அடிபணிந்தார்.
பிலிப்பு,
பார்த்தலமேயு,
தோமா,
அல்பேயுவின் மகன் யாக்கோபு,
ததேயு,
சீமோன் மற்றும்
யூதாஸ் இஸ்காரியோத்து
இவர்களும் அழைக்கப்பட்டனர்.
தனி வாழ்வு சிந்தனைகள்
இனி வேண்டாமென்று,
சுய நல வாழ்க்கையை
கடலுக்குள் கரைத்து விட்டு
அழைக்கப்பட்டவர்
கடவுளின் கரம் பிடித்தனர்.
இயேசுவின் அழைப்பு
அடிமட்ட மக்களின்
வாழ்வுக்கான நெம்புகோலாய் விழுந்தது.
மதவாதிகளை
மதிக்காமல்,
சட்ட வல்லுனர்களை
சட்டை செய்யாமல்,
மாடமாளிகைகளுக்கு
தூது அனுப்பாமல்
ஏழைகளுக்காய் எழுந்தது.
இருக்கைகளின் தேடல்களை
வெறுத்து
இரக்கத்தின் தேடல்களையே
இறைமகன் நடத்தினார்.
வலுவாக்கும் அறிவுரைகள்
தேர்ந்து கொள்ளப்பட்டவர்களை
பண்ணையாளர்களின்
பண்ணைக்கு அனுப்பாமல்,
சிதறிப் போன
ஆட்டுக் கூட்டத்தை சேகரிக்கவே
இயேசு அனுப்பினார்.
இறை வல்லமையை
அவர்களுக்குள்
குறைவின்றி நிறைத்து.
செல்லுங்கள்,
ஓநாய் கூட்டத்து இடையே
செம்மறிகளை
அனுப்புகிறேன்,
சங்கடப் படாதீர்கள்.
சட்டங்களின் ஈட்டிகள் உங்களை
வழியில் தடுக்கும்,
சாட்டைகள் உங்களை
தொழுகைக் கூடத்தில் நிறுத்தி
தோல் கிழிக்கும், வருந்தாதீர்கள்.
என்ன பேசுவதென்று
பதட்டம் வேண்டாம்,
பரிசுத்த ஆவி பேசுவார்,
தயாரித்து வாசிக்கும் தளம் அல்ல
அந்த களம்.
உங்கள் தகுதியை தீர்மானிக்கும்
தளமுமல்ல.
நம் தந்தையின் வார்த்தைகள்
பரவும் இடம்.
அவசியமான போது
அவசியமானவை அருளப்படும்.
அச்சத்தை அவிழ்த்து விட்டு
ஆவியை அணிந்து கொள்ளுங்கள்.
காசுகளைச் சேகரித்து
எடுத்துச் செல்லவேண்டாம்,
உங்கள்
பணிக்கு உணவு
நல்லோரால் நல்கப்படும்.
வெளிப்படாமல்
மூடியிருப்பதும்,
அறிய முடியாதபடி
மறைந்திருப்பதும் எதுவும் இல்லை.
அறிவியுங்கள்,
உங்கள் காதுகளுக்கு நான்
சொல்வதை,
ஊரின் காதுகளுக்குள்
ஊற்றுங்கள்.
என்னையும்,
என் பொருட்டு உங்களையும்
ஏற்றுக் கொள்பவர்களை
நான்
இறுதி நாளில் உறுதியாய் ஏற்பேன்,
மறுதலிப்பவர்களையோ
நான்
மன்னிக்கவே மாட்டேன்.
உங்களுக்கு என் பெயரால்
ஒருகுவளை
தண்ணீர் கொடுப்பவன் கூட,
கைம்மாறு பெறத் தவறான்.
மனங்களைத் தயாரித்த
இயேசு,
அவர்களை
அறுவடைக்காய் அனுப்பினார்,
இதய அறுவடைக்காய்.
very simple language . so nice
carry on..xavier.
LikeLike
//very simple language . so nice
carry on..xavier.//
வருகைக்கும், கருத்துக்கும், மனமார்ந்த நன்றிகள்
LikeLike
Dear brother xavi,
Thanks so much . i am in rejoice.
So nice your writting …
இறுதி வரை
உறுதியில் நில்லுங்கள்.
உறுதி உடையும் நிலை
இறுதி எனக் கொள்ளுங்கள்.
என்றார்.
Long year before i has been fan of vairamutthu.Now brother and disciple of jesus of nazereth.I think you will make me fan of you as soon.
Dear brother your writting is so simple and strong.but brother in some words has spelling mistake.could you please permit me for point the words which has letter mistake.Because brother we should be perfect as father is in heaven perfect.
And Dear brother if u have time please brother i request to youwrite the books “apostle”,”1john,2…” … and revelation.
Thanking you so much brother xavier.
sorry for writting in english.
LikeLike
நன்றி இளங்கோ.. எழுத்துப் பிழைகளைச் சரிசெய்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி..
LikeLike
sorry for spelling mistake =).
i has been fan of vairamutthu should be i had been fan of vairamutthu but not now.
thanks brother
LikeLike
நன்றி இளங்கோ…
LikeLike