முடிவல்ல துவக்கம்

jesus_200

நல்ல விதைகள் எப்போதுமே
பயன் தராமல் போவதில்லை,

இயேசுவின் மரணம்
புதைப்பல்ல,
விதைப்பு.

மனுக்குலத்தின் மீட்பு
மண்ணுக்குள் மரணிக்குமா ?
இல்லை
அது தரயில் பயணிக்கும்.

சதிகளின் சட்டங்கள்
உடலை வருத்தின,
நீதியின் தேவன்
புது உயிரை வருத்தினார்.

நிரந்தர மீட்பைத்
மக்களுக்குத் தரவே
மீட்பரின் உயிர்ப்பு வரமானது.

வரலாறுகள் எல்லாம்
நரை முடி தடவ,
புது வரலாறு ஒன்று
புதிதாய் இதோ இங்கே
நிகழ்ந்தது.

இது,
ஏழைகளுக்காய் விழுந்த
தங்கத் துண்டு,

மக்கள் தொண்டு
கொண்டு
வாழ்வை வென்றவரின்
ஓர்
இறவாக் காவியம் இது.

இயேசு,
மனிதராய் வந்ததால்
மனுமகனானவரல்ல,
மனுமகனாகியதால்
மனிதனாய் வந்தவர்.

எனவே
சாவு அவருக்கு
சாய்வு நாற்காலி.
சாவு அவருக்கு இன்னொரு ஓய்வு,
மரணம் அவருக்கு
விசுவாச ஊழியன்.

இதோ,
இந்த மகத்துவ சகாப்தம்
இங்கே முற்றுப் பெறவில்லை…
ஆரம்பமாகிறது.

இது
மண்ணில் விழுந்து
மனதில் முளைக்கும் விதை.

கேட்கச் செவியுள்ளவன்
கேட்கட்டும்.

 

 

jesus_098

 

 

 

விசுவசியுங்கள்,
நம்பிக்கையில்லாமல் செய்யும்
செயல்கள் எல்லாம்
நடுக்கடலில் விழுந்த
துடுப்பிழந்த படகு தான்.

விசுவசியுங்கள்
வாழ்வடைவீர்கள்
நம்புங்கள் மீட்படைவீர்கள்.